

திரேதாயுகத்தில் வாமதேவர் என்ற முனிவர் வாழ்ந்து வந்தார். அவர் மகா யோகியும் ஆவார். அவர் சிவபக்தர் ஆகையால் உடல் முழுவதும் விபூதி பூசியிருப்பார். ஒருநாள் அவர் வனத்தின் வழியே செல்லும்போது பிரம்மராட்சசன் ஒருவன் பிடித்துக் கொண்டான்.
அவர் தப்பி விடாமல் இருக்க அவரைக் கட்டிப் பிடித்ததால் அவர் உடலில் இருந்த விபூதி பிரம்மராட்சசனின் உடம்பிலும் ஒட்டிக் கொள்ள அவன் மனித உருகொண்டு அவர்முன் நின்றான். திகைத்துப் போன அவன் அவரை வணங்க அவர் அவனுடைய பூர்வக்கதையைக் கேட்டார்.
தான் முற்பிறவியில் துர்ஜயா எனும் பெயரில் கொடுமைக்கார மன்னராக இருந்து பெண்களை பலவந்தப்படுத்தி அனுபவித்தும், ஆசைநாயகிகள் வைத்தும் கேவலமாக இருந்ததால் இறந்தபிறகு நரகத்திற்கு செல்ல வேண்டி இருந்தது. அதன்பின் நாயாக, பேயாக பலசித்திரவதைக்கு ஆளாகி பிரம்மராட்சசனாக 25வருடங்கள் வாழ்ந்ததாக சொல்லி, வாமதேவரால் சாப விமோசனம் கிடைத்ததற்கு நன்றி கூறினான்.
தனக்கு எப்படி சாப விமோசனம் ஏற்பட்டது என்று கேட்க, அவன் முனிவரை கட்டிப்பிடித்த போது அவர் உடம்பில் ஒட்டிக் கொண்ட விபூதியால் சாபவிமோசனம் கிடைத்ததாக கூறினார். மேலும் அவன் சிவபெருமான் மற்றும் விபூதி மகிமை பற்றி கேட்க அவரும் கூறினார்.
முன்னொரு காலத்தில் பிராமணன் ஒருவன் எந்த வித நியமங்களும் இல்லாமல் கேவலமாக வாழ்ந்தான். அவனை மக்கள் வெறுத்து கொலைசெய்து ஊருக்கு ஒதுக்குபுறமாக விட்டுவிட்டார்கள். அவன் உடலை தெருநாய் ஒன்று குதறியது. அந்த நாய் மயான பிணங்களை தின்னும் பழக்கம் உள்ளது. அதன் உடலில் மயான பஸ்பம் ஒட்டிக் கொண்டிருந்தது. ராட்சசனை குதறும் போது, பஸ்பம் அவன் உடலில் பட்டது. யமதூதர்கள் இறந்தவனை கொண்டு செல்ல வந்தனர். அதேநேரத்தில் சிவதூதர்களும் அவனை சிவலோகம் அழைத்துச் செல்ல வந்தனர்.
இருவருக்கும் சண்டை நடந்ததது. பின் யமதூதர்கள் யமனிடம் செல்ல, யமனே நேரில் வந்து, 'ஒழுக்கம் கெட்டவனை எப்படி சிவலோகம் கொண்டு செல்லலாம்' என்று கேட்க, சிவகணங்கள் சிவபெருமான் கொடுத்துள்ள உத்தரவுபடி, எவன் உடலில் பஸ்பம் உள்ளதோ, அவன் ருத்ராட்சம் சூட்டப்பட்டு சிவலோகம் செல்ல வேண்டும் என்றுகூற, யமன் தடுக்கவில்லை. அவன் சிவலோகம் சென்றான்.
அதுமுதல் இறந்து போனவர்களின் உடலில் பஸ்பம் ருத்ராட்சம் அணியக்கூடாது என்ற நியமம் ஏற்பட்டது. வாமதேவர் சிவபெருமான் அம்சமாக கருதப்படுகிறார். வாமதேவர் கூறிய கதையை கேட்ட பிறகு, பஸ்பத்தின் மகிமை குறித்து ராட்சசன் கேட்டான்.
அதில் பசுவின் சாணம், ஹோமங்களில் எரிக்கப்படும் பொருட்கள் மற்றும் இறந்து போனவர்களின் உடல் கூட அடக்கமாகும். மந்தரமலைமீது தேவ கணங்கள் ஒருமுறை கூடியிருந்தார்கள். அதில் பார்வதியும் சிவனும் பங்கேற்றனர். ஏழு பொருட்களான தங்கம், ரத்னம், நீலமணி, புஷ்பராகம், வைடூர்யம் பச்சைகற்கள் போன்றவற்றைக் கொண்டு அமைக்கப்பட்டிருந்த ஆசனத்தில் பத்து கரங்களுடன் சிவபெருமான் அமர்ந்திருக்க, அவருடைய உடல் முழுவதும் பஸ்பம் தீட்டப்பட்டு இருக்க, பாம்பை கழுத்தில் மாலையாகவும், கங்கையும் பாதி நிலவும் கொண்டையில் இருக்க, உடுக்கை, பாசம் கத்தி, வேல், அங்குசம் போன்றவை மற்ற கரங்களில் ஏந்தி இருந்தார்.
அங்கு வந்த சனத் குமாரர்கள் சிவனிடம், "மகாதேவனே, மனிதகுலத்திற்கு தர்ம, அர்த்த, காம, மோட்ச என்ற நான்கு நிலைகளைக் தந்துள்ளீர்கள். அவற்றைப் பயின்று சம்காரத்திலிருந்து எப்படி வெளியே வரமுடியும் என்பதை எங்களுக்கு விளக்க வேண்டும்" என்றார்கள்.
அதற்கு சிவபெருமான், "நான் மூன்று வரிகளைக் கொண்ட பஸ்மத்தை நெற்றியிலும் உடலிலும் பூசியுள்ளேன். அப்படியே நீங்கள் அனைவருமே அதைப் பூசிக் கொண்டு இருந்தால் உங்களது பாபங்கள் அழிந்து போகும். இதை அணிபவர்க்கு முக்தி கிடைக்கும்" என்று கூறினார். இவற்றை எல்லாம் கேட்ட பிரம்மராட்சசன் விபூதியால் சாபங்கள் நீங்கி தன் பழைய உருவத்தைப் பெற்றான்.