

மஹான் ஸ்ரீ சாயிபாபா ஷீரடியில் இருந்தபோது அவர் மகிமையைப் பற்றிக் கேள்விப்பட்டு அவரை தரிசிக்க ஆவலோடு தினந்தோறும் ஏராளமான பக்தர்கள் மகாராஷ்டிர மாநிலத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து வந்த வண்ணம் இருந்தனர். அதே சமயத்தில் அவர் தெய்வீகத் தன்மை மீதும், அவர் நடத்தும் அற்புதங்கள் (Shirdi Sai Baba miracles) மீதும் சந்தேகம் கொண்டு அவரைச் சோதிக்கவென்றே ஷீரடி வந்தவர்களும் இருந்தனர்.
காகா மஹாஜனியின் நண்பரொருவர் பாபாவின் லீலைகளைக் கேள்விப்பட்டு, காகா மஹாஜனியிடம் மிகுந்த பக்தியுடன் "ஷீரடி சாயி பாபா கடவுளின் அவதாரமே!" என்று பரவசமாகப் புகழ்ந்து கேட்டார். அது உண்மைதானா என்று பாபாவை சோதித்துப் பார்ப்பதற்காகவே ஒருமுறை காகா மஹாஜனி ஷீரடிக்குப் புறப்பட்டபோது தானும் கூடவே கிளம்பினார். ஆனால் அவரிடம் சில நிபந்தனைகளை விதித்தார்.
"நான் ஷீரடிக்கு வந்து வெறுமே நீங்கள் பலவாறு புகழ்ந்து கூறும் அந்த சாதுவை தரிசனம் செய்வேன். என்னால் அவரை வணங்கவோ தட்சிணை கொடுக்கவோ முடியாது!" என்றார். காகா மஹாஜனியும் ஒத்துக் கொண்டு இருவரும் ஷீரடிக்குக் கிளம்பினார்கள்.
மசூதிப்படிகளில் அவர்கள் அடியெடுத்து வைத்தவுடனேயே பாபா அந்த நண்பரை தூரத்திலிருந்தே பார்த்து, "ஐயா! வந்தாயா அப்பா!" என்று மிக இனிமையாகக் கூப்பிட்டார். ஆனால் காகா மஹாஜனியின் நண்பருக்கு அது மறைந்த தன் தந்தையின் குரலைப் போலவே ஒலித்தது. 'இது என் தந்தையின் குரலே தான்! சந்தேகமேயில்லை. அவர் தான் அழைக்கிறார்!' அவர் மனம் புல்லரித்துப் போய் தான் விதித்த நிபந்தனையை மறந்து விரைந்து படியேறிப் போய் பாபாவின் பாதங்களில் வீழ்ந்து வணங்கினார். பாபாவின் தரிசனத்தில் மனமுருகி மெய்மறந்தார்.
இது போன்ற நோக்கத்துடன் ஷீரடிக்கு வந்த மற்றொருவர் டக்கர் என்பவர். இவர் காகா மஹாஜனியின் முதலாளி. காகா மஹாஜனி அடிக்கடி ஷீரடிக்குப் போவதும், அங்கேயே சில நாட்கள் தங்குவதும் அவர் முதலாளிக்கு மிகுந்த வியப்பையளித்தது. அப்படி அங்கு என்ன தான் அற்புதம் நடக்கிறது என்பதைப் பார்ப்பதற்காகவே அவரும் ஒருமுறை காகா மஹாஜனியுடன் ஷீரடிக்குக் கிளம்பினார். காகா மஹாஜனி பாபாவிடம் சமர்ப்பிக்க இரண்டு சேர் திராட்சையை வாங்கினார்.
ஷீரடியில் காகா பாபாவின் முன் வீழ்ந்து பணிந்து திராட்சையை சமர்ப்பித்தார். பாபா திராட்சையை விநியோகிக்கக் கட்டளையிட்டார். டக்கருக்கும் சில திராட்சைகள் கிடைத்தன. அவருக்குக் கொட்டையுள்ள திராட்சை பிடிக்காது. அது மட்டுமல்ல திராட்சை பழத்தை நன்றாகக் கழுவி விட்டுத்தான் உண்ண வேண்டும் என்று டாக்டர்கள் சொல்லியிருக்கிறார்கள். எனவே விருப்பமில்லாமல் திராட்சைகளை வாயில் போட்டுக் கொண்டார்.
கொட்டைகளை மசூதித் தரையில் துப்ப மனம் வராமல் தன் சட்டைப்பையில் போட்டுக் கொண்டார். அவர் நினைத்தார், 'பாபா பெரிய மகானாக இருந்தால் கொட்டையுள்ள திராட்சை மேல் தனக்குள்ள வெறுப்பை எவ்வாறு அவரால் அறியாமலிருக்க முடியும்?' என்று.
அப்போது பாபா அவருக்கு மீண்டும் சில திராட்சைகளை உண்ணக் கொடுத்தார். டக்கர் அவற்றை உண்ண விருப்பமின்றி கையிலேயே வைத்துக் கொண்டிருந்தார். பாபா அவரைப் பார்த்து திராட்சையை உண்ணும்படி சொன்னார். வேறு வழியின்று டக்கரும் கீழ்ப்படிந்தார். என்ன ஆச்சரியம்! அவர் இப்போது உண்டது கொட்டையில்லாத திராட்சை. அற்புதங்களை அவர் காண விரும்பினார். இதோ ஒன்றைக் கண்டாகி விட்டது. பிறர் உள்ளத்தில் இருப்பதை உணரும் ஞானி பாபா என்று புரிந்து கொண்டார்.
இவ்வாறு பாபாவின் மேல் அவநம்பிக்கையும் சந்தேகமும் கொண்டோரின் ஐயங்களெல்லாம் முற்றிலுமாகத் தீர்க்கப்பட்டு அவர்களுக்கு பாபா மேல் நம்பிக்கையும் பக்தியும் ஏற்பட்டு பிற்காலத்தில் மிகச் சிறந்த பக்தர்களாகத் திகழ்ந்தார்கள் என்கிறார் ஸ்ரீ ஷீரடி சாயி சரிதத்தை எழுதிய ஸ்ரீ ஹேமத்பந்த்.