கிராம்பு ஏலக்காய் மாலைக்கு இத்தனை சக்தியா?

கிராம்பு ஏலக்காய் மாலைக்கு இத்தனை சக்தியா?

தாயார் மகாலக்ஷ்மியின் அம்சம் சில பொருட்களில் இருப்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்றுதான். அதில் கிராம்பு மற்றும் ஏலக்காய் போன்றவையும் அடங்கும். இதை சமையலுக்குப் பயன்படுத்துவதால் சாதாரண பொருள் ஆகிவிடாது. கிராம்பும், ஏலமும் மூலிகை வகையை சார்ந்த தாவரங்கள். மஹாலக்ஷ்மி தாயாருக்கு மிகவும் விருப்பமான பொருட்களில் இவை அடங்கும்.

சிலருக்கு செல்வத்தின் மேல் பிரியம் அதிகளவு இருக்கும். இது எல்லாருக்கும் இருப்பதுதான். யாருக்குத்தான் செல்வந்தராக விருப்பமில்லாமால் இருக்கும்? ஆனால், தன் குடும்பத்தில் லக்ஷ்மி தேவி நிரந்தரமாக வாசம் செய்ய அவர்களுக்கு அதிகமாக ஆசை இருக்கும். மகாலக்ஷ்மியை வசியம் செய்ய பலவிதமான வழிகள் உண்டு. பணம் சம்பாதிப்பது கடினமான காரியம் என்றால், அதைவிட சேர்த்த பணத்தை நிலைக்க வைப்பது கடினமானதாக இருக்கிறது. ஒரு பக்கம் பணம் வந்து கொண்டே இருந்தாலும் மறுபக்கம் அது நிலைக்காமல் தேவையற்ற வழிகளில் கரைந்து கொண்டே இருக்கும். அடிக்கடி மருத்துவ செலவுகள் ஏற்படுதல், யந்திரங்கள் பழுது பார்த்தல், வண்டி, வாகன செலவுகள் என்று எதிர்பாராத செலவுகள் வந்து கொண்டே இருக்கும். இதற்குக் காரணம் அப்படிப்பட்ட இல்லத்தில் மஹாலக்ஷ்மியின் அருள் இல்லை என்பதுதான் பொருள். மகாலக்ஷ்மியின் அருளை பெறுவதற்கு சுலபமான வழிபாடு ஒன்று உள்ளது.

வெள்ளிக்கிழமையில் நீங்கள் வழக்கமாக செய்யக்கூடிய பூஜைக்கான ஏற்பாடுகளை செய்தபின், குத்து விளக்கு ஒன்றை தனியே பூஜையில் வைக்கவும். விளக்குக்கு மஞ்சள், குங்குமம் இட்டு, மலர்களால் அலங்காரம் செய்து வைத்து கொள்ளவும். விளக்கின் பாதத்தை சுற்றி பூக்களால் அலங்காரம் செய்து வையுங்கள். பூக்களில் மல்லிகை கட்டாயம் இருக்குமாறு பார்த்துக் கொள்ளவும். பின்னர் கிராம்புகளை 54 அல்லது 108 என்ற எண்ணிக்கையில் எடுத்துக் கொள்ளுங்கள். அதே எண்ணிக்கையில் ஏலக்காயையும் எடுத்துக் கொள்ளுங்கள். ஏலக்காயை ஊசி, நூல் கொண்டு கோர்த்து மாலையாக செய்து கொள்ளுங்கள். கிராம்பை பூ கட்டுவது போன்று ஒவ்வொன்றாக வைத்து கட்டிக் கொள்ளுங்கள். விளக்கின் முன் நைவேத்யமாக சர்க்கரைப் பொங்கல், காய்ந்த திராட்சை முத்துக்கள், மாதுளம் பழம் 1, நெல்லிக்கனிகள் 5 இவற்றை ஒரு தட்டில் வைத்துக் கொள்ளுங்கள். வெற்றிலை பாக்கு, பழம் வைத்து அதன் மீது 501 ரூபாய் காணிக்கை வைக்கவும். இந்த இரண்டு மாலைகளையும் விளக்குக்குச் சாற்றி விளக்கின் ஐந்து முகங்களிலும் தீபமேற்ற வேண்டும். தீபம் ஏற்ற வேண்டிய நேரம் காலை 6 முதல் 7 மற்றும் இரவு 8 முதல் 9 மணிக்குள் இருப்பது நன்று. தீபம் ஏற்றும்போது மஹாலக்ஷ்மி ஸ்லோகத்தை வாசிப்பது சிறப்பு.

இந்த வழிபாட்டை தொடர்ந்து 21 வாரங்கள் முறையாக செய்து வருவதன் மூலம் குபேர யோகத்தை அடையலாம் என்று சாஸ்திரத்தில் கூறப்பட்டுள்ளது. இதனால் மஹாலஷ்மியின் அருள் பரிபூரணமாக உங்களுக்குக் கிடைக்கும். கிராம்பு, ஏலக்காய் மாலையை மாற்ற வேண்டிய அவசியம் இல்லை. அதன் நிறமும், மணமும் மாறும் பட்சத்தில் மாற்றிக் கொள்ளலாம். இந்த பூஜையை வெள்ளிக்கிழமையில் செய்ய முடியாதவர்கள் பௌர்ணமி தினத்தில் செய்யலாம். தாயார் மஹாலக்ஷ்மி உங்கள் வீட்டில் நித்ய வாசம் செய்ய இந்த பூஜை முறை சிறந்த பலன் அளிக்கும் என்பதில் சந்தேகம் இல்லை. முழு நம்பிக்கையோடு செய்து பயனடையுங்கள்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com