Kanda Shashti Kavasam
lord murugan temple

தெய்வீக மணம் கமழும் 'கந்த சஷ்டி கவசம்' உருவான கதை தெரியுமா?

Published on

நிறைய வீடுகளில் அதிகாலை எழுந்ததும் ஒலிக்கும் கந்த சஷ்டி கவசம் தெய்வ மணத்தை அந்த இடம் முழுவதும் பரவச்செய்யும். ‘சஷ்டியை நோக்கச் சரவண பவனார், சிஷ்டருக்குதவும் செங்கதிர் வேலோன்’ என்று தொடங்கும் கந்த சஷ்டி கவசம் நம் மனதில் உள்ள பயத்தை போக்கி நமக்கு புது தெம்பை அளிக்கும். அத்தகைய சிறப்பு வாய்ந்த முருகப்பெருமானின் கந்த சஷ்டி கவசம் உருவான கதை தெரியுமா? அதைப்பற்றி விரிவாக இந்தப் பதிவில் காண்போம்.

பாலதேவராயர் சுவாமிகள் தீவிரமான முருகபக்தர். ஒருசமயம் அவருக்கு கடுமையான வயிற்றுவலி ஏற்படுகிறது. எவ்வளவோ சிகிச்சைகள் எடுத்தும் அவருடைய கடுமையான வயிற்று வலி தீரவில்லை. இதனால், மனஉளைச்சலுக்கு ஆளான பாலதேவராயர் கடலில் விழுந்து தற்கொலை செய்துக் கொள்ளலாம் என்று எண்ணி திருச்செந்தூர் வருகிறார்.

அவர் வந்த சமயம் திருச்செந்தூரில் கந்த சஷ்டி விழா ஆரம்பமாகியிருந்தது. கந்த சஷ்டி விழா முடிந்ததும் தற்கொலை செய்து கொள்ளலாம் என்று எண்ணிய பாலதேவராயர் கந்த சஷ்டி விரதம் இருக்க ஆரம்பிக்கிறார்.

முதல் நாள் திருச்செந்தூர் கடலில் நீராடிவிட்டு முருகப்பெருமானை தரிசித்துவிட்டு கோவில் மண்டபத்தில் அமர்ந்து கண்களை மூடி தியானத்தில் இருக்க ஆரம்பிக்கிறார். அவருக்கு முருகப்பெருமான் காட்சி தந்து அருள் புரிந்ததோடு மட்டுமல்லாமல் தனக்காக சஷ்டி கவசம் பாடும் திறனையும் அவருக்கு அளித்தார்.

அடுத்த நொடியே பாலதேவராயர் மனதில் பக்தி வெல்லம் பெருக்கெடுத்து ஓடியது. திருச்செந்தூர் திருத்தலத்திற்கான சஷ்டி கவசத்தை முதன் முதலாக எழுதி முடித்தார். அடுத்த ஐந்து நாட்களும் முருகப்பெருமானின் அறுபடை வீடுகளான திருப்பரங்குன்றம், பழனி, சுவாமிமலை, திருத்தணி, பழமுதிர்ச்சோலை திருத்தலங்களுக்கான சஷ்டி கவசத்தை இயற்றி முடித்தார்.

இதையும் படியுங்கள்:
கோலாரம்மன் கோவிலில் மறைந்திருக்கும் மர்மங்கள்!

Kanda Shashti Kavasam

அதன் பிறகு அவரை வெகுநாளாக வாட்டி வந்த வயிற்று வலி காணாமல் போனது. இது முருகப்பெருமானின் திருவிளையாடல் என்று உணர்ந்த பாலதேவராயர் கண்ணீர் மல்க முருகப்பெருமானை வேண்டி தொழுதார்.

சஷ்டி கவசத்தை ஒருவர் நாள்தோறும் பாராயணம் செய்து வந்தால், நோய்கள் அண்டாது, மனம் வாடாது குறைவின்றி பதினாறும் பெற்று பெறு வாழ்வு வாழலாம். நவக்கிரகங்கள் மனம் குளிர்ந்து நன்மை செய்யும், குழந்தை பேருக்கிட்டும். இன்னும் எண்ணற்ற பலன்கள் கிடைக்கும்.

logo
Kalki Online
kalkionline.com