

செங்கல்பட்டிலிருந்து திருக்கழுகுன்றம் சாலையில் சுமார் 5 கி.மீ தூரத்தில் நென்மேலி என்ற கிராமத்தில் லஷ்மி நாராயண பெருமாள் கோவில் அமைந்துள்ளது.
இங்கு மூலவர் ஸ்ரீ லட்சுமி நாராயண பெருமாள் பத்மாசனத்தில் அமர்ந்த கோலத்தில் அருள்கிறார்.
மேலும் இக்கோயிலில் உள்ள உற்சவமூர்த்தி ஸ்ராத்த ஸம்ரஷண நாராயணர் எனும் திருநாமம் கொண்டு திருக்காட்சி தருகிறார்.
இந்த கிராமத்திற்கு புண்டரிக நல்லூர், பிண்டம் வைத்த நல்லூர் என்றும், இந்தக் கோயிலின் திருக்குளம் அர்க்ய புஷ்கரணி, ஜீயர் குளம் என்றும் அழைக்கப்படுகிறது.
இதனை கயாவுக்கு நிகரான ஷேத்திரம் என்றும் 'செளலப்ய கயா' என்றும் கூறப்படுகிறது.
திதி கொடுக்க மறந்தவர்கள், திதி கொடுப்பதே தெரியாமல் இருந்தவர்கள், வாரிசு இல்லாத அல்லது இழந்த பெற்றோர் /விபத்து, தற்கொலை காரணமாக அகால மரணம் அடைந்தவர்களின் வாரிசுகள் என்று யார் இந்த தலத்துக்கு வந்தாலும், அவர்கள் சார்பில் தானே நின்று திதி கொடுகிறார் இந்த சிரார்த்த சம்ரட்சண பெருமாள். இந்த கிராமத்தின் மத்தியில் சிரார்த்த சம்ரட்சண பெருமாள் எனும் பெயரோடு லட்சுமி நாராயணராக சேவை சாதிக்கிறார். அமாவாசை, ஏகாதசி நாட்களில் திதி, சிராத்தம் செய்யப்படுகிறது.
பித்ரு வேளை பூஜை பிற்பகல் 12 மணி முதல் 1 மணிக்குள் இந்த கிரியைகளை பெருமாள் ஆராதனம் ஏற்று விரதம் இருந்து செய்கிறாராம்.
தல வரலாறு:
இக்கோயிலில் ஆற்காடு நவாப் காலத்தில் திவானாக பணிபுரிந்த ஸ்ரீ யாக்ஞ வல்கியரைக் குருவாக கொண்ட சுக்ல யஜீர் வேதத்தைச் சேர்ந்த யக்ஞ நாராயண ஷர்மா - சரஸ வாணி தம்பதிகள் இந்த பெருமாளின் மீது மாறாத பக்தி கொண்டிருந்தனர். மேலும் இவர்கள் அரசுக்கு செலுத்த வேண்டிய வரிப்பணத்தையும் தெய்வகாரியங்களுக்கு செலவு செய்து விட்டதால், அரசு தண்டனையை ஏற்க விரும்பாமல் திருவிடந்தை என்னும் திவ்யதேசத்தில் உள்ள திருக்குளத்தில் தங்கள் உயிரை மாய்த்துக் கொண்டனர். தங்கள் பீம கடன்களை செய்ய வாரிசு இல்லையே என மனம் வருந்தி மரணம் அடைந்தார்கள். அவர்களுடைய எண்ணத்தை அறிந்து, இந்த தலத்து எம்பெருமானே காரியம் செய்ததாக சொல்கிறது இக்கோயிலின் சரிதம்.
அந்த திவானின் வேண்டுகோளுக்கிணங்க சந்ததிகள் இல்லாதவருக்கும், சிரார்த்தம் செய்ய இயலாதவர்களுக்கும், தானே முன் நின்று சிரார்த்தம் செய்து வைப்பதாக சொல்கிறது இந்த ஸ்தலத்து புராணம்.
குதபகாலம் எனும் பித்ரு வேளையில் 12 மணி முதல் 1 மணி வரை ஒரு காலம் மட்டும் ஆராதனம் ஏற்று விரதமிருக்கிறார் இத்தலப் பெருமாள்.
எனவே இங்கு ஸ்ராத்தம்செய்ய விரும்புபவர்கள் பித்ருவேளையில் நடக்கும் பூஜையில் தங்கள் பித்ருக்களுக்காக சங்கல்பம் செய்து கொண்டு சமர்ப்பிப்பதே ஸ்ராத்த சம்ரஷ்ணம். இந்த சுவாமிக்கு வெண்பொங்கல், தயிர் சாதம் அதனுடன் பிரண்டையும் எள்ளும் சேர்ந்த துவையலும் நைவேத்தியம் செய்யப்படுகிறது.
இது மட்டும் ஏற்றுக்கொண்டு பித்ருக்களை திருப்தி செய்கிறார் இத்தலத்து பெருமாள்.
திதி செய்ய பூஜைகள்:
திதி கொடுக்க வேண்டும் என்று விரும்புபவர்கள் இங்கு 11 மணிக்குள் பெருமாள் சந்நிதிக்கு வர வேண்டும். மஞ்சள், எள், தர்ப்பைப்புல், விரலில் அணிய பவித்ரம், வெற்றிலை பாக்கு, பழம் ஆகியவற்றை கொண்டு வந்து பெருமாளிடம் சமர்ப்பித்து தங்களுடைய பித்ருக்களுக்காக சங்கல்பம் செய்து கொள்ள வேண்டும்.
பின் கோவிலில் பின்புறத்தில் உள்ள விஷ்ணு பாதம் எனும் பெருமாளின் திருவடிக்கு அருகில் சாஸ்திரிகள் வழிகாட்ட திதி கொடுப்பவர் தன் முன்னோர்களுக்கு மறுபடியும் ஒரு சங்கல்பம் செய்து கொண்டு, சுவாமியிடம் சமர்ப்பிப்பதே 'சிரார்த்த சம்ரட்சண'மாகும். இது முடிந்த பின் மீண்டும் அவர்கள் பெருமாள் சந்நிதிக்கு வந்து சகல உபசாரங்களுடன், பூஜையும் நடத்த வேண்டும்.
இறுதியில் நம் வீட்டில் செய்யும் சம்பிரதாய திவச சமையல் போல வெண்பொங்கல், தயிர் சாதம், பிரண்டையுடன் கலந்து எள் துவையல் செய்யப்பட்டு நைவேத்தியம் செய்யப்படுகின்றன. இதை ஏற்று நம் முன்னோர்களின் ஆத்மாக்களை பெருமாள் திருப்தி படுத்துவதாக ஐதீகம்.
பித்ரு தோஷம் நிவர்த்திக்கு காசி, ராமேஸ்வரம் தான் செல்ல வேண்டும் என்பது இல்லை. இங்கு அதனை செய்யலாம்.
கயா, காசி, ராமேஸ்வரம் ஆகிய தலங்களில் இல்லாத சிறப்பு இந்த தலத்திற்குத்தான் உண்டு என்கிறார்கள்.