ஆன்மீகக் கதை: அனுமன் போட்ட சொடக்கு!

ராமரின் திருவிளையாடல் மூலம் அனுமனின் சொல்லாமலே புரியும் சேவை, எதிர்பார்ப்பில்லாத பக்தியின் ஆழம் வெளிப்பட்ட ஆன்மீகக் கதை
Hanuman-devotion
Hanuman-devotioncredit AI image
Updated on
deepam
deepam

இராமாயணத்தில் பக்தியின் உச்சம் எது என்று கேட்டால், தயக்கமின்றி எல்லோரும் அனுமன் பெயரைத்தான் சொல்வர். அத்தகைய அனுமனின் பக்தியை (Hanuman-devotion) உலகிற்கு வெளிச்சம் போட்டுக் காட்ட, இராமரே ஒரு திருவிளையாடலை நடத்தினார். வனவாசம் முடிந்து, இராவணனை வீழ்த்தி, சீதையுடன் அயோத்திக்குத் திரும்பிய இராமபிரான் அரசாட்சியை ஏற்றார். அயோத்தி நகரமே ஆனந்தத்தில் மூழ்கியது. அதே சமயம், அனுமனும் அயோத்தியில் தங்கி, ஒரு கணமும் பிரியாமல் இராம சேவை செய்தார்.

காலை இராமர் விழிக்கும் முன்பே அனுமன் தயாராகிவிடுவார்; அவர் உறங்கும் வரை அருகிலேயே இருப்பார். இராமரின் எண்ணத்தை முன்கூட்டியே உணர்ந்து, தேவையைச் சொல்லாமலேயே புரிந்து நிறைவேற்றுதல் - எந்த எதிர்பார்ப்பும் இல்லாத இத்தகைய சேவை அனுமனின் இயல்பாக இருந்தது. இதைக் கண்ட சீதாதேவி, இலக்குவன், பரதன், சத்ருக்கனன் அனைவரும் வியந்தனர்.

ஒருநாள் இராமர் அனுமனின் சேவையைப் பாராட்டினார். அதைக் கேட்ட சீதாதேவிக்கும் இராமரின் தம்பிகளுக்கும் ஒரு எண்ணம் தோன்றியது. "நாமும் அனுமனைப் போல் ஒரு நாளாவது சேவை செய்ய வேண்டும்" என ஆசைப்பட்டு இராமரிடம் அதற்கான அனுமதி கேட்டனர். இராமரும் புன்னகையுடன் சம்மதித்தார்.

சேவைகளின் பட்டியலை எழுதினர். காலை முதல் இரவு வரை செய்ய வேண்டிய நுண்ணிய வேலைகள் அனைத்தையும் ஒரு பட்டியலாக எழுதி இராமனிடம் காண்பித்தனர். "இதில் அனுமனின் பெயர் எங்கும் இல்லை" என்று அவர்கள் கூறினர். "ஒருவேளை ஏதேனும் சேவை விடுபட்டுப்போனால் அதை அனுமன் செய்யட்டுமா?" என்று சிரித்தபடி இராமர் கேட்டார். அவர்களோ, "அப்படி ஒரு நிலை வராது" என்று உறுதியாகக் கூறினர்.

மறுநாள் அனுமனுக்கு ஓய்வு. "ஒருநாள் நீ ஓய்வு எடுத்துக் கொள்" என்று அனுமனிடம் கூறினார் இராமர். ஆனால் அனுமனோ, இராமபிரான் வாசலில் அமர்ந்து 'இராம ஜெபம்' செய்து கொண்டிருந்தார். அவரின் கண்கள் மட்டும் இராமபிரான் சேவைகள் சரியாக நடக்கிறதா என்பதைக் கண்காணித்துக் கொண்டிருந்தன. பகல் பொழுது சிறப்பாகக் கழிந்தது. காலை முதல் மாலை வரை சீதாதேவியும் தம்பிகளும் எந்தக் குறையும் இல்லாமல் அனைத்து சேவைகளையும் செய்தனர். அவர்களுக்கு அளவில்லாத சந்தோஷம்; இராமருக்கு அருகில் சேவை செய்வது பேரானந்தமாக இருந்தது.

இரவு வந்தது. இராமர் உறங்கச் செல்லும் நேரம் வந்தபோது, சீதாதேவி தாம்பூலத்துடன் வந்தார். அப்போது இராமர் வாயைத் திறந்தார்; ஆனால் மூடவே இல்லை. பேசவும் இல்லை, அசையவும் இல்லை. சீதை அதிர்ச்சியடைந்தார்.

உடனே இலக்குவனும் பரதனும் வந்து அரண்மனை மருத்துவரை அழைத்து வந்தனர். முனிவர்களும் வந்து பரிசோதித்தனர். "எந்த நோயும் இல்லை" என்று சொல்லிவிட்டு அவர்கள் சென்றனர். பின்னர் வசிஷ்டர் வந்து முயற்சி செய்தார்; எதுவும் பலிக்கவில்லை. உடனே அவர் தியானத்தில் அமர்ந்து, "இந்த நிலைக்குக் காரணம் அனுமன் தான்" என்று கூறினார்.

அனுமனை அழைக்க எல்லோரும் ஓடினர். அனுமன் துள்ளிக் குதித்து உடனே ஓடி வந்தார். அவர் வந்தவுடன் என்ன செய்தார் தெரியுமா? இராமரின் வாய்க்கு நேரே ஒரு சொடக்கு போட்டார். இராமரின் வாய் உடனே மூடிக்கொண்டது. பிறகு உண்மை வெளிப்பட்டது.

இதையும் படியுங்கள்:
ஆன்மீகக் கதை: ராமனின் அன்பால் வசியப்பட்ட வாலி!
Hanuman-devotion

இராமர் மெதுவாகப் புன்னகையுடன் கூறினார்: "எனக்குக் கொட்டாவி வந்தால் அனுமன் தான் சொடக்கு போடுவான். அது உங்கள் யாருக்கும் தெரியவில்லை. அந்தச் சேவை உங்கள் பட்டியலில் இல்லை..." என்றார்.

அப்போதுதான் அனைவருக்கும் உண்மை புரிந்தது. அனுமன் சேவை என்பது வெறும் செயல் மட்டுமல்ல; அது உள்ளம் அறியும் பக்தி, சொல்லாமலே புரியும் அன்பு, எதிர்பார்ப்பில்லாத அர்ப்பணிப்பு, உயிரோடு கலந்த பக்தி. அனைவரும் அனுமனை வணங்கிப் பாராட்டினர்.

இராமரின் திருவிளையாடல் ஓர் உண்மையை உணர்த்தியது: அனுமன் இராமருடன் உடலால் மட்டுமல்ல, ஆத்மாவாலும் இணைந்தவர். தன் திருவிளையாடல் மூலம் அனுமனின் பக்தியை உலகம் உய்த்துணரச் செய்தார் இராமர்.

logo
Kalki Online
kalkionline.com