
தர்மத்தின் காவலராக போற்றப்படும் எமதர்மன் உயிர்களுடைய நல்வினைை, தீவினைக்கேற்ப தீர்ப்பு வழங்குபவர். தெற்கு திசையின் அதிபதியான எமதர்மனை தனிப்பட்ட முறையில் வழிபடும் வழக்கமில்லை. எமன் வழிபட்ட சிவத்தலங்களை தரிசித்தாலே போதும். இவரை வழிபட மரணபயம், அச்சம், நோய்கள் போன்றவை ஏற்படாது என்பதை நம்பிக்கை. தமிழ்நாட்டில் எமதர்மனுக்கு என அமைந்துள்ள கோயில்கள் சில (Yama Dharmaraja temples).
தெலுங்கானா மாநிலம் கரீம்நகரில் தான் இந்தியாவிலேயே எமனுக்கு என்று தனிக்கோவில் உள்ளது. கரீம் நகரில் இருந்து 70 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது. பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் கட்டப்பட்ட இந்த கோவில். முதலில் எமதர்ம ராஜனை வழிபட்டு பின்னர் நரசிம்ம சுவாமியை வழிபடுவது தான் இந்தப் பகுதியில் உள்ள வழக்கம். இக்கோவிலில் வந்து வழிபடுபவர்களுக்கு ஆயுள் நீடிக்கும் என்பது நம்பிக்கை. சனிக்கிழமைகளில் எமகண்ட நேரங்களில் இக்கோவிலில் சிறப்பு வழிபாடு நடைபெறும்.
தஞ்சாவூர் மாவட்டத்தின் பேராவூரணி அருகே திருச்சிற்றம்பலம் எனும் ஊரில் எமதர்மனுக்கு கோவில் உள்ளது. இங்குள்ள எமதர்மன் 6 அடி உயர எருமை வாகனத்தின் மீது முறுக்கிய மீசையுடன் அமர்ந்த நிலையில் நீல வண்ண வஸ்திரம் அணிந்து, கைகளில் பாசக்கயிறு, ஓலைச்சுவடி, கதை ஆகியவற்றைத் தாங்கியபடி காட்சி தருகிறார்.
இவருக்கு கீழே சித்திரகுப்தர் மற்றும் எமதூதர்கள் காணப்படுகிறார்கள். இங்கு சனிக்கிழமைகளில் எமகண்ட நேரங்களில் ஆயுள் விருத்தி ஹோமம் நடத்தப்படுகிறது.
கோயம்புத்தூர் மாவட்டத்தில் காரமடை - சத்தியமங்கலம் செல்லும் வழியில் உள்ள சிறுமுகையில் எமனுக்கு என்று கோவில் உள்ளது. இங்கு பௌர்ணமி நாளன்று வந்து வழிபட ஆயுள் தோஷம் விலகும் என்பதும், எந்த நோயாக இருந்தாலும் இவரை வழிபட உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்படும் என்பதும் பக்தர்களுடைய அசைக்க முடியாத நம்பிக்கை. ஒவ்வொரு பௌர்ணமி மற்றும் அமாவாசை நாட்களில் எமதர்மருக்கு பால், நெய், பன்னீர் கொண்டு அபிஷேகம் செய்து சிறப்பு பூஜைகள் நடத்தப்படுகின்றன.
மயிலாடுதுறை அருகே ஸ்ரீ வாஞ்சியம் வாஞ்சிநாதர் கோயில் உள்ளது. இந்த ஆலயத்தில் எமதர்மனுக்கு என்று தனி சன்னதி உள்ளது. இங்கு வாஞ்சிநாதருக்கு எமதர்மனே வாகனமாக உள்ளார். இந்த கோவிலில் உள்ள குப்த கங்கை தீர்த்தத்தில் நீராடி எமனை வழிபட்ட பின்னரே மற்ற தெய்வங்களை வழிபட வேண்டும் என்ற வழக்கம் இன்றளவும் நடைமுறையில் உள்ளது. காசிக்கு நிகராக கருதப்படும் இக்கோவிலில் எமதர்மன் மற்றும் சித்திரகுப்தனுக்கு தனி சன்னதிகள் உள்ளது. மாசி மாதம் பரணி நட்சத்திரத்தில் எமதர்மன் தவம் புரிந்ததைக் கொண்டாடும் வகையில் இங்கு சிறப்பு விழாக்கள் நடைபெறுகின்றன.
இக்கோவிலில் எமதர்மனுக்கு என தனி குடைவரைச் சன்னதி உள்ளது. சிவபெருமானின் காலடியில் குழந்தை வடிவில் எமதர்மன் காட்சி தருகிறார். திருக்கடையூரில் சிவபெருமான் காலால் உதைத்து, பின் உயிர்த்தெழுப்பிய எமதர்மன் இங்கு குழந்தை வடிவில் சிவன் பார்வதிக்குக் கீழே சன்னதி கொண்டு அருள்கிறார். இங்கு ஆயுள் விருத்தி ஹோமங்கள் மற்றும் எமபயம் நீக்கும் வழிபாடுகள் செய்யப்படுகின்றன. எமனே சனிக்கு அதிபதி என்பதால் இங்கு தனி நவகிரக சந்நிதி கிடையாது.
இங்கு சிவபெருமான் எமதர்மனை சம்ஹாரம் செய்த தலம் என்பதால் எமனுக்கு தனி சன்னதி உள்ளது. கோவிலின் பிரதான கருவறைக்கு அருகில் எருமை வாகனத்துடன் எமதர்மன் வணங்கிய நிலையில் காட்சியளிக்கிறார். மார்கண்டேயனுக்காக எமனை உதைத்த இடமான இங்கு, கால சம்ஹார மூர்த்திக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்படுகின்றன. ஆயுள் விருத்திக்காக சஷ்டியப்த பூர்த்தி, உக்ரரத சாந்தி, சதாபிஷேகம் மற்றும் ஆயுள் ஹோமங்கள் சிறப்பாக நடைபெறுகின்றன.
உலகில் வாழும் உயிர்களை எடுத்துச் செல்லும் எமதர்மனை ஒரு முறை சிவபெருமான் சம்ஹாரம் செய்துவிட, இதனால் உலகில் உயிர்கள் அழிவில்லாமல் பூமி பாரம் அதிகரித்துவிட்டது. அதைத் தொடர்ந்து பூமித்தாய் எமதர்மனை உயிர்ப்பிக்க வழிபாடு செய்த பெருமைக்குரிய ஆலயம் திருநெல்வேலி மாவட்டம் வீரவநல்லூரில் அமைந்துள்ளது. யமதர்மனை உயிர்ப்பிக்க பூமாதேவி வழிபாடு செய்த சிறப்புக்குரிய தலம் இது. திருநெல்வேலி புதிய பேருந்து நிலையத்திலிருந்து பாபநாசம் செல்லும் வழியில் 28 கிலோமீட்டர் தொலைவில் வீரவநல்லூர் அமைந்துள்ளது.
கோவையிலேயே மற்றொரு சித்திரகுப்த எமதர்மராஜன் கோவிலுள்ளது. 323 ஆண்டுகள் பழமையான இக்கோவில் சிங்காநல்லூர்-வெள்ளலூர் பாதையில் அமைந்துள்ளது. வெள்ளலூர் கோவில் கருவறை வட்ட வடிவில் இருப்பது தனிச்சிறப்பு. கருவறையில் எமதர்மன் எருமையின் மீது அமர்ந்தபடியும், அவருக்கு அருகில் சித்ரகுப்தன் நின்றபடியும் சிலை வடிவம் காணப்படுகிறது. இக்கோவிலில் லட்சுமி நரசிம்மர் சன்னதியும் உள்ளது.
புதுச்சேரி அருகிலுள்ள மொரட்டாண்டி ஸ்ரீபிரத்தியங்கரா தேவி கோவிலில் எமதர்மனுக்கு வடதிசை நோக்கிய சன்னதி உள்ளது. இங்கு எமதர்மராஜன் எருமை வாகனத்தில் அமர்ந்து கைகளில் சூலாயுதம் மற்றும் கதையுடன் காட்சி தருகிறார். இத்தலத்தில் எமதர்மன் யோக நிலையில் இருப்பதாக ஐதீகம். இக்கோவில் வளாகத்தில் எட்டு திசைக்காவலர்கள் மற்றும் எமதர்மன் ஆகியோருக்கு தனி சன்னதிகள் இருப்பது சிறப்பு. இத்தலம் விழுப்புரம்-புதுச்சேரி தேசிய நெடுஞ்சாலையில் புதுச்சேரிக்கு அருகில் அமைந்துள்ளது.