ஆடியில், அம்பிகை, மகாலெஷ்மி மற்றும் சரஸ்வதி ஆகிய மூன்று தேவியர்களையும் பூஜிப்பது, காலம், காலமாக கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.
அம்பிகையே விரதமிருக்கும் மாதமிது. இந்த ஆடி மாதமுழுவதும் பக்தர்களுடன் கலந்து அருள் புரிகிறாள்.
எவ்வாறு?
அபிராமியாகி, அபிராம பட்டருக்கு அருள் புரிந்தவளாக, கோமதியம்மனாகி, ஊசிமுனையில் தவமிருந்தவளாக, வரலெஷ்மி அன்னையாகி, மங்கலத்தை அளிப்பவளாக, ஆண்டாள் நாச்சியாராகி, பாவை நோன்பு புரிந்து பரந்தாமனை அடைந்தவளாக என பல்வேறு வடிவங்களில் காட்சியளிக்கிறாள்.
சிவபெருமான், பார்வதிதேவியின் தவத்தினை பாராட்டி, ஆடி மாதத்தை அம்மன் மாதமாக கொண்டாட வரமளித்தார்.
ஆடிச் செவ்வாயில், பெண்கள் விரதமிருந்து பார்வதி அம்மனைக் கும்பிட்டு "ஔவையார் நோன்பு" விரதமிருப்பது வழக்கம். கொழுக்கட்டை செய்து, பூஜை முடிந்தபின் நிவேதனம் செய்து, எல்லோருக்கும் கொடுத்த பின் சாப்பிடுவார்கள்.
ஆடி வெள்ளியில், முதல் வெள்ளியன்று ஸ்வர்ணாம்பிகா; பின்னர் காளி, காளிகாம்பாள், காமாட்சி, கடைசி வெள்ளியில் லெஷ்மி என வாரா, வாரம் பூஜை நடக்கும். சிறு பெண் குழந்தைகளை அம்மனாக எண்ணி, மஞ்சள், மருதாணி, வெத்தலை - பாக்கு - பழம், புதுத்துணி அளித்து விருந்து சாப்பாடு போடுவார்கள்.
ஆடிப்பூரமன்று ஆண்டாள், பெருமாளை மணம் புரிந்தநாள். அம்மனுக்கு நெறைய வளையல்களைப் போட்டு வளைகாப்பு நடத்தி பூஜை செய்வதுண்டு.
கிராமப்புறங்களில், தேங்காய்களின் மேற்புறம் இருக்கும் மூன்று கண்களில் துளைகளிட்டு, அதற்குள் பச்சரிசிமாவு, வெல்லம், நெய், ஏலம் போட்டு மூடி, அதனுள் நீண்ட குச்சியை சொருகி நெருப்பில் சுட்டெடுத்து அம்மனுக்கு நிவேதனம் செய்து பக்தர்களுக்கு பிரசாதமாக அளிப்பது உண்டு.
வரலெட்சுமி நோன்பு விரதமும், வீட்டுக்கு லெஷ்மி தேவியை வரவேற்று பூஜை செய்யும் பண்டிகைதான். பூஜையில் வைத்த மஞ்சள் சரடை, பெண்கள் கைககளில் கட்டிக் கொள்வார்கள்.
அம்மனுக்கு ஆடிமாதக்கூழ் மிகவும் விசேடமானது. மாரியம்மனாக காத்தருள்வாள்.
ஆடியில் அம்மன் அருளைப்பெற, திருவிளக்கு பூஜையை சுமங்கலிப் பெண்கள் செய்வார்கள்.
குருவடி சரணம்; திருவடி சரணம்! ஆடிப்பௌர்ணமி தினம் குருப்பூர்ணிமா வாகும். குருக்களை வணங்கி வழிபடும் தினம்.
ஆடி முழுவதும் நம்முடன் பயணிக்கும் அம்மனைப் போற்றி, அவள் திருக்கமல பாதங்களைப்பற்றி வணங்கி அருள் பெறுவோமாக!