

ஒரு நாள் கிருஷ்ண தேவராயர் அரண்மனையில் கிருஷ்ண லீலா நாடக நாட்டியம் நடைபெற ஏற்பாடு செய்திருந்தார். தெனாலிராமனைத் தவிர மற்ற எல்லா முக்கிய பிரமுகர்களுக்கும் அழைப்பு விடுத்தார்.
இந்த நிகழ்ச்சியில் அரசியும் மற்றும் சில பெண்களும் கலந்து கொள்வதால், தெனாலிராமன் இருந்தால் ஏதாவது கோமாளித்தனம் செய்து நிகழ்ச்சியை நடைபெறாவண்ணம் தடுத்து விடுவான் என எண்ணி தெனாலிராமனை மட்டும் நாடக அரங்கில் உள்ளே விட வேண்டாம் என்று வாயில் காப்பவனிடம் கண்டிப்பாக சொல்லிவிட்டார் தேவராயர்.
இதைத் தெரிந்து கொண்டதெனாலிராமன் எப்படியாவது நாடக அரங்கினுள் சென்று விடுவது என்று தீர்மானித்துக் கொண்டான்.
நாடகம் நடைபெறும் அரங்க வாயிலை நெருங்கி உள்ளே செல்ல முற்பட்ட போது வாயிற் காப்போன் அவனை உள்ளே விட மறுத்துவிட்டான்.
மீண்டும் மீண்டும் கெஞ்சியும் வாயிற்காப்போன் மசியவில்லை.
இந்த நிலையில் தெனாலிராமன் ஒரு தந்திரம் செய்தான்.
"ஐயா, வாயில் காப்பானே! என்னை உள்ளே விட்டால் என்னுடைய திறமையால் ஏராளமான பரிசு கிடைக்கும். அதில் பாதியைத் தருகிறேன்," என்றான்.
முதலில் சம்மதிக்கா விட்டாலும் பின்னர் கிடைப்பதில் பாதி பரிசு கடைக்கிறதே என்று மகிழ்ந்து அவனை உள்ளே விட்டார்.
நாடக அரங்கத்தினுள் செல்ல மீண்டும் இன்னொரு வாயிற்காப்போனையும் சமாளிக்க வேண்டி இருந்தது.
தெனாலிராமனை உள்ளே விட மறுத்த முதல் வாயிற்காப்போனிடம் சொல்லியதையே இவனிடமும் பாதி பரிசு கொடுப்பதாக கூற, அவன் உள்ளே விட்டு விட்டான்.
ஒருவருக்கும் தெரியாமல் தெனாலிராமன் ஒரு மூலையில் போய் உட்கார்ந்து கொண்டான்.
அப்போது கிருஷ்ணன் ஆக நடித்தவர் வெண்ணையை திருடி கோபிகளிடம் அடி வாங்கும் காட்சி நடைபெற்றுக் கொண்டிருந்தது.
உடனே மூலையிலிருந்து தெனாலிராமன் மேடையில் தோன்றி கிருஷ்ணன் வேடம் போட்ட வரை கழியால் நையப் புடைத்தான்.
கிருஷ்ணர் வேடம் போட்டவர் வலி பொறுக்க முடியாமல் அலறினார்.
இதை பார்த்த மன்னர், கடும் கோபமுற்றார்.
மேடையில் பெண் வேடமிட்ட தெனாலிராமனை அழைத்து வரச் சொன்னார்.
"ஏன்? இவ்வாறு செய்தாய்?" என கேட்க,
அதற்கு தெனாலி ராமன் 'கிருஷ்ணன், கோபிகைகளிடம் எத்தனையோ அடி பட்டிருக்கிறான். இப்படியா இவன் போல் கிருஷ்ணன் அலறினான்?"
இதைக் கேட்ட மன்னருக்கு அடங்காத கோபம் ஏற்பட்டது. தெனாலிராமனுக்கு 30 கசையடி கொடுக்குமாறு தன் பணியாளர்களுக்கு உத்தரவிட்டார்.
இதைக் கேட்ட தெனாலிராமன் "அரசே இப்பரிசை எனக்கு தர வேண்டாம். எனக்குக் கிடைக்கும் பரிசை ஆளுக்குப் பாதி பாதி தருவதாக நம் இரண்டு வாயிற் காப்போனிடம் உறுதியளித்தேன். ஆகையால் இப்பரிசினை அவர்கள் இருவருக்கும் சமமாக பங்கிட்டு கொடுங்கள்," என்று, கேட்டுக் கொண்டார்.
உடனே மன்னர், அவ்விரு வாயிற்காப்போன்களை அழைத்து வரச் செய்து, இது பற்றி விசாரித்தார். இருவரும் உண்மையை ஒத்துக் கொண்டார்கள்.
உடனே இருவருக்கும், தலா 15 கசையடி கொடுக்குமாறு மன்னர் பணித்தார்.
மேலும் தெனாலி ராமனின் தந்திரத்தை பாராட்டி அவனுக்கு மன்னர் பரிசு வழங்கினார்!
குட்டீஸ்... எந்த இடத்திலும் தந்திரமாக பேசினால் அனைவரும் பாராட்டுவார்கள்.
செய்வீர்கள் தானே!