கலைக்கோட்டு முனிவர் வழிபட்ட காசி விஸ்வநாதர்!

கலைக்கோட்டு முனிவர் வழிபட்ட காசி விஸ்வநாதர்!

தொண்டை நாட்டின் மிகப் பழைமை வாய்ந்த திருத்தலங்களுள் ஒன்று பழங்காமூர் ஸ்ரீ காசிவிஸ்வநாதர் ஆலயம். ஈசனின் இடப்பாகம் பெற வேண்டி அம்பிகை, காஞ்சிபுரத்தில் இருந்து புறப்பட்டு அண்ணாமலை நோக்கி வரும் வழியில் ஓர் வாழைக்காட்டில் (கதலிவனம்) வாழைப்பந்தல் அமைத்து, மணல் லிங்கம் பிடித்து வழிபட எத்தனிக்கின்றாள். அதற்கு நீர்த் தேவைப்பட்டதால் தனது பிள்ளைகளான கணபதியையும் கந்தனையும் அழைத்து நீர் கொண்டு வர கட்டளையிடுகின்றாள். கணபதி மேற்கு நோக்கிச் சென்றார்.

அங்கே ஜவ்வாது மலை அடிவாரத்தில் தவத்தில் சிறந்த முனிவர்கள் ஏழ்வருள் ஒருவரான ஜமதக்னி முனிவர் தவம் செய்து கொண்டிருப்பதைக் காண்கிறார். குண்டலிபுரம் என்று முற்காலத்தில் போற்றப்பட்ட படை வீட்டில் வாழ்ந்த இந்த முனிவர் கடுந்தவச் சீலர். அன்னை ரேணுகையின் கணவர். இவரது கமண்டலத்தை பார்த்த கணபதி, காக உருவமெடுத்து அந்தக் கமண்டலத்தை கவிழ்க்க, அதிலிருந்து கங்கையைக் காட்டிலும் புனித நீர், நதியாகப் பெருக்கெடுத்து ஓடியது. (இதற்கு முன்பு அகத்தியரின் கமண்டலத்தைக் கவிழ்த்து காவிரியை உற்பத்தி செய்துள்ளார் கணபதி) அந்த நதியே கமண்டல நதியானது. இந்நதியின் தீர்த்தமானது கங்கையை விடவும் கால் மடங்கு புண்ணியம் மிகுந்தது.

தர்மாரண்ய க்ஷேத்ரம் என்னும் ஆரணி வழியே அற்புதமான இந்த கமண்டல நதி பாய்ந்து வாழைப்பந்தலில் கந்தனால் உண்டாக்கப்பட்ட செய்யாற்றுடன் கலக்கின்றது. இந்த தர்மாரண்ய க்ஷேத்ரத்தின் வடபுறம், கமண்டல நாகநதியின் வடகரையில் காசியைப் போன்றே அமையப் பெற்ற ஊர்தான் பழங்காமநல்லூர் என்னும் பழங்காமூர். வாரணாசியைப் போன்றே இங்கும் ஸ்ரீ காசி விஸ்வநாதர் அன்னை விசாலாக்ஷியோடு கோயில் கொண்டெழுந்து அருள்பாலித்து வருகின்றார்.

திரேதா யுகத்தில் இந்தத் தலத்தில் ரிஷ்யசிருங்கர் என்னும் கலைக்கோட்டு முனிவர் வாழ்ந்து வந்தார். இவர் பன்னெடுங்காலமாக கமண்டல நதியில் ஸ்நானம் செய்து, வடகரையில் உள்ள ஸ்ரீ காசி விஸ்வநாதரை அனுதினமும் வழிபட்டு வந்தார். ஒரு சமயம் வசிஷ்டரின் ஆலோசனைப்படி தென்னகம் வந்த தசரதரின் வேண்டுகோளுக்கிணங்க, அக்கரைக்கு (கமண்டல நதியின் தென்கரைக்கு) சென்று புத்திர காமேஷ்டி யாகத்தை அவருக்கு அற்புதமாய் நடத்தித் தந்தார். மேலும், தசரத மஹாசக்கரவர்த்தியின் விருப்பத்துக்கு இணங்கி, தசரதரின் துணையோடு ஸ்ரீ புத்திர காமேஷ்டி ஈஸ்வரரையும் நிறுவி, வழிபாடுகள் நடத்தினார். ரிஷ்யசிருங்கரின் காலத்துக்கும் முன்பே கமண்டல நதியின் வடகரையில் தானாக தோன்றியப் பெருமானாக ஸ்ரீ காசி விஸ்வநாதர் வீற்றெழுந்து அருள்பாலித்து வருவது சிறப்புக்குரியதாகும்.

ஊரின் உட்புறம் கிழக்கு பார்த்தபடி ஆலயம் அமைந்துள்ளது. கருவறையுள் அழகிய லிங்கத் திருமேனி கொண்டு சற்றே இடதுபுறம் சாய்ந்த நிலையில் அற்புதமாகக் காட்சி தந்து அருள்புரிகின்றார் ஸ்ரீ காசி விஸ்வநாதர். தென்புறம் அரசும் - வேம்பும் இணைந்து காணப்படுகின்றது. அதன் கீழே நாகர் சிலைகள். அருகே நால்வர் தரிசனம். நிருதி திசையில் தல கணபதி சன்னிதி கொண்டுள்ளார். மேற்கில் வள்ளி -  தெய்வானையுடன் ஸ்ரீ சண்முகர் எழுந்தருளுகின்றார்.

அம்பிகை ஸ்ரீ விசாலாக்ஷி புன்னகை ததும்ப புன்முறுவலுடன் தனிச்சன்னிதியில் அருள்மழை பொழிகின்றாள். ஏனைய சிவாலய மூர்த்தங்களும் ஆலயத்தை அலங்கரிக்கின்றன. தல விருட்சமாக வில்வமரம் உள்ளது.

இக்கோயில் அம்பிகைக்கு மாங்கல்யம் சாத்துவதாக வேண்டிக்கொள்ள, உடனே மாங்கல்ய பாக்கியம் கிட்டும். நாக தோஷத்தால் பாதிப்படைந்தவர்கள், இங்கு நாகப் பிரதிஷ்டையை முறைப்படி செய்து, தோஷ நிவர்த்தி அடைகின்றனர். நல்ல வேலை வேண்டுவோர், பிரதோஷ வழிபாட்டை நடத்திட, வேண்டியபடி வேலை கிடைக்கப்பெறுகின்றனர். பிள்ளைச் செல்வம் இல்லாதோர் சுவாமி - அம்பாளுக்கு தேன் கலந்த பால் மற்றும் தயிரினால் அபிஷேகம் செய்து, விரைவில் பலன் பெறுகின்றனர்.

அமைவிடம்: திருவண்ணாமலை மாவட்டம், ஆரணியில் இருந்து செய்யார் செல்லும் வழியில் ஆரணியிலிருந்து 3 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது பழங்காமூர்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com