

சீதளா அம்மன் அல்லது சீதளா தேவியென மக்களால் வழிபடுகின்ற அம்மன், நோய் நிவாரண சக்தி கொண்ட தெய்வம். கோடை காலத்தில் அதிக வெப்பம் காரணமாக, அம்மை நோய் மக்களைத் தாக்குவதுண்டு. இதிலிருந்து காத்துக்கொள்ள, மாரியம்மனை வழிபடுவது வழக்கம். சப்தமி திதியிலிருந்து ஆரம்பிக்கும் இந்த வழிபாட்டில், கூழ் வார்ப்பது, மலர்களால் அம்மனை அலங்கரிப்பது ஆகியவை தேவி கோவில்களில் நடைபெறும்.
இதன் பின்னணி
ஜுவராசுரன் என்ற அரக்கன் ஒரு சமயம், குழந்தைகளின் மீது விஷக்கிருமிகளை பரவ விட்டு, அதன் வாயிலாக, காலரா, அம்மை போன்ற நோய்களை உருவாக்கினான். பயந்து போன மக்கள் தேவியை வேண்ட, பார்வதி தேவியே, சீதளா தேவியாக மாறி, குழந்தைகளின் நோய்களை நீக்கி அருள் புரிந்தாள். அனைவரும் தேவியை தாயாக எண்ணி வழிபட ஆரம்பித்தனர்.
சீதளா தேவி, கன்னிகா ஸ்வரூபிணியாகத் திகழ்பவள். தலையில் முறத்தை கிரீடமாக அணிந்து, ஒரு கையில் அமிர்தக் கலசத்தை ஏந்தி காட்சியளிப்பவள். சகல சக்திகளுக்கும் அதிபதியாக விளங்கும் அம்மன், தன்னுடைய குளிர்ச்சியான பார்வையால், மக்களின் வெப்ப நோய்களை நீக்குகிறாள்.
சீதளா தேவி கோவில்கள்
சென்னை மடிப்பாக்கத்தில் உள்ள சீதளா தேவி கோவில் பிரசித்தமானது. சீதளா தேவி, ராகவன் குருஜி என்பவரின் கனவில் தோன்றி தனக்கு மடிப்பாக்கத்தில் கோவில் கட்ட பணிக்க, அவரும் தேவியின் உத்தரவை நிறைவேற்றினார். கும்பாபிஷேகமும் நடத்தப்பட்டு, ஆயிரக்கணக்கான மக்கள் வந்து தரிசித்து நோய் நீங்கிச் செல்கின்றனர். வருடந்தோறும் வரும் சித்ரா பௌர்ணமி, குளிர் நிலவுத் திருவிழாவென விமரிசையாக நடத்தப்பட்டு நிறைமணி, சந்தனக் காப்பு அலங்காரம் சீதளா தேவிக்கு செய்யப்பட்டு வருகின்றன.
ராஜஸ்தானில் உள்ள சீதளா தேவி கோவில் குருகிராம் (குர்கான்) பகுதியில் அமைந்துள்ள மிகவும் புகழ்பெற்ற சக்தி பீடங்களில் ஒன்றாகும். இது அம்மை, காய்ச்சல் போன்ற வெப்ப நோய்களைத் தீர்க்கும் அம்மனாக வழிபடப்படுகிறது. இந்த கோவில் குர்கானின் குலதெய்வமாக கருதப்படுகிறது.
திருவாரூர் காகிதக் கார வீதியில் அமைந்துள்ள சீதளா தேவி மாரியம்மன் கோவில் புகழ் பெற்ற தலமாகும். உடல் மற்றும் மன வெப்பத்தைத் தணிக்கும் இக்கோவில், திருவாரூர் தியாகராஜர் கோயிலின் தென்கிழக்கு திசையில் வடக்கு நோக்கி அமைந்துள்ளது. நோய்களை நீக்கும் சீதளா தேவி கோவில் வளாகத்தில் இருக்கும் வேப்ப மர இலைகள் தேன் போன்று இனிப்பது அதிசயமானதாகும்.
சீதளாதேவி மூல மந்திரம்
ஓம் ஹ்ரீம் ஸ்ரீம் சீதளாயை நம ஹ !
சீதளே தும் ஜகன்மாதா;
சீதளளே தும் ஜகத் பிதா;
சீதளே தும் ஜகத் தாத்ரீ;
சீதளே நமோ நமஹ!
இம்மந்திரத்தை செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் முடிந்தவரை ஜெபிப்பது நன்மையளிக்கும்.