

1. அலட்சியம் ஆபத்து!
எதிரி நாடு படையெடுக்க
எதிர்க்க விரும்பிய ஓரரசன்
குதிரை ஒன்றில் குதித்தேறி
கொல்லப் போனான் எதிரியையே!
போகும் வழியில் ஓராறு
பொங்கி வழிந்தது கரைகடந்து
ஆற்றின் கரைவழி அரசனுமே
அவசரமாகப் பயணித்தான்
குதிரை வெள்ளை நிறத்ததுவாம்
குதித்துச் சீறிப் பாய்ந்ததுவாம்
அதனது காலின் ஒருகாலின்
அடியிலிருந்த லாடமது
ஆணி கழன்று வீழ்ந்ததுவாம்
ஆணி தானே என எண்ணி
அலட்சியம் செய்து அவ்வரசன்
அதன்மேல் தொடர்ந்து பயணித்தான்.
ஆணி கழன்ற காரணத்தால்
ஓட முடியாக் குதிரையுமே
ஆற்றில் தவறி விழுந்ததுவாம்
அரசனும் ஆற்றில் விழுந்தானாம்.
அரசன் இல்லா அப்போரில்
அவனது நாடு தோற்றதுவாம்
வீரர் தம்மைச் சிறைபிடித்து
வென்று விட்டான் எதிரரசன்!
அலட்சியம் பெரிய தவறாகும்
அடியொடு நம்மை வீழ்த்திவிடும்
எச்சரிக்கையாக வாழ்வோரே
எதிலும் வெல்வர் அறிவாய்நீ!!!
2. நேருமா…. அன்பைப் பார்க்க வாமா!
சுதந்திர இந்தியத் திருநாட்டில்
சுதந்திரம் பெற்ற நேரத்தில்
இதமாய் இருந்த மாலையிலே
இந்தியப் பிரதமர் நேருஜியாம்
பஞ்சாப் மண்ணில் பலர்முன்பு
பரவச மாக உரையாற்ற
நெஞ்சு நொந்த ஓர்மனிதன்
நெருங்கிப் போனான் மேடைக்கு!
கூட்டம் வியக்க உட்புகுந்து
குதித்து மேடை மீதேறி
நின்ற நேரு குர்தாவை
நெருங்கிப் பிடித்து உலுக்கியவன்
‘நாட்டு விடுதலை தனுக்காக
நீண்ட போரில் உறவுகளில்
தாத்தா பாட்டி தனையிழந்தேன்
தவிறத் தந்தையும் தாயிழந்தேன்.
இந்திய விடுதலை எனக்காக
என்ன தந்தது?? எனக்கேட்டான்.
வீரர் அவனை நெருங்கியுமே
வெகுண்டு பிடிக்கப் போகையிலே
விடுங்கள் அவனை எனச்சொல்லி
விரைந்து அவனை அருகழைத்து
‘என்ன கேட்டாய்?’ என்மகனே
நான்யார் நீயார் எண்ணிப் பார்!
‘நானோ நாட்டின் பிரதமராம்
நீயோ சாதா ஒரு பிரஜை!
பிரஜை பிரதமர் சட்டையினை
பிடித்து உலுக்க உரிமையினை
பெற்றுத் தந்ததன் பேரென்ன??
பெற்ற சுதந்தரப் பெருமையினை
காலா காலம் நீங்களெல்லாம்
காத்து இந்த விடுதலையை
கண்போல் காத்து வா!!’ வென்றார்
கனிவாய் அவனை ‘போ!’ வென்றார்!!!
இதனால் நமது நேருஜியின்
இதய அன்பு நமக்கெல்லாம்
எளிதாய்ப் புரியும் என்கண்ணே