

அசாம் மாநிலத்தில் கவுகாத்தியிலுள்ள நிலாச்சல் என்ற குன்றின் மீது அமைந்துள்ளது இந்த காமாக்யா கோவில். இது மிகவும் பழமையான கோவிலாகும். 51 சக்தி பீடங்களில் முதன்மையாக கருதப்படுகிறது. இந்த கோவில் மக்களின் விருப்பங்களை நிறைவேற்றும் கோவிலாகவும் மற்றும் யோனியை வழிபடும் கோவிலாகவும் உள்ளது.
சிவபெருமான் சக்தியின் உடலை வைத்து தாண்டவம் ஆடிய போது சக்தியின் 51 துண்டுகளில் சக்தி தேவியின் யோனி பகுதி விழுந்த இடமாக கருதப்படுகிறது. இங்கு அம்பு பாச்சி மேளா முக்கிய திருவிழாவாக உள்ளது. பெண்மையின் ஆற்றல் மற்றும் படைப்பு சுழற்சியை குறிக்கும் ஸ்தலமாகும். கருவறையில் சிலை இல்லை. ஆனால் அதற்கு பதிலாக பாறையில் யோனியின் உருவம் அமைய பெற்றுள்ளது.
ஒவ்வொரு ஆண்டும் ஜூன் மாதம் அம்மனின் மாதவிடாய் சுழற்சியை கொண்டாடும் வகையில் மூன்று நாட்கள் கோவில் நடை மூடப்பட்டிருக்கும். நான்காம் நாள் தான் கோவில் திறக்கப்படும்.
இந்தக் கோவில் எட்டாம் நூற்றாண்டில் கட்டப்பட்டது. 1500ஆம் ஆண்டு கோச் வம்சத்தால் புதுப்பிக்கப்பட்டது. காமாக்யா தேவி, காமரூபதேவி எனவும் அழைக்கப்படுகிறாள். இங்கு தசா மகா வித்யா கோவில் எனப்படும் 10 கோவில்கள் உள்ளவற்றில் திரிபுரசுந்தரி, மாதங்கி, கமலா தேவி கோவில்கள் இங்கு உள்ள காமாக்யா கோவில்களில் காணப்படுகிறது. ஏனைய ஏழு கோவில்களும் தனித்தனியாக அமைந்துள்ளன. அசாம் தலைநகர் கவுகாத்தியிலிருந்து 12 கிலோ மீட்டர் தொலைவில் நிலாச்சல் மலை மீது இந்த கோவில் அமைந்துள்ளது.
கடல் மட்டத்திலிருந்து 700 அடி உயரத்தில் உள்ளது. இந்தக் கோவிலில் விலங்குகள் உயிர் பலி கொடுக்கப்படுகிறது. ஒவ்வொரு ஆண்டும் ஜூன் மாதம் தேவி மாதவிடாய் அடைவதாக நம்பப்படுகிறது. அந்த மூன்று தினங்களும் கோவிலை சுற்றி உள்ள குளங்கள் ஏரிகள் மற்றும் பிரம்மபுத்திரா நதி சிவப்பு நிறத்தில் காட்சியளிக்கும்.
இந்த கோவில் காலை 5 மணி முதல் ஒரு மணி வரையும், மதியம் 3 மணி முதல் மாலை 6 மணி வரை திறந்திருக்கும்.
சக்தி இல்லாமல் சிவமில்லை என்பதை உணர்த்துவது இந்த கோவில். தட்சன் நடத்தும் யாகத்திற்கு தன் மகள் பார்வதியையும் மருமகன் சிவனையும் தட்சன் அழைக்கவில்லை. அப்படி இருந்தும் பார்வதி தேவி, சிவன் சொல்லச் சொல்ல கேட்காமல் இந்த யாகத்தில் கலந்து கொள்ள சென்றார்.
அங்கு தட்சன் பார்வதி தேவியை அவமானப்படுத்தி விட்டார். அந்த அவமானம் தாங்காமல் பார்வதி தேவி அங்குள்ள யாக குண்டத்தில் விழுந்துவிட்டார்.
இதை கேள்விப்பட்டு கைலாயத்திலிருந்து சிவபெருமான் ஓடோடி வந்து தன் தேவியின் உடலை தூக்கிக்கொண்டு ருத்ரதாண்டவம் ஆடினார். அவரது கோபத்தை தணிப்பதற்காக சுதர்சன சக்கரம் மூலம் உடல் துண்டு துண்டாக வெட்டப்பட்டது. அதில் யோனி பகுதி விழுந்த இடமே இந்த காமாக்யா கோவில். தேவியின் 51 துண்டுகள் விழுந்த இடங்கள் 51 சக்தி பீடங்களாக கருதப்படுகிறது.
இந்த கோவிலுக்கு வயதுக்கு வராத பெண்கள் வந்து வழிபட்டால் அவர்களது கோரிக்கை நிறைவேற்றப்படுகிறது. மேலும் குழந்தை பாக்கியம் இல்லாதவர்கள், திருமணமாகாதவர்கள் இந்த கோவிலுக்கு வந்து வழிபாடு செய்வதன் மூலம் அவர்களது கோரிக்கை நிறைவேறுவதாக கூறப்படுகிறது.
ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 21 முதல் மூன்று நாட்களுக்கு அம்பு பாச்சி மேளா சிறப்பாக கொண்டாடப்படுகிறது.
சக்தி தேவி ஜூன் மாதம் மாதவிடாய் ஆவதை குறிக்கும் வகையில் இந்த விழா மிகச் சிறப்பாக கொண்டாடப்படுகிறது. இங்கு டிசம்பர் மாதம் காமேஸ்வரன், காமேஸ்வரி திருமணம் வெகு சிறப்பாக நடைபெறும்.
இந்துக்களின் புனித யாத்திரை ஸ்தலமாக உள்ளது. தாந்திரீகம் செய்பவர்கள், அகோரிகள், சாதுக்கள், துறவிகள் இந்த கோவிலுக்கு அதிக அளவில் வருகை தருகிறார்கள்.
ஜூன் மாதம் 21ஆம் தேதி கோவில் கருவறை மூடப்படுவதற்கு முன்பாக அந்த கருவறையில் ஒரு பெரிய வெள்ளை துணியை வைத்து விடுவார்கள். பின்னர் நடை சாத்தப்படும். அதன் பின்னர் மூன்று நாட்கள் கழித்து நடையை திறக்கும் போது வெள்ளை துணி முழுவதும் சிவப்பு நிறமாக மாறி இருக்கும்.
இந்த சிவப்பு நிற துணியை சிறிய சிறிய துண்டுகளாக வெட்டி வரக்கூடிய பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்குகிறார்கள்.
இந்த துணிக்கு அம்பு பூச்சி வஸ்திரம் என்று பெயர். மூன்று நாட்கள் கழித்து அன்னை புதுப்பிக்கப்படுவதாக ஐதீகம்.
இந்த சமயத்தில் கோவிலில் லட்சக்கணக்கான பக்தர்கள் கூடுவார்கள். இந்த காமாக்யா கோவில் மிகவும் சக்தி வாய்ந்த கோவில் என கருதப்படுகிறது.