

அந்தச் சிறுவனுக்கு அப்பொழுது வயது ஏழு தான். ஏழை தகப்பனாருக்கு பாரமாக இருக்கக் கூடாது என்று அவன் வீட்டை விட்டு வெளி கிளம்பினான். அவனை தகப்பனார் தடுக்கவில்லை.
"விவியானி நீ பெரிய பையனாக போய்விட்டாய். உன்னை என்னால் காப்பாற்ற முடியவில்லை. ஆகவே உனக்கு எங்கு இஷ்டமோ அங்குபோ! ஆனால், எங்கு சென்றாலும் கடவுளை மறக்காதே! அவர் உன்னை காப்பாற்றுவார்" என்று ஆசீர்வாதம் செய்து அனுப்பினார்.
விவியானி கால் போன போக்கின்படி நடந்து சென்று கடைசியில் ஒரு ஊரை அடைந்தான். அங்கு ஒரு கடையில் வைக்கப்பட்டிருந்த பட விளக்கை கண்டதும், "அது எப்படி இயங்குகிறது" என்று கடைக்காரரை கேட்டான். அவர் அதை விளக்கி சொன்னதும் அதை வாங்கி கிராமங்களில் வேடிக்கை காட்டினால் தன் பிழைப்பு நடக்கும் என்று நினைத்தான்.
தன் நிஜார் பையில் இருந்த காசுகளை எல்லாம் எடுத்து மேஜை மீது வைத்து, "இந்த பட விளக்குக்கு இந்த காசு போதுமா" என்று கேட்டான். அந்த கடைக்காரர் மிகவும் நல்லவர் பையனின் நல்ல குணத்தை கண்டு, "இதுபோல பத்து மடங்கு பணம் கொடுத்தாலும் இந்த பட விளக்குக்கு போதாது. ஆனாலும் நீ நல்ல பையனாக தோன்றுகின்ற படியால், இந்த விளக்கை நான் உனக்கு வாடகைக்கு கொடுக்கிறேன். ஒவ்வொரு சனிக்கிழமையும் என்னை வந்து பார்த்து உனக்கு கிடைக்கும் பணத்தில் ஒரு பகுதியை எனக்கு வாடையாகக் கொடு" என்றார்.
விவியானி கடைக்காரருக்கு நன்றி செலுத்திவிட்டு விளக்கை எடுத்துக் கொண்டு போய் கிராமத்தாருக்கு எல்லாம் காட்ட ஆரம்பித்தான். அதில் சூரியன், சந்திரன், போப் இன்னும் பல பைபிள் சம்பந்தமான படங்கள் இருந்தன. இருந்தும் விவியானிக்கு அவன் எதிர்பார்த்த அளவு பணம் கிடைக்கவில்லை. ஆனாலும் அவன் மனம் தளராமல் அந்த ஜால விளக்கை கொண்டு எப்படியாவது தன் பிழைப்பை நடத்தி தான் தீர்வது என்று விடாமுயற்சியாக இருந்தான்.
ஒருநாள் விவியானிக்கு ஒரு காசும் கிடைக்கவில்லை. என்ன செய்வது என்று அவன் மனம் உடைந்து இருக்கையில், யாரோ ஒருவர் தெருவில் போவதை பார்த்தான். விவியானி அவர் பின்னால் ஓடினான். "ஐயா.. என் பட விளக்கில் சூரியனைப் பாருங்கள். நீங்கள் பார்த்தால் எனக்கு இன்று சாப்பாடு கிடைக்கும்" என்று சொன்னான்.
பையனின் விடாமுயற்சியையும் நேர்மையான நடத்தையையும் கண்டு வியந்த அந்த மனிதர் அவனை தன் வீட்டிற்கு அழைத்துச் சென்று அவனை வளர்க்க ஆரம்பித்தார். அப்படி அவனை வளர்த்தவர் வேறு யாரும் இல்லை புகழ்பெற்ற வானியல் நிபுணரான கலிலியோ தான். விவியானி பிற்காலத்தில் சிறந்த கணித நிபுணராக ஆனார்.
குட்டீஸ்களா பார்த்தீர்களா விடாமுயற்சி இருந்தால் எதிலும் வெற்றி பெறலாம் என்பதை இந்த சம்பவங்கள் உங்களுக்கு உணர்த்துகிறது அல்லவா!