
நாடு முழுவதும் 76-வது குடியரசு தின விழா இன்று கொண்டாடப்படுகிறது. தமிழக அரசு சார்பில் நடைபெறும் குடியரசு தின விழாவில் தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி தேசியக் கொடியை ஏற்றி வைத்து, ராணுவப் படைப்பிரிவு, கடற்படைப் பிரிவு, ராணுவ கூட்டுக் குழல் முரசு இசை பிரிவு, வான்படைப் பிரிவினர் அணியின் வணக்கத்தை ஏற்றுக்கொள்வார். குடியரசு தினத்தை முன்னிட்டு டெல்லி ராஜபாதையில் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு தேசிய கொடியை ஏற்றுவார்.
குடியரசு தினம் பற்றிய வரலாறு...
* டாக்டர் அம்பேத்கர் தலைமையில் சட்டக்குழுவால் வரையறுக்கப்பட்ட இந்திய அரசியலமைப்புச் சட்டம் 1949-ம் ஆண்டு நவம்பர் 26-ம் தேதி ஏற்றுக்கொள்ளப் பட்டது. அதன் பின்பு 1950-ம் ஆண்டு ஜனவரி 26-ந் தேதி அது நடைமுறைக்கு வந்தது. அதாவது 2 ஆண்டு, 11 மாதம் 18 நாட்களில் இந்திய அரசியல் அமைப்பு சட்டம் உருவாக்கப்பட்டு 1950 ஜனவரி 26-ம் தேதி நடைமுறைப்படுத்தப்பட்டது. அந்த நாளான ஜனவரி 26-ந் தேதியை தான் நாம் குடியரசு தினமாக கொண்டாடுகிறோம்.
* இந்தியாவில் குடியரசு தினம் என்பது ஜனவரி 26, 1950 அன்று இந்திய அரசியலமைப்பின் செயல்திறனை நினைவுகூரும் ஒரு தேசிய விடுமுறையாகும். இது அரசியலமைப்பு முடியாட்சியிலிருந்து இறையாண்மை கொண்ட ஜனநாயகக் குடியரசாக மாறுவதைக் குறிக்கிறது.
* இந்தியாவின் முதல் குடியரசு தினம் 1950 ஆண்டு ஜனவரி 26-ம்தேதி டாக்டர் ராஜேந்திர பிரசாத் நமது முதல் குடியரசுத் தலைவராகப் பதவியேற்றபோது கொண்டாடப்பட்டது.
* இந்தியாவில் குடியரசு தினத்தன்று குடியரசுத் தலைவரால் தேசியக் கொடி ஏற்றப்படுகிறது. டெல்லி ராஜ்பாத்தில் இந்தியக் கொடியான 'மூவர்ணக் கொடியை' குடியரசுத் தலைவர் ஏற்றுவார்.
* குடியரசு தினம் அன்று கடந்த ஆண்டில் நாட்டுக்கு மிகப்பெரும் சேவை புரிந்த படைவீரர்களுக்கான பதக்கங்களும் விருதுகளும் வழங்கப்படுகின்றன.
* பிற நாட்டினரோடு நட்புறவை வளர்க்கும் பொருட்டு ஒவ்வொரு ஆண்டும் குடியரசு தின விழாவுக்கு ஒரு சிறப்பு விருந்தினரை அழைப்பது வழக்கம்.
* கவால்லரி ரெஜிமன்ட் என்ற பிரிவைச் சார்ந்த வீரர்களே குடியரசுத்தலைவரின் வீரர்களாக செயல்படுகின்றனர். அவர்கள் குடியரசு தினத்தன்று வண்ண சீருடையுடன் குதிரையில் அமர்ந்து முன் செல்கிறார்கள். அவர்களைத் தொடர்ந்து தான் குடியரசுத்தலைவரின் வாகனமும், மற்ற வாகனங்களும் அணிவகுக்கும்.
* குடியரசு தின கொண்டாட்டத்தையொட்டி இந்தியாவின் படைபலத்தை உலகுக்கு தெரிவிக்கும் வகையில் ராணுவ அணி வகுப்பு டெல்லி ராஜ்பாத்தில் நடைபெறும். இந்த அணிவகுப்பு குடியரசுத் தலைவர் மாளிகையில் தொடங்கி, இந்தியா கேட் வரை நடக்கும். 1950 முதல் ஆண்டுதோறும் இந்த அணிவகுப்பு நிகழ்கிறது. முப்படை அணிவகுப்புடன், இந்தியாவின் கலாசாரத்தை பிரதிபலிக்கும் வாகனங்களின் அணிவகுப்பும் நடைபெறும்.
* குடியரசு தின கொண்டாட்டம் ஜனவரி 29-ந் தேதி டெல்லியில் உள்ள விஜய் சவுக் என்னும் இடத்தில் ‘பீட்டிங் ரெட்ரிட்' என்னும் நிகழ்வுடன் நிறைவு பெறுகிறது.
* குடியரசு தினத்தில் தேசியக்கொடி, கம்பத்தின் உச்சியில் கட்டி வைக்கப்பட்டு இருக்கும். அதை குடியரசுத்தலைவர் அவிழ்த்து விடுவார்.