ஆடி மாதத்தில் அம்மன் கோயில்களில் கூழ் ஊற்றுவது என்பது ஒரு பாரம்பரிய வழக்கம்.
ஆடி மாதம் வந்து விட்டாலே அம்மன் கோவில்களில் திருவிழாக்கள் வரிசைக் கட்டி வரும். அதில் முக்கியமானது அம்மன் கோவிலில் ஊற்றப்படும் கூழ் .
ஆடியில் அம்மனுக்கு கூழ் செய்து பக்தர்களுக்கு வழங்கினால் அன்னையின் மனம் குளிர்ந்து அருள்தருவாள் என்பது ஐதீகம்.
அம்மனின் அருள் கிடைக்க வழிபடுவதற்கும் ஆடி மாதத்தில் வீசும் காற்றின் வேகத்தால் ஏற்படும் நோய்களைத் தவிர்க்கவும் ஆடி கூழ் ஊற்றப்படுகிறது. ஆடி கூழ் ஊற்றுவதன் மூலம் அம்மை நோய் போன்ற நோய்கள் வராமல் தடுக்கப்படும் என்பது நம்பிக்கை.
குறிப்பாக அம்மன் கோவிலில் பூக்குழி இறங்குவது செடல் உற்சவம் , தீக்குழி, காவடி எடுப்பது, கஞ்சி ஊற்றுவது என்று ஆடி வெள்ளி ஞாயிறுகளில் தெருக்கு, தெரு திருவிழா கொண்டாடுவார்கள்
ஆன்மீக காரணங்கள்
ஆடி மாதத்தில் அம்மனை வழிபடுவதன் மூலம் பல்வேறு நன்மைகள் கிடைக்கும் என்பது நம்பிக்கை .
கூழ் ஊற்றுவதன் மூலம் அம்மனின் அருள் கிடைக்கும். மேலும் கூழ் அம்மனுக்கு பிடித்தமான உணவாக கருதப்படுகிறது.
கூழ் ஊற்றுவது ஒரு சமூக நிகழ்வாகவும் கருதப்படுகிறது. கிராமப்புறங்களில் கூழ் ஊற்றும் திருவிழாக்கள் மிகவும் உற்சாகமாக கொண்டாடப்படுகின்றன. இது ஊர் மக்கள் கூடி மகிழும் ஒரு ஆன்மீக விழாவாகவும் அமைந்துள்ளது.
கூழ் தயாரிக்கும் முறை
ஆடி கூழ் பொதுவாக அரிசி, கேழ்வரகு, சோளம் போன்ற தானியங்களால் தயாரிக்கப்படுகிறது.
இதனுடன் சின்ன வெங்காயம், சீரகம், மிளகு, அதிமதுரம் போன்ற மருத்துவ குணங்கள் உள்ள பொருட்களும் சேர்க்கப்படுகின்றன.
கேழ்வரகு மற்றும் கம்பில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகம் உள்ளது .
அதோடு கம்பை உண்பதால் உடலில் குளிர்ச்சி ஏற்படும் என்பதால், இந்த சமயத்தில் கம்பு மற்றும் கேழ்வரகு பயன்படுத்தி கூழ் செய்து அருந்தி வருகின்றனர்.
முன்னோர் காலத்தில் இந்த ஆடி மாதத்தில் தான் கடும் பஞ்சமும் நிலவியது. இந்த பஞ்சத்திற்கு ஒரு முடிவு கட்ட நினைத்த பெரியோர்கள் கடவுளை இந்த விஷயத்தில் முன் நிறுத்த தொடங்கினார்கள்.
அம்மனின் அருள்
பஞ்சம் போகவும் பயிர் செழிக்கவும், தட்ப வெப்ப நிலை மாறி நோய்கள் தீரவும் மழை அவசியம் என்பது மக்களிடம் கூறி மாரி அம்மன் தாயை வணங்கச் செய்தனர். கம்பு ,கேழ்வரகு இருப்பு வைத்துள்ளவர்கள் அனைவரையும் அம்மனுக்கு கூழ் ஊற்றும் படிசெய்தனர். இதனால் ஏழை எளிய அனைவரும் கூழைப் பற்றி அறிந்தனர். இப்படி ஊர் ஊராக வெவ்வேறு நாட்களில் கூழ் ஊற்றப்பட்டது.
இதனால் பஞ்சம் நீங்கியது நோய்களும் குறைந்தது. அம்மன் மாரி தாயின் அருளால் மழையும் பெய்தது. நோய்களும் நீங்கியது.
ஆன்மீகத்தையும் மருத்துவத்தையும் எவ்வளவு நுட்பமாக ஒன்றிணைத்து கையாண்டிருக்கிறார்கள் நம் முன்னோர்கள் .
ஆடிக்கூழ் செய்யும் முறை.
கேழ்வரகு மாவு -ஒரு கப்
பச்சரிசி - 1/4 கப்
தண்ணீர் - 2 கப்
தயிர் -ஒரு கப்
சின்ன வெங்காயம் - இரண்டுஸ்பூன் பொடியாக நறுக்கியது .
பச்சை மிளகாய் -ஒன்று
உப்பு -தேவையானது
செய்முறை
ஒரு பெரிய பாத்திரத்தில் அரைத்த கேழ்வரகு மாவை போட்டுக்கொள்ள வேண்டும். நீரை அந்த பாத்திரத்தில் ஊற்றி கேழ்வரகு கட்டி இல்லாமல் நன்கு கலக்க வேண்டும்.
பச்சரிசியை மிக்ஸியில் போட்டு மாவாக அரைக்க வேண்டும். இந்த அரிசி மாவை மற்றொரு பெரிய பாத்திரத்தில் போட்டு அதில் இரண்டு கப் நீரை ஊற்றி அடுப்பில் வைத்து கொதிக்க வைத்து கைவிடாமல் கிளற வேண்டும். கஞ்சி மாதிரி காய்ச்ச வேண்டும்.
கஞ்சி பதத்தில் பச்சரிசி மாவு வெந்தவுடன் அதை கேழ்வரகு மாவு கலவையில் ஊற்றி அதனுடன் தேவையான அளவு உப்பு சேர்த்து இளம் சூட்டில் இந்த கேழ்வரகு ,பச்சரிசி மாவு அளவு கட்டியில்லாமல் கரண்டியை கொண்டு கலக்க வேண்டும். சரியான பதத்தில் வந்தவுடன் இறக்கி ஆறியவுடன் தயிரை ஊற்றி நன்கு கலக்கி சின்ன வெங்காயம், பச்சை மிளகாய் போன்றவற்றை சிறு துண்டுகளாக நறுக்கி கூழில் போட்டு கலக்கி வைக்க வேண்டும்.
இந்தக் கூழை பிறருக்கு வழங்கும் முன்பு வீட்டின் பூஜை அறையை சுத்தம் செய்து பீடத்தில் சிறிய அம்மன் படத்தின் முன் வைத்து, குத்து விளக்கேற்றி, சிறிது வேப்பிலை வைத்து இந்த கூழை அம்மனுக்கு நெய்வேத்தியம் செய்துவைத்து வணங்க வேண்டும். பின்பு நாமும் மற்றவர்களும், இந்தக் கூழை தெய்வ பிரசாதமாக அருந்தலாம். இதை அம்மனுக்கு படைத்து உணவாக கொள்ள வேண்டும். கோவில்களிலும் கேழ்வரகு, பச்சரிசி வாங்கி கொடுத்து பிரசாதம் பெறலாம்.
ஆடியில் அம்மனுக்கு கூழ் படைத்து அருள் பெறுவோம்.