

கதை 1: கடவுளைக் காண்பது எப்படி?
மகான் ஒருவர் ஆற்றங்கரை ஓரமாக உலாவிக் கொண்டிருந்தார். பக்தன் ஒருவன் அவரை அணுகி, "சுவாமி.. கடவுளைக் காண்பது எப்படி..?" என்று கேட்டான்.
உடனே அந்த மகான் அவனை ஆற்றில் இறக்கி, நீரில் அமிழ்த்தினார். சிறிது நேரம் கழித்து அவனை மேலே தூக்கி, "நீருக்குள் இருக்கும்போது எப்படி இருந்தது..?" எனக் கேட்டார்.
அதற்கு அவன், "என் உயிர் போகும் நேரம் வந்துவிட்டது என்று நினைத்தேன்.. திணறிப் போய் விட்டேன்.." என்றான்.
உடனே மகான், "சற்று நேரத்திற்கு முன்பு மூச்சு விடுவதற்கு நீ எவ்வளவு ஆவல் கொண்டிருந்தாயோ, அதே அளவு தீவிரமாக கடவுளைக் காண வேண்டும் என்ற ஆவல் உனக்கு இருக்க வேண்டும்.. அப்போதுதான் உன்னால் கடவுளைக் காண முடியும்..!" என்றார்.
கதை 2: கடவுளால் முடியுமா..?
ஒரு துறவியிடம் அவரது சீடன் கேட்டான், "எல்லோருடைய விருப்பங்களையும் கடவுளால் நிறைவேற்ற முடியாது போல தெரிகிறதே.. உழவன் மழை பெய்ய வேண்டுகிறான். செங்கல் சூளை போடுகிறவன் வெய்யில் அடிக்க வேண்டும் என பிரார்த்திக்கிறான்; பழ வியாபாரியோ மழையும் பெய்யக் கூடாது, வெய்யிலும் அடிக்க கூடாது என வேண்டுகிறான்.. அதனால் கடவுளே நினைத்தால் கூட, எல்லோருடைய வேண்டுதலையும் நிறைவேற்ற முடியாது போலத் தெரிகிறதே..!"
உடனே குரு கேட்டார், "இப்போது வானிலை எப்படி உள்ளது..?
"மிதமாக உள்ளது.." என்றான் சீடன்.
"சென்ற வாரம்..? கேட்டார் மகான்.
"வாரத்தின் முதல் இரு தினங்கள் வெயிலாகவும், மற்ற தினங்கள் மழையாகயாகவும் இருந்தன.." என்றான்.
"இந்த இரண்டு வாரத்திலேயே கடவுள் எல்லாருடைய விருப்பத்தையும் நிறைவேற்றி உள்ளாரே..!" என்றார் மகான்.
உடனே சீடன், கடவுள் தன் வேலையை சரியாகத்தான் செய்து கொண்டு வருகிறார். நாம்தான் காற்றுள்ள போதே தூற்றிக் கொள்ள வேண்டும் என்பதை உணர்ந்து மனம் தெளிந்தான்.