

உடைந்த கல்: பகுதி – 1: மருளும் பொறையும்:
அது பழங்காலம்.
மனிதன் இயற்கையையே இறைவனாக வணங்கிய காலம். அடர்ந்த காடுகள் சூழ்ந்த ஒரு சிறிய கிராமத்தில், சிற்பக் கலையில் வல்லுநரான ஒருவர் வாழ்ந்து வந்தார். அவரது வீட்டு அருகில் நூற்றாண்டுகள் பழமையான ஒரு பெரிய ஆலமரம் இருந்தது. அந்த மரத்தை அவர் இயற்கைத் தெய்வமாகக் கருதி, தினமும் காலை மாலை வழிபட்டு வந்தார்.
ஒரு நாள் வானமே பிளந்ததுபோல் பெரும் மழை பெய்தது. ஆறுகள் கரைபுரண்டு ஓடின. பல மரங்கள் வேரோடு சாய்ந்தன.
மறுநாள் காலை, சிற்பி வழக்கம்போல் அந்த மரத்தை வழிபடச் சென்றார். அப்போது மரத்தின் அடியில் வெள்ளநீரால் அடித்துவரப்பட்ட இரண்டு பெரிய கற்கள் கிடப்பதைக் கண்டார்.
அவற்றைப் பார்த்தவுடன் அவரது மனதில் ஒரு கேள்வி எழுந்தது.
"இன்று நான் வணங்கும் இந்த மரமும் ஒருநாள் வெள்ளத்தில் விழுந்துவிட்டால், என் வழிபாட்டு மரபு என்ன ஆகும்? அடுத்த தலைமுறைக்கு நான் என்ன விட்டுச் செல்வேன்?"
அந்த எண்ணமே அவரை சோகத்தில் ஆழ்த்தியது.
அந்த நேரத்தில் ஒரு அதிசயம் நிகழ்ந்தது.
அந்த இரண்டு கற்களும் மனிதர்களைப் போலப் பேசத் தொடங்கின.
"சிற்பியே! ஏன் இவ்வளவு வருத்தமாக இருக்கிறீர்கள்?" என்று கேட்டன.
சிற்பி தனது மனக்கவலையை அவற்றிடம் கூறினார்.
அதைக் கேட்ட கற்கள் புன்னகைத்தன.
"மரம், கல், மண், செடி, கொடி—இவை அனைத்தும் இயற்கையின் அங்கங்களே. இயற்கையே தெய்வம் என்றால், எங்களில் ஒருவரைச் சிலையாக வடித்து வழிபடுங்கள். உங்கள் வழிபாட்டு மரபு தலைமுறைகள் கடந்தும் தொடரும்."
அந்த வார்த்தைகள் சிற்பிக்குப் புதிய சிந்தனையைத் தந்தன.
அவர் முதல் கல்லை எடுத்தார். அதற்கு "மருள்" என்று பெயரிட்டார்.
இரண்டாவது கல்லுக்கு "பொறை" என்று பெயரிட்டார்.
முதலில் மருளை உளியால் செதுக்கத் தொடங்கினார்.
ஆனால் உளியின் முதல் அடியிலேயே மருள் நடுங்கியது.
இரண்டாவது அடி விழுந்ததும் சிறிது பிளந்தது.
மூன்றாவது அடிக்குள் அது முழுவதும் விரிசல் விட்டது.
எத்தனை முறை முயன்றாலும், மருளைச் சிலையாக வடிக்க முடியவில்லை.
சிற்பி வருத்தத்துடன் அதை ஓரமாக வைத்தார்.
பின்னர் பொறையை எடுத்தார்.
உளியின் முதல் அடி விழுந்தது.
அது அமைதியாகத் தாங்கியது.
இரண்டாவது அடி விழுந்தது.
அதுவும் அசையவில்லை.
நாட்கள் கடந்தன.
ஒவ்வொரு நாளும் உளியின் அடி, சுத்தியலின் ஒலி, வலி, பொறுமை—இவை அனைத்தையும் பொறை அமைதியாக ஏற்றுக்கொண்டது.
மெல்ல மெல்ல அது அழகிய சிலையாக உருவெடுக்கத் தொடங்கியது.
மாலை நேரம் வந்ததும் சிற்பி வேலை முடித்து வீட்டிற்குச் செல்வார்.
அவர் சென்ற பிறகு, மருளும் பொறையும் தங்களுக்குள் பேசிக்கொள்வது வழக்கமாகியது.
ஒரு நாள் மருள் ஆழ்ந்த மூச்சுவிட்டு,
"பொறையே! உளியின் அடியை என்னால் தாங்க முடியவில்லை. அதனால்தான் சிலையாக மாறும் வாய்ப்பை இழந்துவிட்டேன்." என்றது.
பொறை அமைதியாகப் புன்னகைத்தது.
"மருளே! உளியின் அடி நம்மை அழிப்பதற்காக அல்ல; நம்மை உயர்த்துவதற்காக. வலியைப் பொறுத்தால்தான் வாழ்க்கை நம்மை உயர்ந்த இடத்திற்கு அழைத்துச் செல்லும்."
மருள் பதில் சொல்லாமல் அமைதியாக இருந்தது.
அந்த இரவே, ஒரு கிளியும் ஒரு காகமும் அந்தக் கற்களின் அருகில் வந்து அமர்ந்தன...
உடைந்த கல்: பகுதி – 2 : மருளின் தவறான புரிதல்:
அந்த இரவு நிலவொளி காட்டை மென்மையாகத் தழுவியது. சிற்பி உறங்கச் சென்ற பிறகு, ஒரு கிளியும் ஒரு காகமும் அந்த இரண்டு கற்களின் அருகே வந்து அமர்ந்தன.
மருளும் பொறையும் அமைதியாக அவற்றின் உரையாடலைக் கேட்டுக்கொண்டிருந்தன.
முதலில் கிளி பேசத் தொடங்கியது.
"என் உறவுக்கார கிளி ஒன்று, ஒரு நாள் அலட்சியமாக தனது ஒரு இறகை இழந்தது. அதனால் அது முன்புபோல் உயரப் பறக்க முடியவில்லை. மற்ற கிளிகளிடமிருந்தும் விலகி வாழ்ந்தது. ஆனால், காலப்போக்கில் தனது தவறை உணர்ந்தது. மீண்டும் தன் இறகுகளை வளர்த்துக் கொண்டு பயிற்சி செய்தது. இன்று அது மீண்டும் எங்களுடன் சேர்ந்து உயரமாகப் பறக்கிறது. அனைவரின் அன்பையும் மரியாதையையும் பெற்றிருக்கிறது."
அதைக் கேட்ட காகம் புன்னகைத்தது.
"என் உறவுக்கார காகமும் அப்படித்தான். ஒருகாலத்தில் தன் இயல்பை மறந்து, மற்ற காகங்களிடமிருந்து விலகி வாழ்ந்தது. பின்னர் தனது தவறை உணர்ந்து, மீண்டும் தன் இயல்புக்கு திரும்பியது. இன்று அது எங்கள் கூட்டத்தில் மதிப்போடு வாழ்கிறது."
இரண்டு பறவைகளும் விடியற்காலையில் தங்கள் கூட்டத்தை நோக்கிப் பறந்துச் சென்றன.
அவற்றின் உரையாடலைக் கேட்ட மருள் ஆழ்ந்த சிந்தனையில் மூழ்கியது.
சிறிது நேரம் கழித்து அது பொறையிடம்,
"நான் ஒரு முடிவு எடுத்துவிட்டேன். கல்லாகிய நாம் உடைந்துவிட்டால் நம்முடைய மதிப்பு போய்விடும். நான் மாறாமல் இருந்ததுதான் சரி." என்றது.
பொறை அமைதியாகச் சிரித்தது.
"மருளே! நீ அவர்கள் பேசியதை முழுமையாகப் புரிந்துகொள்ளவில்லை. அவர்கள் உடைந்ததாலோ மாறியதாலோ அல்ல, தங்கள் தவறைத் திருத்தியதால்தான் மீண்டும் மதிப்பைப் பெற்றார்கள். அந்தப் பறவைகள் சொன்னது மாற்றத்தைப் பற்றி; நீ புரிந்துகொண்டது பயத்தைப் பற்றி."
மருள் மறுத்தது.
"இல்லை! உடையாமல் இருப்பதே பாதுகாப்பு. மாறாமல் இருப்பதே மதிப்பு."
பொறை மெதுவாகச் சொன்னது:
"மருளே... சில நேரங்களில் உடைதல் அழிவல்ல; அது புதிய உருவத்தின் தொடக்கம். உளியின் அடி, கல்லை உடைப்பதில்லை; அதன் உள்ளே மறைந்திருக்கும் அழகை வெளிக்கொணர்கிறது."
ஆனால் மருள் தனது பிடிவாதத்தை விடவில்லை.
"என் முடிவே சரி."
என்று உறுதியாகக் கூறியது.
பொறை அதற்கு மேல் எதுவும் பேசவில்லை.
ஏனெனில்...
உண்மையை ஏற்க மறுக்கும் மனதிற்கு எந்த விளக்கமும் போதாது என்பதை அது அறிந்திருந்தது.
அடுத்த நாள் காலை, சிற்பி மீண்டும் வந்தார்.
அவரது கைகளில் உளியும் சுத்தியலும் இருந்தன.
அன்று முதல், பொறையின் வாழ்க்கை மாறப்போகிறது.
******
உடைந்த கல்: பகுதி – 3 : பொறையின் உயர்வு:
அடுத்த நாள் காலை, சிற்பி மீண்டும் வந்தார். அவரது கைகளில் உளியும் சுத்தியலும் இருந்தன.
மருளை ஒரு கணம் பார்த்தார். அதன் விரிசல்களைத் தொட்டுப் பார்த்துவிட்டு, ஆழ்ந்த பெருமூச்சு விட்டார்.
பிறகு, பொறையை எடுத்து தனது வேலைகளைத் தொடர்ந்தார்.
உளியின் ஒவ்வொரு அடியும் பொறையின் மேல் விழுந்தது.
ஒவ்வொரு அடியிலும் அதன் உடல் சிதைந்தது.
ஆனால், அதன் உருவம் அழகடைந்தது.
வலி அதிகரித்தது.
அதே அளவிற்கு அதன் பொறுமையும் அதிகரித்தது.
நாட்கள் வாரங்களாகின.
வாரங்கள் மாதங்களாகின.
சிற்பியின் கற்பனையில் இருந்த தெய்வ உருவம், மெதுவாக பொறையின் உள்ளிருந்து வெளிப்பட்டது.
ஒவ்வொரு மாலை வேலையை முடித்துவிட்டு சிற்பி வீட்டிற்குச் செல்வார்.
அப்போது மருள் மீண்டும் பேசும்.
“பொறையே! இவ்வளவு வலியை ஏன் பொறுத்துக் கொள்கிறாய்?”
பொறை புன்னகைத்தபடி,
“வலி சில நாட்கள்தான், மருளே. ஆனால், அந்த வலியின் பயன் பல தலைமுறைகளுக்கும் இருக்கும்,” என்றது.
மருள் தலையசைத்தது.
“என்னால் அப்படி நினைக்க முடியவில்லை. நான் இருப்பதே முழுமை.”
பொறை அமைதியாக இருந்தது.
ஒரு நாள்...
சிற்பி தனது பணியை முழுமையாக முடித்தார்.
அவர் அழகான ஒரு சிறிய கோவிலைக் கட்டினார்.
அந்தக் கோவிலின் கருவறையில், பொறையால் உருவான இயற்கைத் தெய்வச் சிலையை பிரதிஷ்டை செய்தார்.
கிராம மக்கள் அனைவரும் ஒன்று கூடி முதல் முறையாக வழிபட்டனர்.
மலர்கள் தூவப்பட்டன.
விளக்குகள் ஏற்றப்பட்டன.
மணியோசை முழங்கியது.
அன்றிலிருந்து பொறை, ஒரு சாதாரண கல்லாக இல்லாமல், மக்களின் நம்பிக்கையின் அடையாளமாக மாறியது.
மருள் மட்டும்...
கோவிலின் வெளிப்புறத்தில் தேங்காய் உடைக்க வைக்கப்பட்ட கல்லாக மாறியது.
மக்கள் தினமும் அதன் மீது தேங்காய்களை உடைத்துச் சென்றனர்.
இருந்தாலும், மருளின் மனம் மாறவில்லை.
“நான் உடையவில்லை. நான்தான் முழுமையானவன். என்னை யாராலும் மாற்ற முடியவில்லை,” என்று தன்னைத்தானே பெருமைப்படுத்திக் கொண்டது.
காலம் நகர்ந்தது.
அந்தச் சிற்பி முதுமை அடைந்து ஒருநாள் இந்த உலகை விட்டுப் பிரிந்தார்.
ஆண்டுகள் பல கடந்தன.
அடர்ந்த காடு கிராமமாக மாறியது.
கிராமம் வளர்ந்து நகரமாகியது.
ஆனால் அந்தக் கோவில் மட்டும் மாறவில்லை.
அதைச் சுற்றி மரங்களும், செடிகளும், கொடிகளும் இயற்கையின் அழகை நிலைநிறுத்தின.
கருவறையில் பொறை தெய்வமாக உயர்ந்து நின்றது.
வெளியில் மருள் உடைக்கல்லாக அமைதியாக கிடந்தது.
இரண்டு கற்களுக்கும் இடையே பல ஆண்டுகளாக எந்த உரையாடலும் நடைபெறவில்லை.
ஆனால்...
வாழ்க்கை இன்னும் ஒரு பாடத்தை மருளுக்காக வைத்திருந்தது.
******
உடைந்த கல்: பகுதி – 4 : உண்மையை உணர்ந்த மருள்:
காலம் பல ஆண்டுகளைக் கடந்து சென்றது.
கோவிலில் தினமும் பக்தர்கள் வந்து இயற்கைத் தெய்வத்தை வழிபட்டனர். கருவறையில் இருந்த பொறை, அமைதியாக அனைவரின் வணக்கத்தையும் ஏற்றுக்கொண்டது.
வெளியில் இருந்த மருள், தேங்காய் உடைக்கும் கல்லாக தனது வாழ்க்கையைத் தொடர்ந்தது.
இருப்பினும், அதன் மனதில் ஒரே எண்ணம்தான் இருந்தது.
“நான் உடையவில்லை. நான்தான் முழுமையானவன்.
ஒருநாள் காலை, கோவிலைச் சுற்றியிருந்த மரங்களில் ஏராளமான கிளிகள் வந்து அமர்ந்தன. அவற்றுள், பல ஆண்டுகளுக்கு முன்பு ஒரு இறகை இழந்து பறக்க முடியாமல் தவித்த அதே கிளியும் இருந்தது.
இப்போது அதன் இறகுகள் மீண்டும் வளர்ந்திருந்தன.
அது மற்ற கிளைகளுடன் சமமாக வானில் உயரப் பறந்தது.
மற்ற கிளிகள் அதை அன்போடும் மரியாதையோடும் வரவேற்றன.
அதைப் பார்த்த மருளின் மனதில் ஒரு சிறிய சந்தேகம் தோன்றியது.
“இது எப்படி சாத்தியமானது?”
சிறிது நேரத்தில், காகங்களும் கூட்டமாக வந்து அமர்ந்தன.
அவற்றில், ஒருகாலத்தில் தன் இயல்பை மறந்து தனிமையில் வாழ்ந்த அந்தக் காகமும் இருந்தது.
இப்போது அது தனது இயல்பான குரலில் மகிழ்ச்சியுடன் கரைந்தது.
மற்ற காகங்கள் அதனுடன் ஒன்றுபட்டு பறந்தன.
அந்தக் காட்சியைப் பார்த்த மருளின் தற்பெருமை மெதுவாகச் சிதறத் தொடங்கியது.
அதற்கு அப்போது ஒரு உண்மை புரிந்தது.
கிளி உடைந்ததால் வீழவில்லை; தவறைத் திருத்தியதால் உயர்ந்தது.
காகம் மாறியதால் மதிப்பு இழக்கவில்லை; தன் இயல்பை மீட்டதால் மரியாதை பெற்றது.
ஆனால்...
அவர்களின் கதையைத் தவறாகப் புரிந்துகொண்டது தான்தான்.
அந்த ஒரு தவறான புரிதலே, தனது வாழ்க்கையின் பாதையை மாற்றிவிட்டது.
அந்த நேரத்தில், கிளிகளும் காகங்களும் ஒன்றாகக் கோவிலுக்குள் சென்றன.
அவை கருவறையில் நின்ற இயற்கைத் தெய்வமான பொறையை பக்தியுடன் வணங்கின.
அதைப் பார்த்த மருளின் மனம் நொறுங்கியது.
அதன் கண்களில் கண்ணீர் பெருகியது.
“என்னை உடைத்தது உளியின் அடி அல்ல... என் அறியாமை.
என்னைத் தாழ்த்தியது வலி அல்ல... தவறான ஒப்பீடு.
என்னை வீழ்த்தியது விதி அல்ல... என் பிடிவாதம்.”
என்று அது மனதிற்குள் கதறியது.
ஆனால்...
அதன் அழுகையைக் கேட்டு ஆறுதல் சொல்ல, அருகில் பொறை இல்லை.
அது கருவறையில் தெய்வமாக உயர்ந்து நின்றது.
வெளியில்...
மருள் அமைதியாகக் கிடந்தது.
ஒவ்வொரு தேங்காயும் அதன் மீது உடைந்தபோதெல்லாம், அது உளியின் அடியை அல்ல...
தான் தவறவிட்ட வாய்ப்பை நினைத்துக் கொண்டே இருந்தது.