

இசை வேளாளர் குலத்தில் சியாமா என்ற பெண்மணியின் மகளாகப் பிறந்தவள் கானோபாத்திரை. நல்ல அழகி. பக்தி மிகுந்தவர். இவளது இனிமையான குரலில் எல்லோரும் மயங்கினார். இசையில் மட்டுமன்றி நாட்டியத்திலும் தேர்ந்தவள் கானோபாத்திரை. அவளது குழந்தை பருவத்திலிருந்து பாண்டுரங்கனை மிகவும் பிடிக்கும். இவளது பாட்டும் நடனமும் பெரும்பாலும் பாண்டுரங்கனைப் பற்றியதாகவே இருந்தது. இவள் பண்டரிநாதனை தன் கணவனாகவே நினைத்து வாழ்ந்தாள்.
பக்தன் ஒரு அடி நடந்தால் பகவான் பல அடிகள் பக்தனை நோக்கி வருவான் என்பார்கள். கானோபாத்திரையோ சதா சர்வ காலமும் பாண்டுரங்கனையே நினைத்து வாழ்ந்தாள். இவளது தாயார் அரண்மனையில் நடனம் ஆடுபவர். கானோபாத்திரையையும் ஆட அழைத்தாள். ஆனால் அவள் அதை விரும்பவில்லை. இவளது ஆடல் பாடலை கோவிலில் பார்த்து மயங்கிய அரசர் ஒருவர் கானோபாத்திரையை மணம் புரிய விரும்பினார். அப்போது பண்டரிபுரம் செல்லும் பஜனைக்குழு ஒன்று இவள் இருக்கும் ஊருக்கு வந்தது. அவர்கள் பஜனையில் கலந்து கொண்ட கானோபாத்திரை அவர்களுடன் பண்டரீபுரம் செல்ல விரும்பினாள். பாண்டுரங்கன் மீது பித்தாக இருந்ததால் பஜனை கோஷ்டி முன் பண்டரிபுரம் சென்று பாண்டுரங்கனை தரிசிக்க விரும்பினாள்.
தாயாரிடம் சம்மதம் கேட்டாள். அவளும் சம்மதிக்க, கானோபாத்திரை தம்புரா சிப்ளாகட்டையை எடுத்துக் கொண்டு அவர்களுடன் யாத்திரை கிளம்பினாள். பண்டரிபுரத்தில் பீமா நதியில் நீராடினாள். ஆடினாள் பாடினாள். அவளுக்கு இந்த பஜனை ஆனந்தத்தை தந்தது.
இவளை மணக்க விரும்பிய அரசன் தன் சேவகர்களை அனுப்பி அவளை இழுத்து வரும்படி கட்டளையிட்டான். அவர்களும் இவளை வரச்சொல்லி அவளிடம் கூற அதற்கு கானோபாத்திரை நான் ஒருமுறை பாண்டுரங்கனனை தரிசித்து விட்டு வருகிறேன். நீங்கள் வெளியை நில்லுங்கள் என்றாள்.
கோவில் உள்ளே சென்றவள், "கண்ணா பிறந்தது முதல் உன்னையே நினைத்து வாழ்கிறேன். என்னை அழைத்துக் கொள்," என்று உருகி பகவானிடம் வேண்டினாள். அப்போது ஆலயமணிகளின் மொத்த ஓசை கேட்டது. சங்கு முழங்கியது வேத ஒலி கேட்டது. பண்டரிநாதன் கண்ணிலிருந்து வந்த ஒளியில் கானோபாத்திரை கலந்து ஐக்கியமானாள். அதன் பிறகு அவளது உடல் அடியற்ற மரம் போல் விழுந்தது. இதைக்கண்ட அர்ச்சகர்கள் அவளை ஒரு குழியில் இட்டு புதைத்தனர். அப்போது அங்கு ஒரு பிரகாசம் தோன்றியது.
கண் சிமிட்டும் நேரத்தில் அங்கு தான்றி என்ற மரம் தோன்றியது. அதில் பச்சை இலைகளும் பூக்களும் தோன்றி பூக்களின் மணம் நாலாபக்கமும் பரவியது.
வெளியே நின்றிருந்த சேவகர்கள் அர்ச்சகர்கள் நடந்ததை கூறியதை நம்பாமல், அவர்களை விலங்கிட்டு அரண்மனைக்கு அழைத்துச் சென்றனர். அர்ச்சகர்கள் மன்னரிடம் நடந்ததை கூறினர். அதை நம்பாமல் கோவிலுக்கு அரசன் வந்தான். திடீரென்று தோன்றிய தான்றி மரத்தைக் கண்டான். அதற்குள் மக்கள் அந்த மரத்துக்கு தீபம் ஏற்றி வழிபடாடுகள் நடத்தத் தொடங்கினர்.
மக்கள் தெய்வமாக போற்றும் கானோபாத்திரையை தவறாக எடை போட்டதற்காக மன்னர் அர்ச்சகர்களிடம் மன்னிப்பு கேட்டுக் கொண்டார். கோவிலுக்கு பொன் பொருட்கள் மற்றும் நிலத்தை காணிக்கையாக எழுதி வைத்தார்.
இன்றும் பண்டரிபுரதில் தான்றி மரத்தைக் காணலாம். இந்த மரம் உள்ள கோவில் வாசலை கானோபாத்திரை வாயில் என்று அழைக்கிறார்கள்.
பகவான் மீது எல்லையற்ற பக்தியை கொண்டிருந்தால், அவர்கள் மீது அளவற்ற கருணை மழை பொழிந்து, அவர்களை பகவான் ஆட்கொள்வார் என்பது இக்கதை மூலம் விளங்குகிறது.