

அகத்தியர் சித்த மருத்துவத்தின் ஆசான் மற்றும் சப்தரிஷிகளின் முதன்மையானவர் ஆவார். இவர் மிகச்சிறந்த மாமுனிவர். இவருடைய தந்தை மித்ரா வர்ணா மற்றும் தாய் தேவலோக மங்கை ஊர்வசி ஆவர். அகத்தியரின் பங்களிப்பு தமிழ் இலக்கணமான அகத்தியம், மருத்துவம், யோகம், ஜோதிடம் ஆகிய துறைகளில் ஈடு இணையற்றதாக விளங்கியது. இவ்வாறு பல திறமைகளைக் கொண்டவராக அகத்திய முனிவர் விளங்கினார்.
புராண காலத்தில் விருத்ரா சுரன் என்ற அசுரன் இருந்தான். அவனும் அவனுடைய படை வீரர்களான காலகேயர்களும் பூலோகத்தில் பல அதர்மங்களை நிகழ்த்தினர். அவர்கள் தேவர்களையும் முனிவர்களையும் மிகவும் அச்சுறுத்தி வந்தனர். தேவர்களின் ஒருவரான இந்திரன் அவனை பல ஆயுதங்களை கொண்டு அழிக்க முயற்சி செய்தார். இருப்பினும் அவன் மரணிக்கவில்லை. இதனால் ததீசி முனிவரால் முதுகெலும்பில் செய்யப்பட்ட வஜ்ராயுதத்தை இந்திரன் பயன்படுத்தினான். அந்த வஜ்ராயுத்தைக் கொண்டு அவன் விருத்ராசுரனை வதம் செய்தான். அவன் மடிந்து விழுந்து மரணித்தான். அவனுடைய படைவீரர்களான காலகேயர்கள் தேவர்களுக்கு பயந்து கடலுக்கு அடியில் பதுங்கி வாழ்ந்தனர்.
அவர்கள் இரவு நேரத்தில் வெளியே வந்து முனிவர்களையும், நல்ல மனிதர்களையும் கொன்று குவித்து பூமியில் அமைதியற்ற நிலையை உருவாக்கி அதர்மங்களை புரிந்து மீண்டும் கடலுக்குள் சென்று மறைந்து வாழ்ந்தனர். இச்செயலை அவர்கள் தினசரி நிகழ்த்தி வந்தனர். காலகேயர்களின் இந்த கொடூரமான வஞ்சக செயலை தேவர்கள் எவ்வாறாவது முறியடிக்க வேண்டும் என்று எண்ணம் கொண்டிருந்தனர். இருப்பினும் அவர்கள் கடலுக்குள் ஒளிந்து கொள்வதால் தேவர்களால் அவர்களை அழிக்க முடியவில்லை.
அவர்கள் விஷ்ணுவிடம் சென்று இதற்கான உபாயத்தை கேட்டனர். விஷ்ணு தேவர்களிடம் "நீங்கள் அகத்திய முனிவரிடம் சென்று உதவி கேளுங்கள். உலகின் நலனுக்காக அவர் உங்களுக்கு நிச்சயம் உதவி புரிவார்," என்று கூறினார்.தேவர்கள் விஷ்ணுவின் உதவினால் அகத்திய முனிவரை நாடினர்.
அகத்திய முனிவர் உலகிற்கு நற்செயல் செய்ய வேண்டும் என்ற காரணத்தினால் அந்த கடலை தன்னுடைய தவ வலிமையினால் ஒரு மடக்கில் குடித்து முடித்தார். பின் காலக்கேயர்கள் இருப்பதை தேவர்கள் பார்த்து அவர்களுடன் போர் புரிந்து காலக்கேயர்களை வதம் செய்து அவர்களின் அநியாய செயல்களை ஒரு முடிவுக்கு கொண்டு வந்தனர்.
இவ்வாறு பல துன்பங்களையும் அநீதிகளையும் விளைவித்த விருத்ராசுரன் மற்றும் காலகேயர்களுக்கு அகத்திய முனிவரின் உதவியினால் தேவர்கள் அவர்களது அநியாய செயலை முறியடித்தனர்.
பின் தேவர்கள் அகத்திய முனிவரிடம் மீண்டும் கடலை நிரப்பும்படி கேட்டுக் கொண்டனர். ஆனால் அகத்திய முனிவர், "நான் பருகிய நீரை செரிமானம் செய்து விட்டேன். பிற்காலத்தில் பகிரதன் என்ற அரசன் அவனுடைய தவ வலிமையினால் ஆகாய லோகத்தில் இருக்கும் கங்கையை பூமிக்கு கொண்டு வருவான். அப்பொழுது இவ்விடம் நிரம்பும்," என்று தேவர்களுக்கு ஆசி வழங்கினார்.
இவ்வாறு அகத்திய முனிவர் தமிழுக்கும், தேவர்களுக்கும், உலக மக்களின் துன்பங்களைப் போக்கி பல நன்மைகளை புரிந்த மாமனிதர் ஆவார். இறைவனை நினைத்து கடும் தவம் புரிந்து வரத்தை பெற்றாலும் அதை தன்னுடைய சுயநலத்திற்காக செலவு செய்யும் பல மனிதர்கள் இடத்தில் அகத்திய முனிவர் தம்முடைய தவ வலிமையினால் உலக நலனை முதன்மையாக கருதியவர் ஆவார்.