

மகாராஷ்டிர மாநில துல்ஜாப்பூரில் ஜமுனாஞ்சல் மலைமேல் எழுந்துள்ள துல்ஜாபவானி கோவில் - ஆலயம் சக்தி பீடங்களில் முக்கிய தலமாக விளங்குகிறது. சாளக்கிராமக் கற்களால் ஆன காளிதேவி எட்டு கரங்களுடன் அரக்கனை சம்ஹாரம் செய்த உருவில் காட்சி தருகிறாள். வீர சிவாஜியின் குலதெய்வமாகிய இத்தலத்தில் வெள்ளித் தூண் வலம் வருதல், சிந்தாமணி கல்லிடம் அனுமதி கேட்பது போன்ற வழிபாடுகள் பக்தர்களுக்கு வெற்றி, ஆரோக்கியம் தரும் என நம்பப்படுகிறது.
இந்தியாவில் காளிமாதா கோவில் கொண்ட தலங்கள் எண்ணற்றவை உள்ளன. அத்தனையும் தனிச்சிறப்பு வாய்ந்தவை. அவற்றில் ஓன்றாக ஆயிரக்கணக்கான பக்தர்கள் தினமும் வருகை புரியும் கோவிலாக மகாராஷ்டிர மாநிலத்தில் அமைந்துள்ள துல்ஜாபவானி ஆலயம் உள்ளது.
மகாராஷ்டிர மாநிலத்தின் சக்தி பீடங்களில் இன்றான இந்த ஆலயம் துல்ஜாப்பூர் என்ற இடத்தில் ஜமுனாஞ்சல் மலைமீது அமைந்துள்ளது. சக்கரம், வில், வாள், சூலம் ஏந்தி, ஒரு கையில் அரக்கனின் தலையைப்பிடித்து 8 கரங்களுடன் தேவி காட்சி தருகிறாள். மார்க்கண்டேய முனிவரின் சிலை அம்மனின் சிலைக்கு அருகே காணப்படுகிறது.
தல வரலாறு
முன்பு கர்தம் என்ற முனிவரும் அவருடைய மனைவி அனுபூதியும் காட்டில் வசித்து வந்தனர். முனிவர் கொடிய மிருகம் தாக்கி ஒருநாள் இறந்து போனார். அனுயூதி அவருடன் உடன்கட்டை ஏற விருப்பம் தெரிவித்தும் கர்ப்பவதியாக இருந்ததால் ஊரார் தடுத்து விட்டனர்.
ஒரு ஆசிரமத்தில் கணவனைப் பிரிந்த அவள் மந்தாகினி நதிக்கரையின் ஆற்றங்கரையில் தெய்வச் சிந்தனையுடன் வாழ்க்கை நடத்தினாள். ஒருநாள் அவள் அமர்ந்திருந்தபோது அந்த வழியாக வந்த அரக்கன் அவளது அழகில் மயங்கினான்.
அவள் கர்ப்பவதியாக இருப்பதைக் கண்டும் மோகித்து அவளுடன் இன்பம் துய்க்க விரும்பி நெருங்கினான். அனுபூதி அனலில் பட்ட புழுவைப்போலத் துடித்து அவனிடம் இருந்து தப்பிச் செல்ல முயற்சி செய்தாள். அவளை விடாமல் துரத்தி வந்த அரக்கனைக் கண்ட அனுபூதி வேறு வழியின்றி அன்னை பவானியைத் துதித்தாள்.
அவளது அபயக்குரலைக் கேட்ட அன்னை அங்கே பிரசன்னமாகி வரபலம் பெற்ற அரக்கனை எதிர்த்தாள். அரக்கனும் காளிதேவியோடு பல்வேறு உருவங்கள் எடுத்து போரிட்டான். அரக்கனை சம்ஹாரம் செய்ய தேவி நேரம் பார்த்திருந்தாள்.
அரக்கன் இறுதியாக எருமைக்கடா வடிவம் கொண்டு எதிர்த்தபோது தேவி தனது கூரிய வாளால் அந்த அரக்கனின் தலையை வெட்டி எறிந்தாள். அந்த அன்னையே இங்கே கோயில் கொண்டு எழுந்தருளி இருக்கிறாள்.
மிகவும் சக்தி வாய்ந்தவளாக எழுந்தருளி இருக்கும் காளிதேவி சாளக்கிராம கற்களினால் ஆனவள். மராட்டிய மன்னன் வீர சிவாஜியின் குலதெய்வமாக விளங்கியவள். சிவாஜி மன்னனுக்கு இவளே வாள் தந்ததாக ஐதீகம். சிவாஜி ஒவ்வொரு போரின் போதும் இந்த தேவியை வணங்கி விட்டுத்தான் வாள் எடுப்பார். அந்தத் தேவி அவருக்கு எப்போதும் வெற்றியைப் பரிசாக அளித்திருக்கிறாள்.
இந்த ஆலயத்திற்குச் செல்பவர்கள் அங்கே இருக்கின்ற வெள்ளித் தூண் ஒன்றை 7 நாட்கள் தொடர்ந்து வலம் வந்து வழிபட்டால் தீராத வியாதிகள் தீரும் என்பது நம்பிக்கை.
பக்தர்கள் புதிய காரியம் ஒன்றைத் தொடங்கும்போது இங்கே இருக்கும் சிந்தாமணி என்ற அதிசயக்கல்லிடம் அனுமதி கேட்கிறார்கள். தங்கள் கோரிக்கையைச் சொன்னால், அது சம்மதம் தெரிவிக்குமானால் வலதுபுறம் சாயும் என்றும், ஒப்புதல் அளிக்க வில்லை என்றால் இடதுபுறமாகச் சாயும் என்றுப முதியவர்கள் தெரிவிக்கின்றனர்.
கல்லின் அனுமதி பெற்ற பிறகு செய்கின்ற அனைத்துக் காரியங்களும் தடையில்லாமல் வெற்றியில் முடிகிறது என்பது அவர்களுடைய நம்பிக்கை.
செல்லும் வழி:
சென்னையில் இருந்து மும்பை செல்லும் வழியில் சோலாப்பூர் ரயில் நிலையத்தில் இருந்து 45 கிமீ தொலைவில் உஸ்மனாபாத் என்ற ஊருக்கு அருகில் துல்ஜாபூர் இருக்கிறது.
முத்தொழில் இயற்றுவதோடு, மும்மூர்த்திகளின் உள்ளிருந்து இயக்கும் தேவியின் பெருமைகளை சொல்லி மாளாது.
துல்ஜாபூர் பவானி அம்மன் பக்தர்களின் குறைகளைக் கேட்டு அதனை உடனுக்குடன் தீர்த்து வைக்கும் ஆற்றல் பெற்றவளாக இருப்பதை நேரில் சென்றவர்கள் அனுபவத்தில் உணரமுடியும்.
இந்தத் தொகுப்பின் வழியே துல்ஜாபவானி அம்மனின் அருள் கடாட்சத்தைப் பெறுவதுடன், உங்களின் புதிய முயற்சிகள் வெற்றியடைய அதிசயச் சிந்தாமணி கல்லின் உத்தரவைக் கேட்கும் முறை மற்றும் நோய்கள் தீர்க்கும் வெள்ளித்தூண் வழிபாட்டு முறைகளைத் தெளிவாக அறிந்து செயல்பட முடியும்.