
காலண்டரில் நன்றாக கவனித்துப் பார்த்தால், ராகு காலம், எமகண்டம், குளிகை என்று போட்டிருப்பதை பார்க்க முடியும். அந்த குளிகை காலம் சனீஸ்வரருக்கும், ஜேஸ்டாதேவிக்கும் பிறந்த குளிகனுடையது ஆகும்.
பொதுவாக குளிகை காலத்தில் செய்யப்படும் எந்த காரியமாக இருந்தாலும், அது திரும்ப திரும்ப நடக்கும் என்று சொல்லப்படுகிறது. இதனால் குளிகை காலம் நல்ல காரியங்கள் செய்ய ஏற்றதாகவும், ஈமகாரியங்கள் செய்ய உகந்ததில்லை என்றும் சொல்லப்படுகிறது. குளிகை காலத்தில் எந்த காரியம் செய்தாலும் அது வளர்ந்துக் கொண்டேயிருக்கும்.
இதனால் அடகு வைப்பது, கடன் வாங்குவது, வீட்டை காலி செய்வது, இறந்தவர்கள் உடலை எடுத்துச் செல்வது போன்ற விஷயங்களை செய்யக்கூடாது. அதைப்போல குளிகை காலத்தில் சொத்துக்கள் வாங்குவது, சுபநிகழ்ச்சிகளை நடத்துவது, கடனை திருப்பி கொடுப்பது, பிறந்தநாள் கொண்டாட்டம் போன்ற நல்ல காரியங்களை செய்வதால் அது மென்மேலும் வளரும் என்பது ஐதீகம். சனிக்கிழமை மாலை நேரத்தில் குளிகனை வணங்கலாம். சனீஸ்வரரை வணங்கும் போது குளிகனையும் சேர்த்து வணங்குவது சிறப்பு.
இத்தகைய சிறப்புகளைக் கொண்ட குளிகன் பிறந்த கதை தெரியுமா? ராவணின் மனைவி மண்டோதரி நிறைமாத கர்ப்பிணியாக இருந்தாள். அப்போது ராவணன் தன் குலக்குருவான சுக்ராச்சாரியாரை சந்தித்து, ‘யாராலும் வெல்ல முடியாத அழகும், அறிவும் கொண்ட மகன் எனக்கு பிறக்க என்ன செய்ய வேண்டும்?’ என்று கேட்டான். அதற்கு அவர், "அனைத்து கிரகங்களும் ஒரே கட்டத்தில் இருக்கும் போது குழந்தை பிறந்தால் அந்த குழந்தை எல்லா சிறப்புகளையும் பெற்றதாக இருக்கும்" என்று கூறினார்.
இதைக்கேட்ட ராவணன் உடனேயே நவகிரகங்களை சிறைப்பிடித்து ஒரே அறையில் அடைத்தான். நவகிரகங்கள் தாங்கள் ஒரே இடத்தில் இருப்பதை எண்ணி, நடக்கவிருக்கும் விபரீதத்தை நினைத்து பயந்தனர். அதே சமயம் மண்டோதரி குழந்தை பிறப்பதில் தாமதம் ஏற்பட்டு பெரும் தவிப்பில் இருந்தாள். இதைக் கேள்விப்பட்ட நவகிரகங்கள், ‘தங்களால் தான் இவ்வாறு நடக்கிறதோ?’ என்று எண்ணி பயந்து குருவிடம் யோசனைக் கேட்டனர். "இதிலிருந்து விடுபட உங்கள் ஒன்பது பேரைத் தவிர நல்லது செய்யும் இன்னொருவரை சிருஷ்டித்து அவனுக்கென்று தனியாக ஒவ்வொரு நாளிலும் அவனுக்கென ஒரு குறிப்பிட்ட நேரத்தை கொடுத்தால் நன்மை உண்டாகும். இதனால் மண்டோதரிக்கும் சுகப்பிரசவம் நடக்கும். நீங்களும் விடுதலையாகலாம்" என்று கூறினார் குரு.
இதனால் சனீஸ்வரர் தனது சக்தியினால் தன் மனைவி ஜேஸ்டாதேவிக்கு ஒரு மகனை பிறக்க செய்தார். அவனே குளிகன் ஆவான். குளிகன் பிறக்கும் போது மண்டோதரிக்கும் சுகப்பிரசவம் ஆனது. பிறக்கும் போதே நல்லதை நடத்தி வைத்த குளிகன் நவகிரங்களால் பாராட்டப்பட்டான். அவன் பிறந்த நேரம் குளிகை நேரம் என்று தினமும் பகலிலும், இரவிலும் ஒருமணி நேரம் கொடுக்கப்பட்டது. அந்த நேரத்தில் செய்யும் எந்த காரியமும் கைக்கூடும் என்று சொல்லப்படுகிறது.