ஆன்மிகக் கதை: மார்பில் மரு, காலில் தழும்பு, விரல்களில் நகங்கள் - உயிரோட்டமான அதிசய நடராஜர்! எங்கே?

சுயம்பு மூர்த்தியாக மிகப்பெரிய நடராஜர் அருளும் கோவில் – எங்கே?
Uma Maheswarar temple
Uma Maheswarar templeCredits: Aanmeegam.org
Published on
deepam strip
deepam strip

கும்பகோணம் அருகே அமைந்துள்ள ஊர் கோனேரிராஜபுரம். இத்தலத்திற்கு திருநல்லம் என்ற பெயரும் உண்டு. இங்குள்ள உமா மகேஸ்வரர் திருக்கோயில் மிகவும் சிறப்பு வாய்ந்தது. முதலில் இத்தலத்தில் லிங்க மூர்த்தியாக அருளும் பூமீஸ்வரர், உமா மகேஸ்வரரின் சிறப்பை சுருக்கமாகப் பார்ப்போம்.

இரண்யாக்ஷன் என்ற அசுரன் பூமாதேவியை பாதாளத்திற்குத் தூக்கிச் சென்றபோது, மகாவிஷ்ணு வராக அவதாரம் எடுத்து பூமாதேவியை மீட்டு வந்தார். இனிமேலும் எந்தச் சிக்கலும் வராமல் நிலைத்திருக்க, பூமாதேவியை திருநல்லம் என்னும் தலத்தில் சிவபெருமானை வணங்கி பூஜிக்குமாறு உபதேசித்தார் மகாவிஷ்ணு.

அதன்படி, காவிரிக் கரையில் சிவனை வழிபட ஏற்ற இடத்தைத் தேடிக் கண்டறிந்தார் பூமாதேவி. திருவீழிமிழலைக்கு வடமேற்கே ஒரு இடத்தில் பெரிய அரசமரம் இருந்தது. பிரம்மாவால் தோற்றுவிக்கப்பட்ட பிரம்ம தீர்த்தம் இருந்தது. இதுவே சிவனைப் பூஜிக்க உகந்த இடம் என்று தீர்மானித்த பூமாதேவி, தேவ சிற்பியான விஸ்வகர்மாவிடம் அங்கே ஆலயம் அமைக்கச் சொன்னார். அதன்படி தேவ சிற்பி ஆலயம் எழுப்ப, தேவகுரு பிரகஸ்பதி மேற்கு முகமாக உமா மகேஸ்வரரைப் பிரதிஷ்டை(Uma Maheswarar temple) செய்தார்.

பூமாதேவியும் உமா மகேஸ்வரரை இடையறாது பூஜித்து அருள்பெற்றார். உலக உயிர்களுக்கு தீர்த்தம் ஒன்றை உருவாக்கும்படி இறைவன் பணிக்க, அப்போது பூமாதேவி தோற்றுவித்ததே இங்குள்ள பூமி தீர்த்தம்.

இங்கு மூலவராக அருள்பாலிக்கும் உமா-மகேஸ்வரர் பிரகஸ்பதி பிரதிஷ்டை செய்து பூமாதேவி பூஜித்த லிங்கமாகும். இனி இங்கு அருளும் நடராஜரின் சிறப்புகளைத் தெரிந்து கொள்ளலாம்.

வேறு எங்கும் தரிசிக்க முடியாத மிகவும் உயரமான நடராஜரை இங்கே தரிசிக்கலாம். சுயம்பு வடிவமாக உருவான லிங்கத்தை நிறைய ஆலயங்களில் தரிசித்திருப்போம். சுயம்பு மூர்த்தியாக உருவான நடராஜர் இவர்.

சோழ மன்னனின் கனவில் தோன்றிய ஈசன், கோனேரிராஜபுரம் ஆலயத்தில் நடராஜர் சிற்பம் ஒன்றை அமைக்கும்படி பணித்தார். மன்னர் அமைச்சரிடம் சொல்லி, சிறந்த சிற்பி ஒருவரை வரவழைத்தார். மூன்று மாதங்களுக்குள் பஞ்சலோகத்தால் சிறந்த நடராஜர் விக்கிரகத்தை உருவாக்கும்படி சிற்பிக்குக் கட்டளையிட்டார் அரசர்.

சிறந்த சிவ பக்தரான சிற்பியும், இது தனக்குக் கிடைத்த பெரும்பேறு என உள்ளம் மகிழ்ந்தார். இறைவனைத் தியானித்து விக்ரகம் செய்யும் பணியில் இறங்கினார். ஆனால், அத்தனை சுலபத்தில் வேலை நடப்பதாக இல்லை. சிற்பி ஒவ்வொரு முறை பஞ்சலோகக் கலவையை உருக்கி அச்சில் வார்க்கும்போதும் ஏதாவது ஒரு குறை வந்தது. விக்கிரகம் முழுமை பெறாமல் அவரை சோதித்தது. காரணம் என்ன என்பதும் சிற்பிக்குப் புரியவில்லை.

நாட்கள் கரைந்தன. விக்ரகம் செய்யும் பணி எந்த அளவில் இருக்கிறது என்பதைக் காண வந்தார் அரசர். நடராஜர் விக்ரகம் இன்னும் தயாராகாமல் இருப்பதைக் கண்டு சினம் கொண்டார்.

“இன்னும் இரண்டு நாட்களில் நடராஜர் விக்ரகம் தயாராகவில்லை என்றால், உன் தலை உருளும்” என்று கோபத்துடன் கூறிவிட்டுச் சென்றார்.

சிற்பி மிகுந்த கவலை கொண்டார். சிவபெருமானிடம் முறையிட்டு அழுதார். இரண்டு நாட்களுக்குள் விக்கிரகம் தயாராக வேண்டுமே என்ற பயமும், ஈசன் மீது தான் கொண்ட பக்தியில் ஏதேனும் குறை உள்ளதோ என்ற கவலையும் அவரை ஆட்கொண்டது. எல்லாம்வல்ல அம்பலவாணனின் பாதங்களைப் பணிந்து, மறுபடியும் விக்ரகம் செய்யும் முயற்சியில் இறங்கினார்.

பஞ்சலோகக் கலவை உலைகலனில் கொதிக்கத் தொடங்கியது. அப்போது வாசலில் யாரோ அழைக்கும் குரல் கேட்டு, வாசலுக்கு வந்தார் சிற்பி. வயதான சிவனடியார் ஒருவர் வாசலில் நின்றிருந்தார்.

“ஐயா, மிகவும் தாகமாக இருக்கிறது. பருக நீர் கிடைக்குமா? சுடுதண்ணீராக இருந்தால் நல்லது, வயதாகி விட்டதல்லவா” என்றார் அந்த முதியவர்.

சிற்பி இருந்த மனநிலையில், அவரால் முதியவருக்கு பொறுமையாக பதில் சொல்ல முடியவில்லை.

“இன்னும் இரு நாட்களில் என் தலை உருளப் போகிறது. நீங்கள் வேறு நேரம் காலம் தெரியாமல் வந்து, சுடுதண்ணீர் வேண்டும் என்று எரிச்சலைக் கிளப்புகிறீர்கள். உள்ளே உலைகலனில் கலவை சூடாகக் கொதித்துக் கொண்டிருக்கிறது. வேண்டுமானால் அதையே எடுத்து குடித்துக் கொள்ளுங்கள்” என்று சொல்லிவிட்டு ஆயாசத்துடன் வாசலில் உட்கார்ந்துவிட்டார் சிற்பி.

முதிய சிவனடியார் உள்ளே வந்தார். உலைகலனில் நன்கு கொதித்துக் கொண்டிருந்த கலவையை, அப்படியே எடுத்துக் குடித்தார் சிவனடியார். என்ன அதிசயம்! சிவனடியார் அப்படியே நடராஜர் விக்கிரகமாகவே உறைந்து நின்றார்.

உள்ளே சென்ற சிவனடியார் திரும்பி வராததால், குழப்பத்துடன் எழுந்து வந்த சிற்பி, நடராஜர் விக்ரகத்தைக் கண்டதும் ஸ்தம்பித்தார். சிவனடியாரைக் காணாது தேடினார். நடராஜர் விக்ரகத்தின் மார்பில் ஒரு மரு இருந்தது. மருவில் ஒரு ரோமம் இருந்தது. இதே மருவை சிவனடியாரின் மார்பிலும் பார்த்தது சிற்பிக்கு நினைவுக்கு வந்தது.

இப்போது அவருக்கு எல்லாம் புரிந்தது. சிவனடியாராக வந்து தன் மனக்குறை தீர்த்தவர் ஆடல்வல்லான் என்பதை உணர்ந்து சிலிர்த்தார். நடராஜர் சிலையின் கையில், சிவனடியாருக்கு இருந்தது போன்றே நகங்களும் கை ரேகைகளும் இருப்பதைப் பார்த்ததும் சிற்பிக்கு வார்த்தைகள் வரவில்லை.

அரசர் வந்தார். நடராஜர் விக்ரகத்தைக் கண்டு பிரமித்தார். சிலையில் நகங்கள் ரோமங்கள் என உயிரோட்டமாக இருப்பதைக் கண்டு ஆச்சரியமடைந்தார். சிற்பியிடம் இதுகுறித்து விசாரித்தார். நடந்த அனைத்தையும் சிலிர்ப்புடன் விவரித்தார் சிற்பி. ஆனால், அரசர் அதை நம்பவேண்டுமே. சிற்பி பொய் சொல்வதாக எண்ணி சினம் கொண்டார்.

சட்டென்று வாளை உருவி சிற்பியை வெட்ட முயன்றபோது, சிலையின் காலில் வாள் பட்டது. அதிலிருந்து ரத்தம் பீறிட்டு வந்தது. மேலும் அரசருக்கு தொழுநோய் பிடித்தது. அரசர் தன் தவறை உணர்ந்து இறைவனிடம் சரணடைந்தார்.

இதையும் படியுங்கள்:
விதியை மாற்றும் எட்டாம் படைவீடு! சென்னையில் இப்படி ஒரு அதிசய முருகன் கோவிலா?
Uma Maheswarar temple

“இவ்வூர் ஆலயத்தில் அருளும் வைத்தியநாத சுவாமிக்கு 48 நாட்கள் பூஜை செய்தால் குணமடையலாம்,” என்று சிவபெருமான் அருளினார். அரசரும் அவ்விதமே பூஜை செய்து தொழு நோயிலிருந்து குணமடைந்தார். இப்போதும் இத்தலத்தில் அருளும் வைத்தியநாதசுவாமி, தீர்க்க இயலாத சகல நோய்களையும் தீர்த்து வைப்பதாய் பக்தர்கள் நம்புகிறார்கள்.

மிகப்பெரிய சுயம்பு மூர்த்தியாக இங்கு அருளும் நடராஜப் பெருமானின் வலது பாதத்தில் மன்னனின் வாளால் வெட்டுப்பட்ட தடத்தை இப்போதும் காணலாம்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com