

கதை 1: சுவை தேடிய நாக்கு:
ஞானோபதேசம் பெறுவதற்காக ஒரு ஞானியிடம் சீடனாக சேர்ந்தான் ஒருவன். கல்வி கற்பதில் கண்ணும், கருத்துமாக இருந்தான்.
வழக்கம் போல அன்று உணவு உண்ண அமர்ந்தான். உணவும் பரிமாறப்பட்டது. சோற்றினை வாயில் வைத்த அவன் முகம் அஷ்ட கோணலானது. "என்ன சமையல்காரரே; சோற்றில் நெய்க்கு பதிலாக வேப்ப எண்ணெயை ஊற்றி விட்டீரே..!" என்று கேட்டான்.
ஞானி சிரித்துக் கொண்டே, "நீ இங்கு வந்து சேர்ந்த நாள் முதல் இன்று வரை உனக்கு சாப்பாட்டில் வேப்ப எண்ணெய் தான் ஊற்றப்பட்டது. உன் கவனம் முழுவதும் கல்வியிலேயே இருந்ததால் உன் நாக்கு சுவை அறியவில்லை. இப்போது உன் கவனம் படிப்பில் குறைந்துவிட்டது. அதனால்தான் உன் நாக்கு வேப்ப எண்ணெயைக் கண்டறிந்தது. எப்பொழுது உன் நாவு சுவை தேடத் தொடங்கி விட்டதோ, அப்போதே உன் படிப்பு முடிந்து விட்டது. இனி உனக்கு இங்கே இடமில்லை.. நீ வீட்டுக்கு செல்லலாம்..!" என்றார்.
கதை 2: அறிவும் அடக்கமும்
ஒரு மகானிடம் ஒரே மாதிரியான தகுதி, திறமை கொண்ட இரு சீடர்கள் இருந்தனர். வயதாகிக் கொண்டே போவதால், தனக்குப் பின் ஆசிரமத்தை கவனித்துக் கொள்ளும் பொறுப்பை, அந்த இருவரில் ஒருவனைத் தேர்ந்தெடுத்து, அவனிடம் ஒப்படைத்தார்.
மகானுடைய நண்பர் கேட்டார், "சுவாமி.. இருவரிடமும் ஒரே மாதிரியான தகுதியும், திறமையும் இருந்தும், எப்படி இவனை மட்டும் தேர்ந்தெடுத்தீர்கள்..?"
மகான் புன்னகைத்துக் கொண்டே, "விளக்கு, தீப்பந்தம் ஆகிய இரண்டிலுமே நெருப்புதான் இருக்கிறது.. ஆனால் விளக்கை மட்டும்தானே வணங்குகிறோம்.. அப்படித்தான் இவ்விருவரிடமும் சமமான தகுதி இருந்தாலும், இவனிடம்தான் பணிவும், ஒழுக்கமும் இணைந்து இருக்கிறது.. அறிவு மட்டும் இருந்தால் போதாது. அடக்கமும் அவசியம்.." என விளக்கினார்.