

கதை 1: துறவியின் சொம்பு
துறவி ஒருவர் ஆற்றில் நீராடச் சென்றார். தன் கையில் இருந்த சொம்பை நீராடி விட்டு வரும் வரையில் பாதுகாப்பாக வைக்க எண்ணி, ஆற்றங்கறியை மணலைத் தோண்டி, சொம்பை புதைத்து விட்டு, இடம் அடையாளம் தெரிவதற்காக அதன் மேல் மணலால் கோபுரம் செய்துவிட்டு குளிக்கச் சென்றார்.
அதைப் பார்த்துக் கொண்டிருந்த ஒருவன், இந்தத் துறவி இவ்வாறு செய்வது ஆற்றில் குளிப்பதற்கு முன் செய்ய வேண்டிய சாஸ்திர சம்பிரதாயம் போல என நினைத்து, தானும் அதுபோல தன் சொம்பை புதைத்து கோபுரம் செய்துவிட்டு நீராடச் சென்றான்.
அவர்களைத் தொடர்ந்து அங்கு வந்த அனைவரும் அதே 'சம்பிரதாயத்தை'த் தொடர்ந்தனர்.
முதலில் கோபுரம் செய்த துறவி, வந்து பார்த்து அதிர்ச்சி அடைந்தார். நூற்றுக்கணக்கான மணல் கோபுரங்கள் இருந்ததால், தான் கட்டிய கோபுரம் எது எனத் தெரியாமல் விழித்தார்.
இன்று இது போலத்தான் பலர் சாஸ்திர, சம்பிரதாயங்களையும் சடங்குகளையும் அர்த்தம் புரியாமல் செய்து வருகின்றனர் என்று நொந்தவாறே வெறும் கையுடன் திரும்பினார் துறவி.
கதை 2: குருவின் அவசியம்
சீடன் ஒருவன் தன் குருவிடம் கேட்டான்.
"சுவாமி..! குருவின் துணையின்றி ஒருவன், இறைவன் அருளையும், ஞானத்தையும் பெற முடியாதா..?"
அதற்கு அந்த குரு, ஒரு சிறிய கல்லை எடுத்து நீரில் போட்டார். அது வேகமாக நீரில் மூழ்கியது. பிறகு ஒரு மரப்பலகையை நீரில் மிதக்க விட்டு, அதன் மேல் அதே கல்லை மெதுவாக வைத்தார்.
இப்போது அந்த மரப்பலகை இருந்த தயவால் கல்லும் மிதந்தது.
"இதுபோலத்தான்.. பிறவிப் பெருங்கடலில் மூழ்காமல் தப்பி, இறைவனின் திருவருளைப் பெற வேண்டுமெனில் ஒரு குருவின் துணை மிக மிக அவசியம்.." என்றார் குரு.
சீடன் குருவின் காலடியில் சரணடைந்தான்.