

பெரும் செல்வந்தராக இருந்து கடும் ஏழையாக மாறினாலும் சிவன் மீது கொண்ட பக்தியால் சிவனடியார்களுக்கு உணவு அளிப்பதை தம்முடைய தலையாயக் கடமையாக நினைத்து வாழ்ந்த இளையான்குடி மாற நாயனாரின் பக்தி எப்பேர்ப்பட்டது என்பதைக் இக்கதையின் மூலம் நாம் அறிந்து கொள்வோம்.
இளையான்குடி மாற நாயனார் பாண்டிய நாட்டில் பரமக்குடிக்கு பக்கத்தில் இருக்கும் இளையான்குடி என்ற ஊரில் பிறந்தவர். இவர் வேளாளர் குலத்தில் பிறந்தார். இவர் பெரும் செல்வந்தராக இருந்தார். நிலப்புலன்கள் அதிகமாக இருந்தன. அதனால் இளையான்குடி மாற நாயனார் தம்முடைய கடும் உழைப்பினால் பெரும் செல்வத்தை ஈட்டினார்.
இளையான்குடி மாற நாயனருக்கு எம்பெருமான் மீது அளவில்லாத பக்தி இருந்தது. அக்காரணத்தினால் இளையான்குடி மாற நாயனார் அனுதினமும் எம்பெருமானை பக்தியோடு நினைத்து வழிபாடு செய்து வந்தார். சிவனடியாராக தம் வீட்டிற்கு வருபவர்களுக்கு அறுசுவை உணவு படைப்பார்.
மாற நாயனாரின் பக்தியை சோதிக்க நினைத்த எம் பெருமான் அவரின் செல்வங்கள் குறையும்படி செய்தார். அதன்படியே பெரும் செல்வந்தராக இருந்த இளையான்குடி மாற நாயனாரின் செல்வங்கள் படிப்படியாக குறைந்தது.
அவர் தன்னுடைய வீட்டில் இருக்கும் பொருட்களை விற்று சிவனடியார்களுக்கு அறுசுவை உணவு படைத்தார். பின் அவையும் தீர்ந்து போன காரணத்தினால், உறவினர்களிடம் கடன் வாங்கி சிவனடியார்களுக்கு உணவு படைத்தார்.
ஒரு நாள் இரவு கடும் மழை பெய்தது. அப்பொழுது இளையான்குடி மாறனார் வீட்டிற்கு ஒரு வயதான சிவனடியார் வந்தார். அவர் மாறனாயனாரிடம் பசி என்று கூறினார். அந்த வயது முதிர்ந்த சிவனடியாரின் தோற்றத்தை பார்த்த மாற நாயனார் அவரை வீட்டுக்குள் அழைத்து வந்தார். மிகவும் மனம் வருந்தி அவருடைய மனைவியிடம் சென்று உணவு சமைக்க வேண்டும் என்று கூறினார். மனைவி, "வீட்டில் சிறிதளவு கூட தானியம் இல்லை. யாரிடமும் கடனும் வாங்க முடியாது. அனைவரிடமும் நாம் கடன் வாங்கி விட்டோம்," என்று கூறினார்.
மாற நாயனாரின் மனைவிக்கு ஒரு சிந்தனை இருந்தது. இன்று நம் வயலில் இருக்கும் நெல் பயிர்களை பறித்துக் கொண்டு வாருங்கள். அதை வைத்து நாம் உணவு சமைத்து சிவனடியாருக்கு அன்னமிடலாம் என்று கூறினார். மனைவி கூறிய உடனே மாற நாயனார் வயலுக்கு ஓடினார்.
அங்கு இருக்கும் நெற்பயிர்களை புடுங்கி கீரை மற்றும் பருப்பு வகைகளை பறித்து வந்து தன்னுடைய மனைவியிடம் கொடுத்து உணவு சமைக்க கூறினார்.
கடும் மழை பெய்ததால் விறகுகள் எரியவில்லை. மாற நாயனார் தன்னுடைய வீட்டு கூரையில் இருந்தால் விறகு கட்டையை கோடாரியால் உடைத்து மனைவியிடம் கொடுத்து உணவு சமைக்கச் சொன்னார். மனைவியும் அனைத்தையும் கொண்டு அறுசுவை உணவு படைத்து சிவன் அடியாருக்கு பரிமாற சென்றனர்.
அப்பொழுது அங்கு அந்த வயதான சிவனடியார் இல்லை. மாற நாயனாரும் அவருடைய மனைவியும் திகைத்து நின்றனர். அப்பொழுது எம்பெருமான் கண் கூசும் ஒளி பிளம்பிலிருந்து பார்வதி தேவியுடன் அவர்களுக்கு ரிஷப வாகனத்தில் காட்சியளித்தார். எம்பெருமான் இளையான்குடி மாற நாயனாரிடம் உன்னுடைய பக்தியை போலவே உன்னுடைய வீட்டிலும் செல்வம் குறையாது இருக்கும் என்று கூறி, மாற நாயனாருக்கும் அவருடைய மனைவிக்கும் முக்தியை அளித்தார்.