

புண்டரவர்த்தனம் என்ற நகரில் நந்தனன் என்ற நெசவாளி வாலிபனும், தருமன் என்ற தச்சனும் வசித்தனர். இருவரும் செல்வந்தர்களாக ஊர் சுற்றித் திரிந்தார்கள். அப்படி ஒருநாள் செல்லும் போது அரண்மனை உப்பரிகையில் அரசகுமாரி சுதர்சனா தன் தோழிகளுடன் இருப்பதைப் பார்த்து அவள்மீது நந்தனன் காதல் கொண்டான். மறுநாள் தன் நண்பன் தருமன் வந்தபோது நந்தனன் வாட்டமுற்று இருந்ததைக் கண்டு காரணம் கேட்க, அவன் அரசகுமாரி மீது விருப்பம் கொண்டதைக் கூறினான்.
"அவளை அடைய நான் வழிசெய்கிறேன்," என்ற தருமன், ஒரு மரத்தால் ஆன கருட வாகனம் செய்து அதற்கு வண்ணங்கள் தீட்டி, அது மேலே பறப்பதற்கும், கீழே இறங்குவதற்கும் ஏற்ற விசைகள் பொருத்தி, தன் நண்பனுக்குத் தந்து, அவனை திருமால் வேடம் பூண்டு கருட வாகனத்தில் ஏறி அரசகுமாரியிடம் சென்று காந்தர்வ விவாகம் செய்யக் கூறினான். மேலும் ஒரு பொம்மைச் சக்கரத்தையும் தந்தான்.
நந்தனன் அன்றிரவே கருட வாகனத்தில் ஏறி அரசகுமாரியிடம் சென்று தான் திருமால் என்றுகூற, அவளும் திருமாலே வந்ததாக எண்ணி அவனோடு மகிழ்ச்சியாக இருந்தாள்.