

கதை, காவியம், கவிதையெனும்
விதைகளை ஊன்றி,
கல்வி, அனுபவம், அறிவெனும்
ஊற்று நீரால் வளர்த்தெடுத்து,
புராதன நிகழ்வுகளும்
புராணக்கதைகளுமாக
படர்ந்து விரிந்து…
கற்பனைத் தேன் சுமந்த
காகித பக்கங்கள்
புத்தகங்கள் எனும்
காகித மலர்களாக
பூத்திருக்கிறதே!
காராம் பசுவின் காம்பில்
பாலருந்திடவே முட்டும்
கன்றுகுட்டிகள் போல,
புத்தம் புது மலர்களில்
தேனருந்திடவே கூடும்
பட்டாம்பூச்சிகளை போல
புத்தக பூக்களையும்
படித்திடவே இங்கே
பல மனங்கள் விரும்புகிறதே!
புத்தம் புதிய புத்தகத்தின்
பக்கங்களை வருடும் போது,
அச்சு எழுத்துக்களின் அற்புத வாசனை!
ஆன்மாவை ஆனந்தப்படுத்துகிறதே!
தவமாய் தவமிருக்கும் பக்தனுக்கு
தரிசனம் தரும் இறைவனைப் போல,
பசியால் வாடியவனுக்கு
புசிக்க கிடைத்த உணவைப் போல,
அடடா! இந்த புத்தகம்
படிப்பவனையும்
படைத்தவனையும்
ஒரு புதிய உலகத்திற்கே
கொண்டுச் செல்கிறதே!
வாருங்கள் புத்தகங்களை
வாசிப்போம்!
வாழ்வினில் புதுமைகளை
படைப்போம்!