
மிகவும் பிரசித்தி பெற்றது மன்னார்குடி ஶ்ரீ ராஜகோபாலன் பங்குனிப் பெருவிழா.
இந்தக் கோயிலில் ஶ்ரீ மணவாள மாமுனிகளுடைய நியமனப்படி அனைத்து விழாக்களும் ஶ்ரீ பாஞ்சராத்ரா ஆகம வல்லுனர்கள் ஆன தீக்ஷதர்கள் எனப்படுவோரால் நடத்தப்பட்டு வருகின்றன.
பலவித வாகனங்கள் உடன் 18 நாட்கள் மட்டுமன்றி அதற்கு மேல் 12 நாட்கள் விடையாற்றி உத்சவமும் நடைபெறும் ஒரே திவ்ய ஷேத்திரம் இந்த மன்னார்குடி மட்டும் தான்.
18 நாட்கள் உத்சவத்தில் 32 திருகோலங்களில் ராஜகோபாலன் சேவை சாதிப்பார்.
18ம் நாள் பங்குனி ரோஹினி நட்சத்திரம் அன்று திருத்தேர்.
17ம் திருநாள் ராஜகோபாலன் வெண்ணெயை திருடி சாப்பிடும் பாலகோபாலனுடைய திருக்கோலம்.
02/04/25 அன்று மன்னார்குடி வெண்ணெய்த்தாழி திருவிழா. 18 நாள் உற்சவத்தில் மற்ற திருவிழாக்களை ஒதுக்கி வைத்துவிட்டுக் கம்பீரமாக இருக்கும் திருவிழா.
மற்ற திவ்யதேசங்களில் நீங்கள் இந்த வெண்ணெய் தாழி உற்சவத்தைச் சேவித்து இருக்கலாம். ஆனால் மன்னார்குடி வெண்ணெய்த்தாழி உற்சவம் மிகச் சிறப்பு வாய்ந்ததாகும்.
“கொண்டல் வண்ணனைக் கோவலனாய் வெண்ணெய்
உண்டவாயன்
என்னுள்ளம் கவர்ந்தானை
அண்டர்கோனணியரங்கன்
என் அமுதினைக் கண்ட
கண்கள் ....மற்றொன்றினைக் காணாவே!
திருப்பாணாழ்வார் பாசுரம் படி கோபாலன் அழகை சேவிக்கிறோம்.
கோபாலன் மேனியில் வெண்ணெய் அடிப்பது பெருமை மிகு விஷயம்.
சிறியவர் முதல் பெரியவர் வரை கோபாலனுக்கு வெண்ணெய் சமர்பிப்பது ஐதீகம். யாதவக் குல மக்களுக்காகக் கோபாலன் வெண்ணெய் உண்ணும் விழா. இந்த வெண்ணெய் தாழி திருவிழா.
ஆனால் ஒரே நேரத்தில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கையில், பூவரசு இலையில் வெண்ணெய் விற்பவர்களிடம் வெண்ணெய் வாங்கி அந்தக் கூட்டத்தில் கோபாலன் மீது அடிப்பது என்பது ஒவ்வொரு பந்துகளையும் sixer அடிப்பது போல் உணர்வு.
கோபாலன் மேனி முழுவதும் வெண்ணெய்! கோபாலன் மேனி மட்டுமா வெண்ணெய்? கோபாலனுடன் கூடவே சேர்ந்து வரும் அர்ச்சகருக்கும் வெண்ணெய் குளியல் தான். அவர் உடம்பு, மூக்கு, கண், காது, கை, நெற்றி முழுவதும் வெண்ணெய் மழை தான்.
அவர் பிரசாதமாகப் பக்தர்களுக்குப் பூவரசு இலையில் வந்த பிரசாதத்தைக் கொத்து கொத்தாக எடுத்துத் திரும்பப் பக்தர்களுக்குக் கொடுக்கும் போது எங்கிருந்தோ வந்த அம்பு மாதிரி பக்தர்களின் வெண்ணெய் அவர் மேல் வந்து விழும்.
காண கிடைக்காத காட்சி; கண்கொள்ளா காட்சி.
பெருமாள் நவநீத கிருஷ்ணன் ஆக 20 லிட்டர்க்கு மேல் பிடிக்கும் வெள்ளி வெண்ணெய் குடத்தைத் தாங்கி ஒரு கால் முன்னும் இன்னொரு கால் பின் புறமும் அமர்ந்து அருள்பாலிக்கும் இந்தக் காட்சி இருக்கே...
இந்த வெண்ணெய் தாழி உற்சவத்தில் ஒரு ஸ்பூன் கூட இல்லாத வெண்ணெயை 10 ருபாய்க்கு விற்றுக் கொண்டு இருந்தார்கள்.
"என்னப்பா? இவ்வளவு விலை சொல்ற?" என்று பக்கத்து பெண்மணி ஒருவர் கேட்டுக் கொண்டு இருக்கும் போது, நான், "இதுவும் கோபாலன் திருவுள்ளம் தான். இப்படிப்பட்ட ஏழை ஜனங்கள் இன்று இப்படி விற்றால் தான் அவர்கள் வாழ்க்கை படகு ஓடும் என்று கோபாலனுக்குத் தெரியும். இது அநீயாயமில்லை. அவர்கள் இன்று ஒரு நாள் இப்படி விற்று பிழைக்கட்டுமே என்று கோபாலன் நினைக்கிறான்" என்று அவரைச் சமாதானப்படுத்தினேன்.
ஶ்ரீ ராஜகோபாலன் புறப்பாடுக்கு முன் செண்டை மேளம் ஆர்ப்பாட்டம்.
நிறைய வருடங்களில் கோயில் இருந்து வெண்ணெய் தாழி மண்டபம் வரைக்கும் கோபாலன் அழகில் மயங்கி அவர் பல்லக்குடன் பின்னாடியே மக்கள் தொடர்ந்து செல்வார்கள்.. வெறும் காலுடன் வெண்ணெய்த்தாழி மண்டபம் வரை சென்று மன திருப்தி ஏற்பட்டதும் மக்கள் கூட்டம் கரையும்.
கோயிலில் இருந்து வெண்ணெய்த்தாழி மண்டபம் வரை உள்ள கடைகளில், நம் கையைப் பிடிக்காத குறையாகப் 'பானகம் சாப்பிடுங்கள்; நீர் மோர் சாப்பிடுங்கள்' என்று சொல்லும் பாங்கே தனி. இதைத் தவிர்த்து உணவு பொட்டலங்கள் வேறு.
இந்த வெண்ணெய்த்தாழி உற்சவ மாலையில் வெண்ணெய்த்தாழி மண்டபத்தில் செட்டி அலங்காரம் ... ஶ்ரீ ராஜகோபாலன் ஒற்றை வஸ்திரத்தை இடுப்பில் அணிந்து கையில் துலாக்கோல் ஒன்று ஏந்தியிருப்பார்.
அன்று மாலை 6.30 மணி அளவில் குதிரை வாகனத்தில் வையாளி சேவை. இந்த மண்டபம் எதிரில் உள்ள செட்டித் தெருவில் கிட்டத்தட்ட ஒரு மைல் நீளம் உள்ள தெருவில் மூன்று முறை வையாளி சேவையில் அருள்பாலிப்பார்.
இரவு 7 மணிக்கு கள்ளர் மண்டகப்படி தங்க குதிரை வாகனம். செட்டி தெரு மூன்று முறை போய் வந்தவுடன் நேரே திருப்பாற்கடல் மண்டபம். இரவு 9 மணி இதோ வானவேடிக்கை கண்கொள்ளா காட்சி.
18ம் நாள் பங்குனி ரோஹினி நட்சத்திரம் அன்று திருத்தேர். தேசிய மேல்நிலை பள்ளி மாணவர்கள் மூலம் தேர் இழுக்கப்பட்டு கிட்டத்தட்ட 70 வருடத்துக்கு மேல் இந்த நடைமுறை. தேர் நான்கு வீதிகள் வலம் வந்து பின்பு நிலைக்கு வரும்.
ஆனால் என்னை விட வயதானவர்கள் சேவிக்க வந்து இருக்கும் போது, அவர்களுக்கு கோபாலன் மீது அந்த அளவு தீவிர காதல் என்று தானே சொல்ல வேண்டும்!