
இலங்கையின் கம்பளை இராச்சியத்தின் மூன்றாம் விக்கிரபாகு மன்னனினால் கிபி 1370 ஆம் ஆண்டில் கதிர்காம முருகனுக்கு அர்ப்பணிக்கப்பட்டதாக அமைந்த கோயில், எம்பக்க தேவாலயம் (Embakka Devalaya) என்று அழைக்கப்படுகிறது. இந்தக் கோயில் இங்கு அமைந்ததற்கு வாய்மொழிக் கதை ஒன்று சொல்லப்படுகிறது.
கண்டி வியனமுழ எனும் இடத்தை சேர்ந்த மேள வாத்தியக்காரன் ஒருவன் கடுமையான தொழு (குஷ்ட) நோயால் அவதியுற்றான். அவன், இந்த நோயின் துன்பத்திலிருந்து மீட்டெடுக்கும்படி கதிரமலைக் கந்தனிடம் ஒரு நேர்த்திக் கடன் வைத்தான். அதனைத் தொடர்ந்து, அவன் அந்த நோயிலிருந்து விடுபட்டான். மகிழ்ச்சியடைந்த அவன், ஆண்டுதோறும் கதிர்காமம் சென்று, வழிபாடுகள் செய்து கந்தப்பெருமானை வழிபட்டு வந்தான். ஒருநாள் அவன் கனவில் தோன்றிய கதிர்காமக் கந்தன், எம்பக்க எனும் ஊருக்குச் செல்லும்படியும், அந்த ஊரில் அவனுக்கு நல்ல தகவல் கிடைக்குமென்றும் சொன்னார். கதிர்காம முருகன் அவன் கனவில் சொன்னபடி,மேள வாத்தியக்காரன் எம்பக்க எனும் ஊருக்குச் சென்றான். அப்போது, 'எம்பக்க' என்ற கிராமத்துத் தச்சன் ஒருவன், கதிர மரம் ஒன்றை பார்த்த போது, அம்மரத்தின் ஐந்தடி உயரத்திலிருந்து இரத்தம் சீறிப் பாய்ந்தது. அவ்விடத்துக்குச் சென்ற வாத்தியக்காரன் கதிர்காமக் கந்தன் தனக்குக் கனவில் சொன்ன கதையைச் சொல்லி மேள வாத்தியம் இசைத்து வழிபடத் தொடங்கினான். அதை கண்ட ஊர் மக்களும், அங்கு புதிதாகத் தோன்றியிருந்த கதிரமலைக் கந்தனை வழிபடத் தொடங்கினர்.
அதனைத் தொடர்ந்து, கி.பி. 1370 ஆம் ஆண்டு கம்பளை இராச்சியத்தை ஆட்சி செய்த மூன்றாம் விக்கிரமபாகு மன்னன், எம்பக்க என்ற இடத்தில் மக்கள் கதிர்காமக் கந்தனுக்கு வழிபாடு செய்வதை கண்ணுற்று அங்கு ஒரு தேவாலயத்தை அமைக்க நன்கொடையும், பொருட்களும் அளித்து உதவினான். தேவாலயத்தின் பணிகளுக்கென 67 பேரை நியமித்தான். இக்கோயிலின் நிர்வாகத்தை அரத்தன பணிக்கி என்ற மேள வாத்தியக்காரரிம் மரபு வழியினர் கவனித்து வருகின்றனர். இக்கோவிலின் பூந்தோட்டத்தினை 'கங்காணி வீட்டு' (தச்சன்) மரபு வழியினர் கவனித்து வருகின்றனர்.
இத்தேவாலயம் ஐந்து வேறு வேறான கட்டிடங்களை உள்ளடக்கியதாக அமைக்கப்பட்டுள்ளது. இத்தேவாலயத்தின் கட்டிடத் தொகுதி எட்டு பிரிவுகளைக் கொண்டுள்ளது. இத்தேவாலயத்தின் மேள வாத்திய மண்டபக் கூரை அமைப்பு பல தனிச் சிறப்பு உடையதாக இருக்கிறது. வாத்தியக்கார மண்டபம் என்றழைக்கப்படும் முன் மண்டபம் சற்று நீண்டதும் அகலமானதுமாகும். இதன் நீளமான பக்கத்தில் ஆறு தூண்களும், அகலமான பக்கத்தில் நான்கு தூண்களும் கூரையைத் தாங்கி நிற்கின்றன. அதனைத் தவிர, உட்புறம் நான்கு பக்கத்திலும் வரிசையாக மொத்தம் 32 தூண்கள் மேலும் கூரையைத் தாங்கி நிற்கின்றன. கூரையைத் தாங்கும் தூண்களுக்கும், கூரைக்கும் இடையில் இணைப்புப் பாலங்களாக சமாந்தரங்களாக இடது புறமாகவும் வலது புறமாகவும் 7 ஜோடித் தூண்கள் கிடையாகப் பொருத்தப்பட்டுள்ளன.
கூரையில் அகலவாக்கில் 12 பலகைகளும், நீளவாக்கில் 66 பலகைகளும் பொருத்தப்பட்டுள்ளன. இவற்றைத் தவிர, கூரையின் இறங்கு பிரதேசத்தைப் பிரித்து அவற்றில் இரு புறமும் நீளவாக்கில் 41 பலகைகளும், அகலவாக்கில் 12 பலகைகளும் பொருத்தப்பட்டுள்ளன. இந்தப் பலகைகள் அனைத்தும் கூரையின் உச்சியில் இருந்து நாலாபுறமும் விரிந்து, ஒரு குடையை விரித்து வைத்த மாதிரி கூரையைத் தாங்கி நிற்கும் கிடையான தூண்களின் மேல் இறுக்கமாகப் பிணைக்கப்பட்டுள்ளன. இவை அனைத்தும் கூரையின் உச்சியில் 'குருப்பாவை' என்றழைக்கப்படும் உத்தரத்தில் பிணைக்கப்பட்டிருக்கும். கலை அம்சம் கொண்ட பூமடலுடன் செதுக்கப்பட்டுள்ள இத்தகைய 'குருப்பாவை' யுடன் கூடிய உத்தரத் தூண் வேறு எங்குமே கிடையாது என்று சொல்லப்படுகின்றது. எந்த விதமான இரும்பு ஆணி வகைகளும் பாவிக்கப்படாமல் முற்றிலும் மரப் பொறிமுறை வேலைப்பாடுகள் மட்டுமே கொண்டு முழுக் கூரையும் அமைக்கப்பட்டுள்ளது இதன் சிறப்பாகும்.
தெல்மட தேவேந்திர மூலாச்சாரியார் தலைமையின் கீழ் நூற்றுக்கணக்கான சிற்பிகள் தேவாலயம் முழுவதும் மரச் சித்திர வேலைப்பாடுகளை செய்துள்ளனர். இம்மண்டபத்தில்;
ஒரு தூணில் 4 என 32 தூண்களில் காணப்படும் மரச் சித்திரச் செதுக்கல்கள் - 128
ஒரு தூணில் 8 என 32 தூண்களில் காணப்படும் சீவல் மரச் செதுக்கல்கள் - 256
தூண் உச்சியில் செதுக்கப்பட்டுள்ள அலங்காரத் தாமரை மலர் வடிவங்கள் - 64
உத்தரத் தூண் மரச் சித்திரச் செதுக்கல்கள் - 30
உத்தரக் கிடைத் தூண் மரச் சித்திரச் செதுக்கல்கள் - 36
என்று மொத்தம் 514 சித்திரச் செதுக்கல்கள் இடம் பெற்றிருக்கின்றன.