

எந்த பூஜையாக இருந்தாலும்… அது வீட்டில் இருந்தாலும் அல்லது கோவிலில் இருந்தாலும் பிள்ளையார் விக்ரகம் இருந்தால் அல்லது வீடாக இருந்தால் மஞ்சளில் பிள்ளையார் பிடித்து தீபாராதனை செய்து ஒரு ஸ்லோகம் சொல்வார்கள்.
எல்லோரும் இந்த ஸ்லோகத்தை கேட்டு இருப்பார்கள்.
அந்த முதல் ஸ்லோகம் என்ன..?
சுக்லாம் பரதரம் விஷ்ணும்
சசி வர்ணம் சதுர் புஜம்… !
பிரசன்ன வதனம் த்யாதே
சர்வ விக்நோப சாந்தயே… !!
இது தான் முதல் ஸ்லோகம். எங்கும் எப்போதும் இது மட்டுமே தான் துவக்க ஸ்லோகம்.
இந்த ஸ்லோகம் யாரை பற்றி பேசுகிறது… ?
முதலில் ஸ்லோகத்தின் அர்த்தம் பார்ப்போம்.
‘சுக்லாம் பரதரம்’ = வெள்ளை உடை அணிந்தவர்.
‘விஷ்ணும்’ = வெள்ளை ஆடை உடுத்திய விஷ்ணு
‘சசி வர்ணம்’ = சந்திரனை போல ஒளிமயமான
‘சதுர் புஜம்’= 4 கைகளை உடையவர்.
‘பிரசன்ன வதனம்’= அழகிய முகம் உடையவர்
‘சர்வ விக்னோப சாந்தயே’ = எல்லா விதமான தடைகள் அல்லது விக்னங்களை போக்குபவரை
‘த்யாதே’ = தியானிக்கிறேன்.
இப்போது இந்த ஸ்லோகம் யாரை பற்றி எழுதப்பட்டது என்று பார்ப்போம்.
முதலில் கணபதி, விநாயகர், பிள்ளையார் என்று எங்கும் குறிப்பிட வில்லை. பிள்ளையார் வெள்ளை உடையை அணிபவர் இல்லை. பெரும்பாலும் மஞ்சள் மட்டுமே அணிவார்.
அடுத்து ஸ்லோகத்தில் விஷ்ணும் என்று அழைக்கப்படுகிறது. ஆம். விஷ்ணு பெயர் மட்டுமே உள்ளது.
சந்திரன் போல பிரகாசிப்பவர் விஷ்ணு தான்.
மேலும் நான்கு கைகளை உடையவர் விஷ்ணு மட்டுமே.
சகல விதமான விக்னங்களை போக்குபவர் என்று சொல்லப்படுகிறது. அவரை நான் தியானிக்கிறேன் என்று ஸ்லோகம் முழுமை அடைகிறது.
இந்த ஸ்லோகம் விநாயகர் மற்றும் மகாவிஷ்ணு ஆகிய இருவருக்குமே பொருந்தும்.
விஷ்ணு என்று பெயர் இருந்தாலும், நடைமுறையில், சகல விதமான விக்னங்களை போக்கும் விக்னேஸ்வர்.. விநாயகரை வழி பட ஆரம்பித்தார்கள்.
இது பரம்பரை பரம்பரையாக தொடருகிறது.
யார் எந்த காரியத்தை துவங்கினாலும் பிள்ளையாரை வழிபட்டு இந்த ஸ்லோகத்தை தான் இப்போதும் சொல்கிறார்கள்.
மக்களுக்கு பிள்ளையார் மீது அளவுகடந்த பக்தி.
பிள்ளையாருக்கு தோற்றம் இல்லை எனவே முடிவும் இல்லை. ஆதலால் தான் எல்லோரும் அவரை “முழுமுதற் கடவுள்..!” என்று அழைக்கின்றனர்.
பரீட்சை, தொழில், வேலை, கல்யாணம் என்று எதை பிரார்த்தனை செய்தாலும் அவர் அதற்கு வரும் தடைகளை நீக்கி சுபத்தை அளிப்பார்.
இது காலங்காலமாக நடந்து வருகிறது.
தீபாவளி பலகாரம் செய்ய துவங்கும் போது அடுப்படியில் மஞ்சள்தூளில் பிள்ளையார் பிடித்து வைத்து குங்குமம் வைத்து விட்டு தான் துவங்குவார்கள்.
பிள்ளையார் பெருமை சொல்லி மாளாது.
ஆதலால் தான் இந்தியா முழுக்க முழுக்க விநாயகர் சதுர்த்தியை திருவிழாவாக கொண்டாடுகிறார்கள்.
நாமும் நம் வாழ்வில் வரும் பிரச்னைகளுக்கு தீர்வாக பிள்ளையாரை பிரார்த்தனை செய்வோம். நிச்சயமாக கணபதி நமக்கு நல்ல வழி காட்டுவார் என்று நம்பி அவரை நினைத்து தியானம் செய்வோம்… !
பி.கு.: வியசார் சொல்ல மகாபாரதம் எழுதிய முதல் ஸ்டேனோகிரஃப்பர் பிள்ளையார் தான்…!
‘ஓம் கம் கம் கணபதியே நம’...