
கும்பகோணம் நாகநாதர் கோயில், திருநாகேஸ்வரம் நாகநாதசுவாமி கோயில் என அழைக்கப்படுகிறது. இது தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் வட்டாரத்தில் உள்ள திருநாகேஸ்வரம் கிராமத்தில் அமைந்துள்ளது. தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் சோழ நாடு காவிரி தென்கரைத் தலங்களில் 29-வது சிவத்தலமாகும். சண்பக மரங்கள் நிறைந்து காணப்படுவதால் இந்தப் பகுதி சண்பகாரண்ய க்ஷேத்திரம் என்றும் அழைக்கப்படுகிறது. இத்திருக்கோயிலானது ஊரின் தென் வடக்காக 630 அடியும், கிழக்கு மேற்கில் 200 அடியும் கொண்ட பரப்பளவு நிலத்தில் அமைந்துள்ளது.
நான்கு திசைகளிலும் நான்கு கோபுர வாயில்கள் அழகிய சிற்பங்களுடன் உள்ளன. கோயில் மதில் சுவர்களை அடுத்து பெரிய பிரகாரம் உள்ளது. வடக்குப் புறத்தில் ஓர் அழகிய பூந்தோட்டம் உள்ளது. கிழக்கு கோபுர வாயிலை அடுத்து விநாயகர் கோயில், பலிபீடம், நந்தி மண்டபம், கொடி மரம் ஆகியவை உள்ளன. தெற்கில் அழகியக் குளம் ஒன்று உள்ளது. வடக்குப் புறத்தில் தேர் வடிவில் நூற்றுக்கால் மண்டபம் ஒன்று உள்ளது.
கோயில் நடு கோபுர வாயில் அமைப்புடன் தொடங்குகிறது. கோபுர வாயிலையொட்டி பெரிய பிரகாரமும் அதன் பக்கச்சுவர்களை ஒட்டி திருச்சுற்று மண்டபமும் உள்ளது.
இறைவனுக்கு அருகில் பிரையணிநுதலாள் சந்நிதி உள்ளது. கிரிகுஜாம்பிகை சந்நிதி, தனிக்கோயிலாக விளங்குகிறது. இவைகள் சுதை உருவம் கொண்டவை. எனவே அபிஷேகம் எதுவும் இங்கு நடப்பதில்லை. தை மாதத்தில் மட்டும் புனுகு சாத்தப்படுகிறது.
இத்தலம் இராகு, தட்சகன், கார்கோடகன், ஆதிசேஷன், வாசுகி ஆகியார் வழிபட்ட தலமாகும். பெரிய பிரகாரத்தின் தென் மேற்கு மூலையில் ராகு சன்னதி உள்ளது.
இராஜவம்சத்து மன்னன் ஒருவனுக்கும் அசுரகுலப் பெண்ணொருத்திக்கும் மகனாகப் பிறந்தவன் இராகு. தேவர்களும் அசுரர்களும் பாற்கடலைக் கடையும்போது அசுரனாகிய இராகு உருமாறி தேவர்கள் வரிசையில் சேர்ந்து மகாவிஷ்ணுவிடமிருந்து அமிர்தத்தைப் பெற்று உண்டு விட்டான். இந்த உண்மையினை அறிந்த மகாவிஷ்ணு கையிலிருந்த அகப்பையால் அவனது மண்டையில் அடிக்க, தலை வேறு உடல் வேறாகி அவன் விழுந்தான். ஆனாலும் அமிர்தம் உண்ட மகிமையால் அவன் தலைப்பகுதியில் உயிர் இருந்தது. இராகுவும் தனது தவறுக்கு வருந்தி இறைவனை வேண்டி நிற்க, இறைவன் பாம்பின் உடலை அவனுக்குக் கொடுத்து அவனை ஒரு நிழல் கிரகமாகவும் ஆக்கினார்.
இத்தலம் நவக்கிரகத் தலங்களில் இராகு பகவானுக்குரிய சிறப்புத் தலமாகும்.அருகிலுள்ள நாகநாதசுவாமி கோயிலின் இரண்டாவது பிரகாரத்தின் தென்மேற்கு மூலையில் நாகவல்லி, நாகக்கன்னி ஆகிய தன் இரு தேவிமாருடன் மங்கள ராகுவாக தனிக்கோயிலில் அமர்ந்து காட்சி அளிக்கின்றார். இவருக்கு உகந்த நிறம் நீலம் என்பதால் அணிகின்ற ஆடையின் நிறமும் நீல நிறமே. அபிஷேகத்தின் போது, அவரின் தலையின் மீது ஊற்றப்படும் பால் தலையிலிருந்து வழிந்து உடல் மீது வரும் போது பாலின் நிறமும் நீலமாகி விடுகின்ற அதிசயத்தைப் பார்க்கலாம். இவருக்கு உகந்த மலர் மந்தாரையாகும்.
1986ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 16ஆம் நாள் ராகு பகவானின் மீது ஐந்தரை அடி நீளமுள்ள நாகமானது தனது சட்டையை மாலையாக இராகு பகவானுக்கு அணிவித்து இவரது பெருமையை உலகிற்கு உணர்த்தியது. இது இறைவனைத் தரிசிக்க வரும் பக்தர்களின் பார்வைக்குக் காட்சிப் பொருளாக கண்ணாடிப் பேழைக்குள் வைக்கப்பட்டுள்ளது.
பாதாள லோகத்திலிருந்து நாகங்களின் தலைவனான ஆதிசேஷன் ஒருமுறை சிவபெருமானை வேண்டித் தொழுவதற்காக இந்த சண்பகவனம் வந்தான். ஆதிசேஷனின் இடையறாத தவத்தில் மகிழ்ந்த சிவபெருமான் அவனுக்கு காட்சியளித்தார். எனவே நாகராஜனுக்கு அருளிய மூலவர் நாகநாதசுவாமி என அழைக்கப்பட்டார். அவன் உருவாக்கிய தீர்த்தம் நாகதீர்த்தம் ஆனது. நாக தோஷம் உள்ளவர்கள் இங்கு வந்து பரிகாரம் செய்து கொள்ளலாம்.