

மலையடிவார அழகான மருதூர் என்ற கிராமம் பசுமைப் படர்ந்திருந்தது. எங்கு பார்த்தாலும் மரங்கள் காற்றை வாரி வழங்கி கொண்டிருக்கும்.
அந்த கிராமத்தை ஒட்டி அடர்ந்த காடு இருந்தது. அந்த காட்டில் ஏராளமான மரங்கள் செழித்து வளர்ந்து இருந்தன. அதில் மாமரங்களும் நிறையவே இருந்தன.
ஆதலால், பறந்து படபடக்கும் பறவைகள், தாவி திரியும் அணில்கள், கிளிகள் எல்லாம் மாமரங்களைத் தேடி வந்து மாம்பழங்களைச் சாப்பிட்டு விட்டு போகும்.
மாம்பழங்கள் ஏராளமாய் காய்த்து தொங்கியதால் அணில்களுக்கு கொண்டாட்டம். அணில் கூட்டத்தில் இரண்டு குட்டி அணில்கள் இருந்தன. அவை இரண்டுமே படு வாண்டுகள்.
எல்லா மாமரத்திலும் ஏறி மாம்பழத்தைக் கடித்து முழுதாக சாப்பிடாமல் அரைகுறையாக சாப்பிட்டு கீழே போட்டு விடும். இப்படி நிறைய பழங்களை வீணாக்கி விடும்..
அதைப் பார்க்கும் கிளி, 'என்ன இந்த வாண்டு அணில்கள் பழங்களை வீணாக்குகின்றனவே' என்று கவலைப்படும்.
"குட்டி அணில்களே! மாம்பழங்களை கடித்து வீணாக்குகின்றீர்களே! இது நியாயமா?" என்று கிளி கேள்வி கேட்டது. குட்டி அணில்கள் காதில் போட்டுக் கொள்ளவே இல்லை. வழக்கம் போல மாம்பழங்களை கடித்து வீணாக்கியே வந்தன.
இதற்கு ஒரு முடிவு கட்ட வேண்டும் என்று அந்த காட்டில் ராஜ்யம் நடத்தி வரும் சிங்கராஜாவிடம் பச்சைக்கிளி முறையிட்டது.
"அப்படியா! உணவுப் பொருட்களை அணில் குட்டிகள் வீணாக்குகின்றனவா? இது தவறல்லவா! நான் விசாரிக்கிறேன்" என்றது.
சிறிது நேரத்தில் அணில் குட்டிகள் சிங்க ராஜாவின் முன் நின்றன.
"வணக்கம்! சிறியோர்களாகிய எங்களை வரச் சொன்னதற்கு காரணம் என்னவென்று தெரிந்து கொள்ளலாமா? சிங்கராஜாவே" என்று கைக்கட்டி நின்றன.
"சிங்கராஜாவே! இந்த வாண்டு அணில்கள் மாமரங்களில் உள்ள மாம்பழங்களை கடித்து கடித்து வீணாக்கி கீழே போட்டு விடுகின்றன. பச்சைக்கிளிகளாகிய நாங்கள் சாப்பிட முழு பழம் கிடைக்க மாட்டேங்குது. என்னன்னு கேளுங்க" என்று முறையிட்டது பச்சைக்கிளி.
"அணில் குட்டிகளே! இந்த பச்சைக்கிளி சொல்றதுக்கு நீங்க என்ன பதில் சொல்றீங்க?" என்று சிங்கராஜா கர்ஜனைக் குரலில் கேட்டது.
அதற்கு அணில் குட்டிகள் ”சிங்கராஜாவே நாங்கள் வேண்டுமென்றே அந்த மாம்பழங்களைக் கடித்து வீணாக்கவில்லை. ஒரு நாள் ஊருக்குள்ள தலைக்காட்டும் போது, 'டேய்! இந்த மாம்பழம் நல்லா ருசியா இருக்குடா! ஆனா ஒரு பக்கம் கடிச்சு இருக்கே! என்றான்' ஒரு சிறுவன்.
அதற்கு மற்றொரு சிறுவன்!, 'டேய் அந்த மாம்பழம் அணில் கடிச்சதா இருக்கும்டா.. ஆதனாலதான் அவ்வளவு ருசி. எங்கம்மா எனக்கு சொல்லி இருக்காங்க' என்றான்.
ஒவ்வொரு பழமா கடிச்சு கடிச்சு வைச்சா இந்த மாம்பழம் எல்லாம் ருசியா இருக்கும்ன்னு சிறுவர்கள் ஆசையா சாப்பிடுவாங்க. அதனாலதான் இப்படி செய்யறேன்” என்று தமது தரப்பு வாதமாக இரண்டு அணில் குட்டிகளும் எடுத்து வைத்தன.
அதைக் கேட்ட சிங்கராஜா, ”ஆமாம்! நீங்க சொல்றதும் நிசம்தான். நானும் கேள்விப்பட்டிருக்கிறேன்” என்று அணில் குட்டிகளுக்கு ஆதரவாய் பேசியது.
”கிளியே..! உனக்கு பறக்க முடியும் எவ்வளவு தொலைவுன்னாலும் பறந்து போகலாம். மரத்துல இருக்கிற மாம்பழத்தைச் சாப்பிடலாம். ஆனா இந்த சின்ன அணில் எல்லா மரத்து மேலேயேயும் தாவி தாவி ஏற முடியாதுல்ல! ஆதனால இந்த சின்ன அணில் இருக்குற மரத்தை விட்டுட்டு வேற மரங்கள்ல இருக்கிற மாம்பழத்தைச் சாப்பிட்டுக்கோ” என்று சிங்கராஜா ஆணையிட்டது.!
”சரி சிங்கராஜா நீ சொல்றபடியே கேட்டுக்கறேன்” என்று கூறியபடியே அருகில் இருந்த மாமரத்தில் இருக்கும் மாம்பழத்தைப் பார்த்து கடிக்க பார்த்தது. அந்த மாம்பழம். ஏற்கனவே கடிக்கப்பட்டிருந்தது.
”சிங்கராஜா! இந்த மரத்துல இருக்கிற மாம்பழமும் கடிச்சுதான் இருக்கு!" என்ற மரத்தில் இருந்தவாறு குரல் கொடுத்தது.
”ஹா ஹா! ஹா" சிரித்தபடியே, அந்த மரத்துல இருக்குற மாம்பழத்தையும் நாங்கதான் கடிச்சு வைச்சோம். அணில் கடிச்ச மாம்பழம் ருசியா இருக்கும்ல... சாப்பிடலாம்ன்னு சொல்லு சிங்கராஜா," என்றது வாண்டு அணில்கள்.
”சரி..! சரி..!" என்று கூறி விட்டு மாம்பழத்தைக் கொத்தி சாப்பிட்டது கிளி. ”அட! அணில் கடித்த மாம்பழம் ருசியாத்தான் இருக்கு" என்றது பச்சைக்கிளி!
”எப்படியோ! சந்தோஷமா இருந்தா சரி” என்று சொல்லி விட்டு தன் குகைக்கு திரும்பியது சிங்கராஜா!