

முருகன் என்றால் அழகு. தமிழ் கடவுளான முருகப்பெருமானுக்கு ஆறுபடை வீடுகள் இருப்பது போல பிரசித்தி பெற்ற 16 திருக்கோலங்கள் உள்ளன. முருகனின் 16 திருக்கோலங்களையும் அவற்றை தரிசிப்பதால் கிடைக்கும் பலன்கள் குறித்தும் இப்பதிவில் காண்போம்.
1: ஞானசக்திதரர்
முருகப்பெருமானின் ஆறுபடை வீடுகளில் ஐந்தாம் வீடான திருத்தணியில் எழுந்தருளக்கூடிய முருகப்பெருமானின் வடிவத்திற்கு 'ஞானசக்திதரர்' என்று பெயர். இவரை வழிபடுவதால் நல்ல ஞானமும், நினைத்த காரியங்களுக்கு வெற்றியும் கிடைக்கும்.
2: கந்தசாமி
பழனி மலை மீது நின்ற கோலத்தில் பாலதண்டாயுதபாணியின் திருவடிவத்தில் காட்சி தருவது 'கந்தசாமி' வடிவமாகும். இந்த வடிவத்தை வழிபடுவதால் சகல காரியங்களும் சித்தியாகும்.
3: ஆறுமுக தேவசேனாபதி
ஈரோடு சென்னிமலையில் முருகன் கோயிலில் 'ஆறுமுக தேவசேனாபதி' என்ற வடிவத்தை பக்தர்கள் தரிசிக்கலாம். இந்த முருகனை வழிபடுவதால் மங்களங்கள் உண்டாகும்.
4: சுப்பிரமணியர்
நாகப்பட்டினம் திருவிடைகழியில் 'சுப்பிரமணியர்' திரு உருவில் அருள்கிறார் முருகன். சுப்பிரமணியனை வணங்கினால் வினைகள் விலகி, ஆனந்தத்தை அருள்வார்.
5: கஜவாகனர்
மேல்பாடி, திருமருகல், சிதம்பரம் நடராஜர் கோயில் ஆகிய கோயில் கோபுரங்களில் யானை மீது அருளக்கூடிய கஜவாகனர் முருகப்பெருமானை தரிசிக்க முடியும். இவரை வழிபட்டு வர, துன்பங்கள் விலகி நற்பலன் கிடைக்கும்.
6: சரவணபவர் திருப்போரூர்
திருப்போரூர் உள்ளிட்ட திருத்தலங்களில் 'சரவணபவர்' திருவடிவை நாம் தரிசிக்க முடியும். இவரை தரிசித்து வர மங்கலங்களை அருள்வார். கொடை, ஒலி, சாத்வீகம், வீரம் உள்ளிட்ட நற்குணங்களை அருளக்கூடியவர்.
7: கார்த்திகேயன்
கார்த்திகேயரை வழிபடுவதால் சகல சௌபாக்கியங்கள் பெறலாம். குறிப்பாக கார்த்திகை நட்சத்திரத்தில் வழிபட்டால் மேலும் விசேஷமானது. இவரை கும்பகோணம் கும்பேஸ்வரர் கோயிலும், தாராசுரம் ஐராவதீஸ்வாரர் கோயிலிலும் தரிசனம் செய்ய முடியும்.
8: குமாரசாமி
குமாரசாமி முருகனை வழிபடுவதால் ஒருவரின் ஆணவம் பொடிபடும். கங்கை கொண்ட சோழபுரம் சிவாலயத்தில் குமாரசாமி திருஉருவத்தை பஞ்சலோக விக்கிரகமாக தரிசிக்கலாம்.
9: சண்முகர்
திருச்செந்தூர்க் கோயிலில் சண்முகர் திருவுருவில் காட்சி தருகிறார். இவரை வழிபட சிவ பார்வதியை வணங்கிய பலன் கிடைக்கும்.
10: தாரகாரி
முருகனுக்கு `தாரகாசுரன்' என்னும் அசுரனை அழித்ததால் இந்த திருப்பெயர் வந்தது. இவரை வழிபட்டு வர உலக மாயைகளிலிருந்து விடுதலை தருவார். தாரகாரி உருவத்தை விராலி மலையில் உள்ள முருகன் கோவிலிலும் தரிசிக்கலாம்.
11: சேனானி
பகை, பகைவர்கள், பொறாமையை அழித்து நல்ல எண்ணத்தை அருளக்கூடியவர் முருகனின் 'சேனானி' திருவுருவம். இவரை தேவிகாபுரம் ஆலயத்தில் தரிசிக்கலாம்.
12: பிரம்மசாஸ்தா
முருகனின் பிரம்மசாஸ்தா திருவுருவத்தை வணங்கினால் கல்வி, கேள்வியில் சிறப்படையலாம். பிரம்மசாஸ்தா திருவுருவை காஞ்சிபுரம் குமரகோட்டம், ஆனூர், சிறுவாபுரி, பாகசாலை உள்ளிட்ட இடங்களில் பிரம்மசாஸ்தா திருவுருவை தரிசிக்கலாம்.
13: வள்ளிகல்யாணசுந்தரர்
திருமணத் தடைகளை அகற்றக்கூடிய வள்ளிகல்யாணசுந்தரர் திருவுருவை திருப்போரூர் முருகன் கோயில் தூண் ஒன்றில் தரிசிக்கலாம்.
14: பாலசுவாமி
திருக்கண்டியூர், திருச்செந்தூர், ஆண்டாள் குப்பம் ஆகிய கோயில்களில் பாலசுவாமி திருவுருவத்தை தரிசிக்க முடியும். இவரை தரிசித்தால் உடல் அங்கக் குறைபாடுகளை அகற்றுவார். அதே போல் தீராத நோய் விலகும்.
15: சிரவுபஞ்சபேதனர்
திருநெல்லிக்கா, திருக்குறங்குடி, திருநளிபள்ளி ஆகிய இடங்களில் சிரவுபஞ்சபேதனர் திருவுருவம் பார்க்க முடியும். இந்த இறைவனை வழிபட்டால் துன்பங்கள் விலகும். மனச்சஞ்சலம் நீங்கும்.
16: சிகிவாகனர்
சிகி என்றால் மயில். மயில் வாகனத்தை கொண்ட தெய்வம் முருகன். மயில் மீது அமர்ந்து அழகாக காட்சி தருபவர் சிகிவாகனர். இவரை வணங்கி வந்தால் மகிழ்ச்சி நிறைந்த வாழ்வைத் தருவார்.
ஒவ்வொருவரும் தன்னுடைய வாழ்நாளில் இந்த 16 முருகன் திருக்கோலங்களை தரிசிக்க, முக்தி கிடைக்கும்.