

நாம் எல்லோரும் ஏதோ ஒரு புதையலைத்தேடி வாழ்க்கையின் அங்கீகாரத்திற்காக - நாமாக ஏற்படுத்திக் கொண்ட ஒரு கட்டமைப்பை காப்பாற்றுவதற்காக - ஓடிக்கொண்டே இருக்கிறோம். இதற்காக நாம் பல கஷ்டங்களை அடையவேண்டி இருக்கிறது. நமக்கான போராட்டங்களை நாம் சந்திக்க வேண்டி இருக்கிறது. இந்த கருத்தாக்கம்தான் Paulo coelho எழுதிய ரசவாதம் (alchemist) நூலினுடைய அடிநாதம்.
ஒவ்வொருவரும் உயிர் வாழ வேண்டி இருக்கிறது. உண்மைதான்! பயணங்கள் ஒரு படிப்பினை! இவற்றில் எதுவுமே மறுப்பதற்கு இல்லை. ஆனால், ஒரு உண்மையை மட்டும் நாம் புரிந்துகொண்டால் அது நம் வாழ்வை அமைதிப்படுத்தும், செழுமைப்படுத்தும்.
எல்லாம் மாறிக்கொண்டே இருக்கிறது. மாற்றம் எப்போதுமே நடந்துகொண்டே இருக்கிறது. அதை நாம் மறுக்கவும் மறக்கவும் முடியாது. அது நமக்கு உள்ளாகவும்; நமக்கு வெளியாகவும் நடந்துகொண்டுதான் இருக்கும்.
ஒன்றை மட்டும் இன்று நான் சொல்லிக்கொள்ள ஆசைப்படுகிறேன். யாரையும் பார்த்து பிரமிக்க வேண்டியதில்லை. யாரையும் பார்த்து சிலாகிக்க வேண்டாம். மாறாக எல்லா உயிரினங்களுக்கும் மதிப்பளிப்போம்! மாற்றங்களை ஏற்றுக்கொள்வோம்! முடியவில்லை என்றால் விலகி இருந்து பார்வையாளனாக பங்களிப்போம்!
கருத்துகள்தான் இந்த உலகை ஆள்கின்றன. கடைசியில் அந்த கருத்து என்பதுகூட மௌனமாக போகிறது . அதுவே மந்திரமாகவும் பிறகு போதிக்கப்படுகிறது. உருவமே அருவமாகி அதுவே மீண்டும் உருவம் எடுத்து நம்மை இயக்குகிறது - தாயுமானவர்.
அகங்காரம் மனதை அடக்குகிறது. ஆட்டிப்படைக்கிறது. சித்தத்தைவிட பெரியது "நான்" என்கிற அகந்தை இல்லாமல் இருப்பது. "சும்மா இரு" என்று சும்மாவா சொன்னாங்க!! "நெஞ்சம்தான் கோயில்" - ஞானி என்பவன் எல்லாவற்றையும் (பாவம், தீமை) கூட மறக்கமாட்டான்; மறுக்கமாட்டான். அவன் "சாட்சி பாவத்தில்" இருந்து செயல்படுபவன். இந்த உலகம் ‘மாயை’ என்பதும், அந்த மாயையே உருவமாக மாறி பிறகு ‘அகந்தையாக’ ஆனதும் அறிந்தவன்தான் ஞானி.
நான் திருலோக சீதாராமன் எழுதிய ‘சித்தார்த்தன்’ என்ற நாவலை படித்தேன். அதில் சொல்லப்பட்ட கரு ‘சாட்சி பாவம் ஆக இரு; அனுபவி; கடந்து செல்; மறக்காதே; மறுக்காதே. வாழ்வியலை நாம் இவ்வாறு புரிந்துகொள்ளவும். இதுதான் உலக அரசியல்... இந்த உலகத்தை உரையாடல் (discourse) உருவாக்குகிறது. அந்த உரையாடல்கள் ஒரு அதிகார மையத்தை (hegemony) உருவாக்குகிறது. அந்த அதிகார மையம் வெகுஜன கருத்தாக்கத்தை (populism) உருவாக்குகிறது. இதன் மூலம் சிந்தனை செயல்பாடு உருவாகின்றன.
இவற்றைக் கட்டிக்காக்க காலி குறிப்பான்கள் (empty signifier) இந்தச் சமுதாயத்தால் வளர்த்தெடுக்கப்படுகிறது. இந்தத் தத்துவார்த்த புரிதலை நமக்கு தந்தவர்தான் philosopher Earnesto Laclau. இவர் அர்ஜென்டினா நாட்டைச் சேர்ந்தவர். அவரைப் படியுங்கள். உலக அரசியல் தெரிந்துகொள்ளலாம். இப்போது வாழ்வியலுக்கு வருவோம்:
நம்மோடு படித்தவர்கள் எப்போதும் நம்மோடு வருவது இல்லை. நம்மோடு வேலை செய்பவர்கள் எந்தக் காலத்தில் நம்மோடு இருப்பதில்லை. நான் வசிக்கும் இடத்தில் உள்ள அன்பர்கள், நண்பர்கள் எல்லோரும் எப்போதும் நம்மோடு சேர்ந்து பயணிப்பது இல்லை. எல்லாவற்றுக்கும் காரணம் இருக்கிறது.
அது காலத்தில் இருக்கிறது நாம் மட்டும் எல்லோருக்கும், எப்போதும் எல்லா சமயங்களிலும் பயனுள்ளவர்களாக, உதவி செய்பவர்களாக இருந்துவிடுகிறோமா என்ன? இருந்தாலும் நாம் பழகவேண்டி இருக்கிறது! பேசவேண்டி இருக்கிறது! நமக்காக ஒரு உறவை தேடவேண்டி இருக்கிறது! தனிமை பலம், எல்லா பழக்கமும், எல்லா உறவுகளும், எல்லா உதவிகளும் ஏதோ ஒரு காலத்தில் மறுக்கப்படும் அல்லது மறைக்கப்படும்.
இது காலத்தின் கட்டாயம் என்று கடந்து போகலாம். இருந்தாலும் நாம் தனிமையை கண்டு அஞ்சுகிறோம். அல்லது தனிமைப்படுத்தப்படுவோம் என்கிற ஒரு உந்துதல் நம்மை ஆள்கிறது. அதற்காக எல்லா வேலைகளையும் நடிக்காமல் நடித்துக் கொண்டிருக்கிறோம்.
இந்தச் சமுதாயம் நம்மை பார்த்துக்கொண்டுதான் இருக்கிறது. இருந்தாலும் அதை சகித்துக்கொண்டுதான் இருக்கிறது.
எவன் ஒருவன் குறைந்த நண்பர்களுடன் அல்லது நண்பர்களே இல்லாமல் இருக்கிறானோ அவன்தான் இந்த உலகத்தில் மிகப்பெரிய பலசாலி. இந்தப் பலமானது உடல் சார்ந்தது கிடையாது. மனம் சார்ந்தது. கருத்து சார்ந்தது. கொள்கை சார்ந்தது. அவன் கொண்டாடுகின்ற சமூகம் சார்ந்தது. அந்த சமுதாயத்தின் உடைய நலனுக்காக அவன் பாடுபடுபவனாக எப்பொழுதுமே இருப்பான்.
எந்த விதமான எதிர்பார்ப்பும் இல்லாமல்... இவ்வாறாக திறமை வளர்த்துக்கொள்ள அவன் மேற்கொள்ளும் ஒரு ஆயுதம்தான் பொறுமை. அதற்கு சகிப்புத்தன்மை வேண்டும். அதற்கான காரண, காரியம் கருதி எந்த ஒரு செயலையும் செய்யாது எப்பொழுதுமே தன் சுயத்தைத்தான் நம்புவான். சுயநலத்தை விரும்பதவன்! அதில் பற்று கொள்ளாதவன்!!
நாம் பார்க்கும் மனிதர்கள் தலைவர்களாக மாறுகிறார்கள். பிறகு அவர்களே மாறி அவர்கள் சார்ந்த கருத்துகளை மக்களிடம் கொண்டு சென்று அவர்களையும் மாற்ற முயற்சிக்கிறார்கள். இதன்மூலம் அவர்களுக்கென்று ஒரு கொள்கை பிடிப்பு இல்லாமல் ஈசல்கள்போல வாழ்ந்து மடிகிறார்கள்.
தலைவன் என்பவன் எந்தக் காலத்திலும் எப்போதுமே அநீதிக்கு எதிராக குரல் கொடுத்து அதில் இருந்து நீதியை நிலை நாட்டுபவன். அப்பேற்பட்டவர்களை காலமானது காலம் கடந்து கொண்டாடிக்கொண்டிருக்கும். அப்படிப்பட்ட மகான்கள்தான் நாம் பெற்றெடுத்த பல புலவர்கள், தலைவர்கள். உதாரணத்திற்கு தன் கவிதைபோல வாழ்ந்த பாரதி, அரசியலுக்கு ஒரு நல்லகண்ணு, ஆன்மீகத்துக்கு ஒரு நாராயண குரு! உலக அரசியலில் மார்ட்டின் லூதர் கிங், ஆபிரகாம் லிங்கன், நெல்சன் மண்டேலா!