

குழந்தைகளே, இப்போது சிறிது கஷ்டப்பட்டால் தான் பிற்காலத்திலே இன்பத்தோடு உயர்வான பதவியில் இருப்பீர்கள். இப்பொழுது நீங்கள் செய்ய வேண்டியதை செய்தால் தான் பிற்காலத்தில் நன்றாக இருப்பீர்கள். இதற்கு உதாரணமாக நான் ஒரு கதை கூறுகிறேன்.
ஒரு ஊரில் ஒரு ஆஸ்பத்ரிரி இருந்தது. அந்த ஆஸ்பத்திரியில் தரைகள் பளிங்கு கல்லால் போடப்பட்டு இருந்தன. ஆஸ்பத்திரியின் நுழைவாயிலில் ஒரு பிள்ளையார் சிலையும் இருந்தது. அந்த சிலை தரையிலிருந்து மூன்று அடி உயரத்திற்கு மேலே இருந்தது. அந்த சிலையும் பளிங்கு கல்லால் செய்யபட்டு இருந்தது.
ஒரு நாள் இரவு பன்னிரெண்டு மணி அளவில் இந்த பிள்ளையார் வடிவில் இருக்கும் கல்லானது தரை வடிவில் இருக்கும் கல்லிடம் கேட்டது, "என்ன நண்பா, நலமா? எப்படி இருக்கிறாய்?" என்று.
அதற்கு அந்த தரை கல் “என்னப்பா நண்பா, உனக்கு என்னை பார்த்தால் கிண்டலாக இருக்கா?" என்று சொல்லி முடிப்பதற்குள், மக்கள் டப் டுப் என்று ஷீவை போட்டுக் கொண்டும் செருப்பை போட்டும் கொண்டும் தரையில் போனார்கள்.
அந்த கல் வலி தாங்க முடியாமல் "ஆ, அய்யோ" என்று முனகியது. பிள்ளையார் கல் கேட்டது, "ஏன் இத்தனை அலுத்து கொள்கிறாய் நண்பா?" என்று. அவ்வளவுதான் தரை கல்லிற்கு கோபம் பொங்கி விட்டது.
"நீ ஏன் சொல்ல மாட்டாய்? உனக்கென்ன, தரையிலிருந்து மூன்று அடி உயரத்தில் இருக்க. உன்னோட height ஒரு மூன்று அடி, அதுவும் பிள்ளையார் வடிவத்தில் இருக்கிற... so எல்லோரும் உன்னை கை கூப்பி கும்பிடு போட்டுட்டு போறாங்க. ஆனால் என்னை செருப்பால மிதிக்கிறாங்க. மேலே stretcher ஓடுது, wheel chair ஓடுது, ஒரு நிமிஷம் இல்லை ஒரு நொடி கூட rest இல்லை. நீ கொடுத்து வைத்தவன், உனக்கு என்னோட கஷ்டம் எப்படி தெரியும்" என்றது.
உடனே பிள்ளையார் வடிவக் கல், "ஏய் அது உன் தவறால ஆச்சு, அன்றைக்கு நம் இருவரையும் ஓரே truck இல் தான் கொண்டு வந்தார்கள், உன்னைத் தான் முதலில் கீழே இறக்கினார்கள். இறக்கி பிள்ளையார் சிலை செய்வதற்காக கீழே போட்டு cut பண்ண போகும் போது நீ ஜோராக கத்தி தடுத்தாய்... "என்னால் இந்த கஷ்டத்தை எல்லாம் தாங்க முடியாது. என்னை அப்படியே தரையில் வெட்டாமல் போட்டு விடுங்கள்" என்று கூறினாய். ஆகவே மேஸ்திரியும் உன்னை தரையில் ஒட்டி விட்டான். ஆனால் என்னை அவர்கள் எப்படியெல்லாம் போட்டு அறுத்தார்கள், மிஷினை வைத்து என்னை கண்டதுண்டமாக வெட்டினார்கள், நான் பட்ட வேதனை கஷ்டம் எல்லாம் எனக்கு மட்டும் தான் தெரியும், ஆனால் இன்று சுகமாக இருக்கிறேன்," என்றது. அன்று அந்த தரை வடிவக் கல் சிறிது கஷ்டப்பட்டு செய்ய வேண்டியதை தடுக்காமல் இருந்திருந்தால் இன்று அதற்கும் இந்த நிலைமை இருந்திருக்காது.
ஆகவே, குழந்தைகளே, நீங்களும் இப்போது கஷ்டப்பட்டு நன்றாக படித்தீர்களேயானால் நாளைய எதிர்காலம் இன்பமாக இருக்கும்.