

மதுரை நகரத்தின் மேலமாசி வீதி, தெற்கு மாசி வீதி சந்திப்பில் 1000 ஆண்டுகள் பழமையான மதனகோபால் சுவாமி ஆலயம் அமைந்துள்ளது. இக்கோவில் கூடல் அழகர் கோவில் அருகே உள்ளது. இது கிருஷ்ணன் கோவில் ஆகும். மூலவர் மதனகோபால் சுவாமி. அஷ்டாங்க விமானத்தின் கீழ் இரண்டு கைகளில் புல்லாங்குழல் வைத்து, இடது கால் ஊன்றி வலது கால் சற்று மாற்றி விஸ்வரூப கண்ணனாக பார்ப்பவர்களை மெய் சிலிர்க்க வைக்கிறார். சுமார் ஐந்தடி உயரத்தில் பிரகாசமாக, மயக்கும் அழகுடன் காட்சி தருகிறார். அருகில் பாமா, ருக்மணி தேவியர் வீற்றிருக்கின்றனர். மதுரவல்லி தாயார் தனிச் சன்னதியிலும் ஆண்டாள் தனி சன்னதியிலும் அருள் பாலிக்கின்றனர்.
இங்கு உத்சவர் தெய்வீக வாசுதேவராஜ மற்றும் தாயார் மதனவல்லிக்கு தனிச் சன்னதி உள்ளது. மேலும் ஆண்டாள், சக்கரத்தாழ்வார், நரசிம்மர், ராமர், விஷ்வக்சேனர் மற்ற ஆழ்வார்கள் உள்ளிட்ட சன்னதிகள் உள்ளன. இங்குள்ள ஆஞ்சனேயர் ஐந்து முகங்களுடன் காட்சி தருகிறார். கஜலட்சுமிக்கு என ஒரு சன்னதி உள்ளது. இது மேற்கு பகுதியில் அமைந்துள்ளது. இராகு சிவாலயங்களைப் போல் பல கூறுகள் உள்ளன.
ஒரு ஆலமரத்தடியில் அமர்ந்திருக்கும் விநாயகர், கோவிலுக்குள் நுழைந்தவுடன் இடதுபுறம் நாகர் சன்னதி உள்ளது. உன்னதமான ஐகானோகிராபிக் பாணியில் சிவலிங்கத்தின் உருவம் பதிக்கப்பட்டு அரச மரத்தின் கீழ் உள்ளது. வளாகத்தின் வடகிழக்கு திசையில் ஒரு தனி நவக்கிரக சன்னதியும் உள்ளது. விஷ்ணு கோவில்களின் வழக்கத்திற்கு இது மாறானது ஆனால் மதுரை பகுதியில் உள்ள விஷ்ணு கோவில்களில் இதை காணலாம்.
தல வரலாறு
ஒருமுறை சிவபெருமான் மதுரையில் மீனாட்சியை திருமணம் செய்தபின் சுந்தரபாண்டிய மன்னனாக ஆட்சிப் பொறுப்பை ஏற்குமுன் சிவலிங்கம் பிரதிஷ்டை செய்து சிவபூஜை செய்கிறார். சிவபெருமான் தான் செய்யும் பூஜையின் போது தியானத்தில் ஆழ்ந்து விடுகிறார். ஈசன் உடலில் வெப்பம் அதிகமாகி அக்னி ஜ்வாலை உலகை பாதித்தது. இதனால் பயந்த தேவர்கள் பிரம்மன் தலைமையில் விஷ்ணுவிடம் சென்று நடந்ததைச் கூறி காக்க வேண்டினர். உடனே விஷ்ணு தன் புல்லாங்குழலை இசைக்கிறார். இந்த இசை என்னும் இன்ப வெள்ளம் சிவனின் செவிகளில் ஒலிக்க அவர் மயங்கி கண் விழிக்கிறார்.
தியானம் கலைகிறது. உலகம் காக்கப்படுகிறது. சிவபெருமான் மிகுந்த மகிழ்ச்சியுடன் மகாவிஷ்ணுவை மதன கோபாலன் என்ற திருநாமத்துடன் தன் அருகிலேயே இருந்து புல்லாங்குழல் இசைத்து மகிழ்விக்க வேண்டும் என்று கூற, அவர் விருப்பப்படி மதுரை மேலமாசி வீதியிலுள்ள சிவாலயத்திற்கு அருகில் மதனகோபாலசுவாமி என்ற திருநாமத்துடன் கோவில் கொண்டு புல்லாங்குழல் இசைத்து சிவனை மகிழ்வித்து நம்மையும் காத்து அருள்கிறார்.
ஆண்டாள் பெரியாழ்வாருடன் பல்லக்கில் ஸ்ரீரங்கம் செல்லும்முன் இந்த மதனகோபாலசுவாமியை தரிசனம் செய்த பின் திருவரங்கப் பெருமானின் திருமேனியில் ஐக்கியமானார் என்று வரலாறு கூறுகிறது.
இசைத்துறையில் மேன்மை அடைய விரும்புபவர்கள் இங்கு பெருமாளை தரிசனம் செய்வது வழக்கம்.
இத்தலத்தில் சஷ்டியப்த பூர்த்தி விழா செய்பவர்களின் சந்ததி சிறப்பு பெறும் என்பது பக்தர்களின் நம்பிக்கை. இங்குள்ள நாகதேவி ஹரிஹரசர்ப்ப ராஜா என்று அழைக்கப்படுகிறார். இங்கு வெள்ளி தோறும் ராகுகால பூஜை சிறப்பாக நடைபெறுகிறது. நாகதோஷம், செவ்வாய் தோஷம் உள்ளவர்கள் இந்த பூஜை செய்தால் தோஷம் விலகும்.
இக்கோவில் குறித்து ஒரு வரலாற்று நிகழ்ச்சி உண்டு. இக்கோவிலின் சுவர்கள், தூண் மற்றும் சிற்பங்கள் அசாதாரண கட்டடக்கலை கூறுகளைக் கொண்டது. கர்ப்பக் கிரகத்தின் முன் நாம் காணும் மண்டபம் ஒரு புனரமைப்பு. அசலை பிலடெல்ஃபியா கலை அருங்காட்சியகத்தில் காணலாம்.
20 நூற்றாண்டின் முற்பகுதியில் முகமண்டபத்தின் கூறுகள் சுமார் 600 கிரானைட் அடுக்குகள் மற்றும் தூண்களை உள்ளடக்கியவை. 1912ம் ஆண்டு பிலடெல்ஃபியாவைச் சேர்ந்த அட்லைன் பெப்பர் கிப்சன் (Adeline Pepper Gibson) வந்து இடிபட்டுக் கிடந்த தூண்களை விலைக்கு வாங்கி அவை அந்நாட்டு அருங்காட்சியகத்தில் காட்சிப்படுத்தப் பட்டுள்ளன. இத்தூண்களின் இராமாயண மகாபாரத காட்சிகள் பிரமிக்க வைக்கின்றன .