

அருணாச்சல பிரதேசத்தில் உள்ள ஜிரோ பள்ளத்தாக்கு, அதன் அபதானி பழங்குடியினருக்காகவும், அப்பகுதியில் ஆண்டுதோறும் நடைபெறும் இசை விழாவிற்காகவும் புகழ்பெற்றது. ஆனால் ஜிரோவின் மற்றொரு சுவாரசியமான அம்சம் அங்கு சுயம்புவாகத் தோன்றிய சுயம்பு சிவலிங்கம் ஆகும்.
அருணாச்சலப் பிரதேசத்தில் உள்ள ஜீரோ (Ziro) பள்ளத்தாக்கின் மாசுபடாத மலைகளுக்கும் பசுமையான காடுகளுக்கும் நடுவே அமைந்துள்ள சித்தேஷ்வர் கோவில், கர்தோ (Kardo) மகாதேவ் கோவில் என்றும் அழைக்கப்படுகிறது. உலகின் மிகப்பெரிய, இயற்கையாக உருவான சிவலிங்கத்தை கொண்டிருக்கிறது இந்தப் புனிதமான தலம்.
இந்த சுயம்புலிங்கம் சுமார் 25 அடி உயரமும், 22 அடி அகலமும் கொண்டது, மேலும் அந்த சிவலிங்கத்தின் நான்கு அடி பகுதி பூமிக்கு அடியில் உள்ளதாகவும் கூறப்படுகிறது. கடல் மட்டத்திலிருந்து சுமார் 5,754 அடி உயரத்தில் பசுமையான கர்டோ காட்டுப் பகுதியில் அமைந்துள்ளது.
இது இந்தியாவின் மிகப்பெரிய சிவலிங்கங்களில் ஒன்றாகும். சிவலிங்கத்தின் மேல்பகுதியில் இயற்கையாகவே அமைந்த ஸ்படிகம் அல்லது ரைன்ஸ்டோன் மணிகளால் ஆன மாலையைக் காணலாம். சிவலிங்கம் கண்டுபிடிக்கப்பட்ட காலத்திலிருந்தே இந்த அம்சங்கள் அனைத்துமே அவற்றின் இயற்கையான வடிவத்தில் உள்ளது.
பிரம்மாண்டமான இந்த சிவலிங்கத்தின் அடியில் எப்போதும் வற்றாத நீர் ஊற்று ஒன்று உள்ளது. சிவலிங்கத்தின் வலதுபுறத்தில் பார்வதி தேவி, கார்த்திகேயர் சிலைகளும், இடதுபுறம் விநாயகர் மற்றும் நந்தியின் உருவங்களும் ஒரே கல்லில் காணப்படுகின்றன.
சிவலிங்கத்திற்கு அருகில் நின்ற நிலையில் உள்ள பாறை அமைப்பு பார்வதி தேவியாக வணங்கப்படுகிறது. லிங்கத்துடன் இணைக்கப்பட்டுள்ள பாறையானது யானையினுடைய தும்பிக்கை போல் காட்சி அளிக்கிறது. நந்தி மற்றும் கார்த்திகேயன் ஆகியோரின் சிற்பங்களையும் இங்கு காணமுடிகிறது. இந்த பாறை அமைப்புகள் மனிதனால் உருவாக்கப்பட்டதல்ல இயற்கையாக தோன்றியது என்று கூறப்படுகிறது.
2004 ஆம் ஆண்டு சிரவண மாதத்தில் நேபாளத்தைச் சேர்ந்த மரவெட்டியான பிரேம் சுபா அந்த இடத்திற்கு அருகில் இருந்த ஒரு மரத்தை வெட்டிக் கொண்டிருந்த பொழுது, எதிர்பாராத விதமாக உயர்ந்து நின்ற ஒரு பாறையின் மீது விழுந்து கீழே விழுந்தது.
அந்தப் பாறையைக் கண்ட அவர் இது சாதாரண பாறை அல்ல, புனிதமான சிவலிங்கம் என்பதை உணர்ந்து உள்ளூர் மக்களிடம் சொல்ல பக்தர்கள் மத்தியில் இந்த செய்தி வேகமாக பரவியது. ஆனால் ஏற்கனவே 1970களின் பிற்பகுதியில் மேற்கொள்ளப்பட்ட கண்டுபிடிப்புகளுடன், இந்தத் தளம் முன்பே அறியப்பட்டிருந்தது என்பதை தொல்பொருள் சான்றுகள் சுட்டிக்காட்டுகின்றன.
இக்கோவில் ஜிரோ பள்ளத்தாக்கின் கார்டோ வனப்பகுதியில் அமைந்துள்ளதால் இது கார்டோ சிவன் மந்திர் என்றும் அழைக்கப்படுகிறது.
இந்தியாவின் பிற மாநிலங்களில் இருந்து செல்பவர்கள் அருணாச்சலப் பிரதேசத்திற்கான உள்நாட்டு அனுமதிச் சீட்டு(ILP) பெற வேண்டியது அவசியம். மகா சிவராத்திரி மற்றும் புனித சாவான் (சிரவண) மாதங்களில் பக்தர்கள் கூட்டம் இங்கு மிக அதிகமாக இருக்கும்.
எப்படி செல்வது?
ஜிரோ அல்லது ஹபோலி (Hapoli) நகரத்திலிருந்து சுமார் 6 கிலோமீட்டர் தொலைவில் உள்ள இந்த கோவிலை டாக்ஸி மூலம் எளிதாக அடையலாம். அருகில் உள்ள விமான நிலையம் அசாமில் உள்ள லீலாபாரி (Lilabari Airport) விமான நிலையம்(120கி.மீ.). அங்கிருந்து டாக்ஸிகள் மூலம் செல்லலாம். ஹார்முட்டி(Harmuti) சந்திப்பு ரயில் நிலையம் அருகில் உள்ள ரயில் நிலையமாகும். இந்த ரயில் நிலையம் அஸ்ஸாமில் உள்ள முக்கிய நகரங்களுடன் நன்கு இணைக்கப்பட்டுள்ளது. சாலை வழியாக இட்டாநகரிலிருந்து சுமார் 100 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது இக்கோவில்.