அம்மனின் யோனி பகுதி விழுந்த இடம் - காமகிரி பீடம் காமக்யா தேவி கோவில்!

Temple
Temple
கே.எஸ்.கிருஷ்ணவேனி

Iam a graduate from Vaishnav College in the year 1984. My writings were published in Mangayar Malar,Aval Vikadan,Kumudham Sneghethi since 1992 and received many prizes. Now I am writing in Kalki Publications. Cooking, writing, playing Shuttle cock & making fur dolls are my passions.

Updated on

அசாம் தலைநகர் கௌஹாத்தியிலிருந்து 12 கிலோமீட்டர் தொலைவில் நீலாசல் என்ற மலை அமைந்துள்ளது. இது கடல் மட்டத்திலிருந்து 700 அடி உயரத்தில் மலை மீது காமக்யா தேவியின் கோவில் அமைந்துள்ளது. இங்கு இன்றும் உயிர்பலி கொடுக்கும் வழக்கம் பின்பற்றப்படுகிறது. புராணங்களில் இந்த இடம் நரகாசுரனால் ஆளப்பட்டதாக கூறப்படுகிறது. இந்த மலை அடிவாரத்தில் நான்கு பக்கங்களிலும் சொர்க்கபுரி வாயில், அனுமன் வாயில், புலி வாயில், சிங்க வாயில் என நான்கு நுழைவாயில்களை நரகாசுரன் அமைத்ததாக கூறப்படுகிறது.

கோவிலில் எப்பொழுதும் கூட்டம் அலைமோதும் என்றும், ஸ்பெஷல் டிக்கெட்டுகள் தினமும் காலையில் 200 தான் வழங்கப்படும் என்றும் கூறுகிறார்கள். அம்மன் சன்னதிக்கு செல்லும் நுழைவாயில் குறுகிய நுழைவாயில் என்பதால் வரிசைப்படி ஒவ்வொருவராகத்தான் அனுப்புகிறார்கள். நாங்கள் சென்றது வெள்ளிக்கிழமை. எனவே கூட்டம் மிகவும் அதிகமாக இருக்கும் என்று காலை 3 மணிக்கு கிளம்பி 3.30 மணிக்கெல்லாம் கோவில் வாசலை அடைந்து விட்டோம். கோவில் ஆறரை மணிக்கு தான் திறந்தது. திறந்ததும் நீண்ட வரிசையில் காத்திருந்து 501 ரூபாய் டிக்கெட் எடுத்து 3 மணி நேரம் கூட்டத்தில் காத்திருந்து தரிசனம் செய்தோம். ஒன்பதரை மணிக்கு அம்மனின் தரிசனம் திவ்யமாக கிடைத்தது.

இதையும் படியுங்கள்:
உடல் வியர்வையால் ஏற்படும் 5 ஆரோக்கிய நன்மைகள்!
Temple

51 சக்தி பீடங்களில் இது முதல் சக்தி பீடமாகும். இது அம்மனின் யோனி பகுதி விழுந்த இடம் என்றும், இதனை  காமரூப் என்றும் அழைக்கிறார்கள். அம்மனின் சக்தி பீடங்களில் இது காமகிரி பீடம். இங்கு அம்மனின் சிலை எதுவும் கிடையாது. இங்கு பிரம்மபுத்ரா தீர்த்தம் யோனி பீடத்தில் ஊறுகிறது. அதை தான் பிரசாதமாக பண்டாக்கள் தலையில் தெளிக்கிறார்கள். நாங்கள் அதனை பிரசாதமாக பக்தியுடன் அருந்தி, தலையிலும் தெளித்துக் கொண்டோம்.

Temple
Temple

வெளி பிரகாரத்தை பார்த்தால் மட்டுமே இது கோவில் என்று சொல்ல முடியும். உள்ளே கோவில் என்பது ஒரு குகை மட்டும் தான். அதற்குள் பத்து படிக்கட்டுகள் கீழே இறங்கி உள்ளே பாதாளத்தில் அமைந்துள்ள கருவறையை தரிசிக்க வேண்டும். அங்கு எண்ணெய் விளக்கு மட்டும்தான் எரிகிறது. கருவறை அமைப்பு ஒரு சிறிய மலைப்பாறை போன்று மேடை அமைக்கப்பட்டுள்ளது. மேடையை சுற்றிலும் தண்ணீர் வலமாக போய்க்கொண்டிருக்கிறது. தண்ணீருக்கு அடியில் யோனி பீடம் அமைந்துள்ளது. அந்த பீடத்தின் மீது கை வைத்து மேடையில் தலை வைத்து பக்தர்கள் வணங்குகின்றனர். மேடையின் கீழ் ஓடும் தண்ணீரை "சௌபாக்கிய குண்ட்" என்று அழைக்கிறார்கள்.

இதையும் படியுங்கள்:
சூழ்நிலைகள் தரும் வெற்றிக்கான சூத்திரம்..!
Temple

பிரகார சுவர்களில் மங்கள சண்டி, அன்னபூரணி, நீலகண்ட மஹாதேவ், மானசாதேவி போன்ற சிற்பங்கள் செதுக்கப்பட்டுள்ளன. வசந்த காலத்தின் பொழுது ஆண்டுக்கு மூன்று நாட்கள் இந்த ஆலயம் மூடப்படுகிறது. அந்த நாட்கள் தேவி விலக்காகி இருக்கும் நாட்களாம். இந்த மூன்று நாட்களில் பக்தர்களுக்கு ஆலயம் செல்ல அனுமதி இல்லை. இக்கோவிலில் பைரவர், கிருஷ்ணர் போன்ற கடவுளர்களின் சந்நிதிகளும் உள்ளன.

அம்மனின் கருவறையிலேயே உயிர் பலி ஆடு, கோழி என கொடுப்பதாக கூறுகின்றனர். அருகிலேயே தாராதேவி கோவிலும், சிவன் கோவிலும் அமைந்துள்ளது. சிவனும் அதாவது சிவலிங்கமும் பிரம்மபுத்ரா தீர்த்தத்தில் தான் அமர்ந்திருக்கிறார். கையால் தொட்டுப் பார்த்தால் தான் லிங்கம் தெரியும். இல்லையெனில் வெறும் தண்ணீர் தான் நம் கண்ணுக்கு தெரிகின்றது.

காமாக்கியா கோவில் தரிசனத்தை வாழ்நாளில் என்றுமே மறக்க முடியாது.

logo
Kalki Online
kalkionline.com