
உப்பிலியப்பன் கோயில் கும்பகோணத்திற்கு தென்கிழக்கில் காரைக்கால் செல்லும் நெடுஞ்சாலையில் 8 கி.மீ. தொலைவில் புகழ்பெற்ற திருநாகேஸ்வரத்திற்குத் தெற்கே ஒரு கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது. கும்பகோணத்தில் இருந்து நகரப்பேருந்தும், தனியார் போக்குவரத்து வசதிகளும் உள்ளன.
முற்காலத்தில் மிருகண்டு மகரிஷியின் புத்திரன் மார்கண்டேய மகரிஷி பூமாதேவி தனக்கு மகளாகவும் திருமால் மாப்பிள்ளையாகவும் ஆக வேண்டும் என கடும் தவம் செய்தார். அப்போது துளசி வனத்தில் அழகிய பெண் குழந்தையைக் கண்டு வியந்து எடுத்து பூமாதேவி என பெயர்சூட்டி மார்கண்டேயர் வளர்த்தார். காலத்தில் அவள் திருமண வயதை அடைந்தாள். திருமாலின் அவதார நோக்கம் நிறைவேறும் காலமும் வந்தது.
ஒருநாள் திருமால் வயது முதிர்ந்த அந்தணர் வேடம் பூண்டு மார்கண்டேயர் குடிலுக்கு வந்தார். பூமாதேவியைத் தனக்கு மணம் முடிக்கும்படி மார்கண்டேயரிடம் கேட்டார். வயதானவருக்கு தனது மகளை மணம் செய்து வைக்க மார்கண்டேயருக்கு விருப்பமில்லை. ஏதேதோ கூறியும் வயதானவர் கோலத்தில் இருந்த திருமால் கேட்கவில்லை. எனவே, தன் மகளுக்கு உப்பு போட்டு சமைக்கத் தெரியாது என ஒரு காரணத்தை திருமாலிடம் கூறினார். ஆனால், திருமால் விடாமல், தான் அவள் சமைக்கும் உப்பில்லாத சமயலை உண்ணத் தயாராக இருப்பதாகவும் கூறினார்.
செய்வதறியாது மார்கண்டேயன் தனது கண்களை மூடி திருமாலை வேண்டி கண்களைத் திறந்தார். அப்போது திருமாலே அவர் முன் தோன்றி, அவரிடம் வளர்ந்தது பூமாதேவியே என உரைத்து அவளை மணம் முடித்ததாக ஸ்தல புராணம் கூறுகிறது. இதனால், மார்க்கண்டேயரின் விருப்பமும் நிறைவேறியது. அதனால் இன்றும் இங்கு சுவாமிக்கு உப்பில்லாமல் தான் தினமும் உணவு நைவேத்தியம் செய்யப்படுகிறது.
உப்பிலியப்பன் என்ற பெயர் காலப்போக்கில், ஒப்பிலியப்பன் என மருவியதாகக் கூறப்படுகிறது. உப்பிலியப்பனுக்கு உப்பில்லாத நிவேதனமே உகந்தது என்பதால், இன்றும் தினமும் உப்பில்லாத திருவமுதை பெருமாளுக்கு நிவேதனம் செய்கின்றனர்.
ஒப்பிலியப்ப பெருமாள் மார்க்கண்டேய மகரிஷி, காவிரி, கருடன், தருமதேவதை ஆகியோருக்கு தரிசனம் தந்தவர் ஆவார். ஒப்பிலியப்பன் கோவில் திருத்தலம் செண்பகவனம், ஆகாசநகரம், திருவிண்ணகர், மார்க்கண்டேய க்ஷேத்திரம், தென் திருப்பதி என்ற பெயர்களாலும் அழைக்கப்படுகிறது.
பொன்னப்பன், மணியப்பன், முத்தப்பன், என்னப்பன், திருவிண்ணகரப்பன் என்னும் ஐந்து பெயர்களில் பன்னிரண்டு ஆழ்வார்களில் ஒருவரான நம்மாழ்வாருக்கு திருமால் இத்தலத்தில் காட்சி அளித்துள்ளார்.
ஒவ்வொரு வருட ஐப்பசி சிரவண நட்சத்திரத்தன்றும் இக்கோவிலில் திருக்கல்யாணம் சிறப்பாக நடக்கிறது. இத்திருகல்யாணத்தில் கலந்து கொண்டால் திருமணத் தடை நீங்கி குழந்தை பேறு கிட்டும் என பக்தர்கள் நம்புகின்றனர். திருப்பதி பெருமாளுக்கு அண்ணனாக உப்பிலியப்பன் கருதப்படுகிறார். இங்கு சென்றாலே திருப்பதிக்கு சென்று பெருமாளை தரிசித்த பலன் கிட்டும் எனவும் கூறப்படுகிறது.
இந்தப் பெருமாளை திருமண வயது வந்தும் நெடுநாள் திருமணமாகாத தனது மகன், மகள்களுக்கு திருமணம் ஆக அருள் புரிய பலரும் பிரார்த்தனை செய்து கொள்கின்றனர். அந்த பிரார்த்தனை நிறைவேறுவதாகவும் கூறப்படுகிறது. எனவே, முகூர்த்த நாட்களில் கோவிலின் திருமண மண்டபங்களிலும், திருக்கோவிலை சுற்றி அமைந்துள்ள திருமண மண்டபங்களிலும் மக்கள் அலையைக் காண முடிகிறது. வாழ்வில் ஒருமுறையேனும் நாம் இத்திருக்கோவிலுக்கு சென்று வழிபட்டு நம்முடைய சொந்த வாழ்விலும், தொழில் வாழ்விலும் நலத்தினை பெறுவோமாக!