மனித மனம் என்பது நிலையானது அல்ல. அந்த மனதை நிலை நிறுத்தி வைக்க மிகவும் தேவையானது இறைபக்திதான் என்பதை அனைவரும் உணர்வோம்.
பலவகையான சிந்தனை, உணர்ச்சிகள், கற்பனை திறன்கள் நிறைந்தது தான் மனித மனம். மனிதனுக்கு மன உறுதி மிகவும் முக்கியமானது. அச்சமில்லா மனம் படைத்தவர்கள் தான் சோர்வின்றி வாழ முடியும். அந்த மனதை பெற இறைசிந்தனையால் தான் முடியும்.
ஒருவர் தனது அறிவாற்றல் மற்றும் உணர்ச்சி திறன்களை பயன்படுத்தி சமூகத்தில் செயல்படுவதால் அன்றாட வாழ்க்கை தேவைகளை அடைய முடியும். சுதந்திரமான வாழ்க்கை வாழ்தல், கடினமான சூழ்நிலையில் திறன் பட செயல் படுவது இவையெல்லாம் நம் மனநிலையை பொறுத்து தான் அமையும். அந்த மனநிலையை பெற இறை சிந்தனை தேவை.
மனிதனின் மனநிலையில் தோன்றும் வாழ்க்கை தரும் இனிப்பும், கசப்பு மான உணர்வுகளை சமமாக மேற்கொண்டு, நேரத்திற்கு தகுந்தவாறு மனதை கட்டுபடுத்தி வாழ இறை பக்தி மிகவும் தேவை. பணத்தை நாடி, சிற்றின்பங்களை தேடி வாழ்க்கையில் நிலையற்ற இன்பங்களை தேடி ஓடிக்கொண்டிருக்கும் மனதை அடக்கி ஆளும் திறனை ஒவ்வொருவரும் பெற வேண்டுமென்றால் இறை பக்தி ஒன்றால் தான் முடியும்.
குழந்தைகள் ஒளி மயமான இன்ப கனவுகளில் மிதிப்பதும் பின்னர் அவை அனைத்தும் வீண் என்று காண்பதும், வயதானவர்கள் தங்கள் கடந்த கால செயல்களை அசை போடுவதும், மாயை வலையிலிருந்து வெளியேற முடியாமல் திண்டாடுவதும், இப்படியெல்லாம் நிலையற்ற இன்பங்களை நாடி ஓடுகின்ற மனித மனதை சீர்படுத்த மிகவும் முக்கியமானது இறை சிந்தனை ஒன்றுதான்.
கவலையும், மகிழ்ச்சியும், மாறி, மாறி வருவதுதான் மனித வாழ்க்கை. இன்பமும், துன்பமும், கண்டு மனம் உணர்ச்சி கொள்ளாமல் தன் மகிமையில் தனக்குத் தானே திருப்தியாக நிறைவு கண்டு ஆனந்தமாக, அமைதியாக, கம்பீரமாக வீற்றிருக்கும் மனதை பெற இறை பக்தியால் மட்டுமே முடியும்.
நம்மை ஆள்வதற்கு நம்மால் தான் முடியும். பிறர் உதவி வேண்டாம். மனதை பயமற்ற நிலைக்கு வழி நடத்த தெய்வ அருள் தேவை. மனதில் தோன்றும் வீண் குழப்பங்களை கண்டு பயப்படாமல் இறைவா என் வாழ்க்கை நீ நினைத்தது போல் நடக்கட்டும் என்று அமைதி கொள்ளும் போது மனம் அடங்கி விடுகிறது.
தியானத்தின் மூலம் நம் மனதை ஒரு நிலை படுத்தலாம். மனித மனம் என்பது ஒரு குரங்கு. நிலை இல்லாமல் அலைந்து கொண்டிருக்கும் மனதை நிலை நிறுத்த தியானம் செய்ய முடிய வில்லை என்றால் எந்த தெய்வம் இஷ்டமாக இருக்கிறதோ அந்த தெய்வத்தை நம் மனம் குழப்பத்தில் இருக்கும் போது, மனத்திரையில் நினைத்து கொள்ளலாம். தெளிவான மனநிலை கிடைக்கும். மனதை அடக்கவும், எண்ணங்களை சேகரிக்கவும் மனதை அமைதியாக வைத்திருக்க வேண்டும். மனதை கட்டுபடுத்துவது என்பது ஒரு நாளில் முடியாது. சிறுக சிறுக பழகி கொள்ள வேண்டும்.
சிந்தனையும், மொழியும், ஆன்மாவும், இறைவனும் நெருங்கிய தொடர்பு உடையவை. அன்பான எண்ணங்கள் மற்றவர்களை உயர்த்திக் காட்டும். இரக்கமற்ற தீய எண்ணங்கள் மற்றவர்களை காயப்படுத்துகின்றன. நல்ல எண்ணங்களை வளர்த்துக் கொள்ள அற செயல்களை செய்வதிலும், சமய நூல்களை படிப்பதிலும் எப்போதும் நம்மை ஈடுபடுத்திக் கொள்ள வேண்டும். அதற்கு உறுதுணையாக இருப்பது இறை நம்பிக்கைதான்
ஆறு போல் ஓடுகின்ற மனதை அணை பிடித்து வைக்க வேண்டுமென்றால் ஒவ்வொருவர் உள்ளத்திலும் இறை சிந்தனை அருவி போல் பாய வேண்டும்.