

ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி 27-ஆம் தேதி 'உலக துருவக் கரடிகள் தினம்' கொண்டாடப்படுகிறது. இந்த நாள் வெறும் கொண்டாட்டமாக இல்லாமல், ஆர்க்டிக் பனிப்பரப்பின் மீது உயிர்வாழும் துருவக் கரடிகளின் எதிர்காலத்தைப் பற்றிய ஓர் எச்சரிக்கை மணியாகவே பார்க்கப்படுகிறது.
துருவக் கரடிகள் உலகின் மிகப்பெரிய கரடி இனமாகும். நன்கு வளர்ந்த ஆண் கரடி 800 கிலோ வரை எடை இருக்கும்; மணிக்கு 40 கிலோமீட்டர் வேகத்தில் ஓடும் திறன் கொண்டது.
இதன் பாதங்கள் பெரிய தட்டுகளைப் போல விரிந்து இருப்பதால், பனியில் சறுக்காமல் நடப்பதற்கு உதவி செய்கின்றன. இதன் தோல் உண்மையில் கருப்பு நிறமாகும்; ஆனால், அதன் மேல் உள்ள ரோமங்கள் நிறமிகள் அற்றவை. இந்த ரோமங்கள் ஒளியைப் பிரதிபலிப்பதால் நமக்கு வெள்ளையாகக் காட்சியளிக்கின்றன.
தோலுக்குக் கீழ் படர்ந்துள்ள நான்கு அங்குல தடிமனான கொழுப்புப் அடுக்கு, இவைகளை கடும் குளிரிலிருந்து பாதுகாக்கிறது.
இவை பெரும்பாலும் பனிப்பாறைகளில் வாழ்ந்து வருகின்றன. அங்குள்ள மீன்களையும், கடல் நாய்களையும் வேட்டையாடி உண்கின்றன. புவி வெப்பமடைவதால் தற்போது கடல் பனிகள் வேகமாக உருகி வருகின்றன. இதனால் உணவு தேட இயலாமல், துருவக் கரடிகள் நீண்ட தூரம் கடலில் நீந்த வேண்டிய கட்டாயத்திற்குத் தள்ளப்பட்டுள்ளன. இது துருவக் கரடிகள் அழியும் நிலைக்குச் சென்று கொண்டிருப்பதாக ஆராய்ச்சியாளர்களால் எச்சரிக்கப்படுகிறது.
துருவக் கரடிகள் ஒரு லட்சத்து 30 ஆயிரம் ஆண்டுகளுக்கு மேலாகப் பனிப்பகுதிகளில் வாழ்ந்து வருகின்றன. தற்போது அவற்றின் இருப்பிடம் உருகிக் கொண்டிருக்கிறது. நாம் கரியமில வாயுவின் வெளியேற்றத்தைக் குறைத்துக் கொண்டால் மட்டுமே, இந்தப் பனிக்கட்டிகள் உருகுவதைத் தடுத்து அவற்றின் வாழ்வாதாரத்தைக் காக்க முடியும்.