

பக்த பிரகலாதனின் பேரனாகப் பிறந்தவர் மகாபலிச் சக்ரவர்த்தி. இவர் சிறப்பாக ஆட்சிபுரிந்து, தன் நாட்டு மக்களுக்கு தானதர்மங்கள் செய்து, சிறந்த மன்னனாக விளங்கினார். இவர் ஒருமுறை யாகம் ஒன்றைச் செய்ய முடிவுசெய்தார். இதை அறிந்த தேவர்கள் கலங்கினர். மகாபலி அந்த யாகத்தை நிறைவு செய்தால், தேவலோகத்தைக் கைப்பற்றக் கூடும் என்ற அச்சம் ஏற்பட்டது. அதனால் திருமாலிடம் தஞ்சமடைந்தனர்.
மகாவிஷ்ணு வாமன (உருவத்தில் மிகவும் சிறிய அந்தணர் போல) அவதாரம் எடுத்து, மகாபலிச் சக்ரவர்த்தியிடம் வந்தார். யாகத்திற்கான ஏற்பாடுகளில் முனைந்திருந்த மகாபலியும், தன்னை நாடிவந்த அந்தணரிடம் அவரின் தேவை என்ன என்று வினவினான்.
“உன் காலால் அளந்த மூன்றடி நிலம் வேண்டும்,” என்று வாமனர் கேட்க, இதிலென்ன சிரமம் இருக்கப்போகிறது என்று மகாபலியும் ஒத்துக்கொண்டான். குள்ளமான அந்தணராக வந்த மகாவிஷ்ணு, வான்வரை வளர்ந்து விஸ்வரூபம் எடுத்தார். தன் முதல் அடியால் பூமியை அளந்தார். இரண்டாவது அடியில் விண்ணுலகை அளந்தார். மூன்றாவது அடியை எங்கே வைப்பத்து என்று தெரியவில்லை. மகாபலி தன் மமதை தவறென்று உணர்ந்து, சிரம் தாழ்த்தி நின்றான்.
திருமால், மகாபலியின் தலையில் மூன்றாவது அடியை வைத்து அழுத்தி, அவனை பாதாள உலகம் அனுப்பினார். இப்படி, மகாபலியை தர்மத்திற்காக பாதாள உலகம் அனுப்பினாலும், அதற்குரிய பழி திருமாலை வந்தடைந்தது. அதை நீக்கிக்கொள்ள திருமாணிக்குழியில் அருளும் மாணிக்கவரதரை வழிபட்டார் திருமால். மகாவிஷ்ணு வாமன வடிவில் பூஜித்ததால், இத்தல இறைவன் வாமனபுரீஸ்வரர் என்று அழைப்படலானார். மாணிக்குழி என்ற பெயரும் இதனாலேயே ஏற்பட்டது. (மாணி – பிரம்மசாரி. திருமால் வாமன உருவில் பிரம்மசாரியாக வந்ததால்)
இத்தல இறைவி அம்புஜாக்ஷி என்றும் மாணிக்கவல்லி என்றும் அழைக்கப்படுகிறார். இங்கே இறைவனும், இறைவியும் எப்போதும் சேர்ந்தே இருப்பதால் தனி பள்ளியறை கிடையாது. கர்ப்பகிரகமே பள்ளியறையாக இருப்பதால், ஈசனை நேரடியாகத் தரிசிக்க முடியாது. அம்மையும் ஈசனும் இணைந்திருப்பதால், அவர்களுக்குக் காவலாக, பதினோரு ருத்ரர்களில் ஒருவரான ‘பீமருத்ரர்’ திரைச்சீலை வடிவில் இருக்கிறார்.
திரைச்சீலையில் இருக்கும் பீமருத்ரருக்கே முதல் பூஜை, அர்ச்சனை எல்லாம் நடக்கிறது. தீப ஆராதனை காட்டும்போது, திரைச்சீலை நீக்கப்பட்டு, சில வினாடிகள் மட்டுமே உள்ளேயிருந்து அருளும் ஈசனை, லிங்க மூர்த்தியை பக்தர்கள் தரிசிக்கமுடியும்.
தேவர்களுக்கு ஞானத்தை எப்போதும் அருளும் பொருட்டு, சிவபெருமானும், உமையம்மையும் சதாசர்வ காலமும் சேர்ந்திருப்பதாகச் சொல்கிறார்கள். அதேபோல், திருமால் சிவபெருமானை வழிபடுவதில் தடங்கல் வராமல் காக்கவே, பீமருத்ரர் காவல் இருப்பதாகவும், அதனாலேயே திரை விலகும் குறுகிய நேரமே ஈசனின் தரிசனம் கிடைக்கும் என்றும் சொல்கிறார்கள்.
தேவாரப் பாடல்களில் “உதவிமாணிக்குழி” என்று இத்திருக்கோவில் குறிப்பிடப்படுகிறது. ஊரின் பெயர் “உதவி” என்றும், கோவிலின் பெயர் மாணிக்குழி என்றும் இருந்திருக்க வாய்ப்புள்ளதாகச் சொல்கிறார்கள்.
முன்னொரு காலத்தில், அத்ரி என்னும் வணிகன் இப்பகுதிக்கு வந்தபோது, கொள்ளையர்கள் அவனைத் தாக்கினர். அத்ரி பயந்துபோய் இத்தல இறைவனை வேண்டி நிற்க, ஈசன் கொள்ளையர்களிடம் இருந்து அத்ரியைக் காத்து உதவினார். அதனால் இத்தலம் ‘உதவி’ என்று பெயர்பெற்றது. இறைவன் ‘உதவிநாயகர்’ என்றும், அன்னை ‘உதவிநாயகி’ என்றும் அழைக்கப்படுகிறார்கள். கல்வெட்டில் இதுகுறித்த குறிப்பு உள்ளது. “உதவித் திருமாணிக்குழி” என்றே கல்வெட்டிலும்,தேவாரத் திருப்பதிகத்திலும் குறிப்பிடப்பட்டுள்ளது.
கடலூர் மாவட்டத்தில் உள்ளது சுமார் இரண்டாயிரம் வருடங்கள் பழைமைவாய்ந்த இத்திருக்கோயில்.