சிறுவர் கதை: ஹரிக்கு சிலந்தி கற்றுக் கொடுத்த பாடம்!

தோல்வியில் இருந்து மீண்டு வருவது எப்படி? மற்றும் வாழ்க்கையில் நல்ல நண்பர்கள் ஏன் வேண்டும் என உணர்த்திடும் கதை
சிறுவர் கதை | A boy is looking at a spider web.
சிறுவர் கதை | A boy is looking at a spider web.AI Image
Updated on

ஹரி படிப்பில் ரொம்ப சுட்டியாகத் தான் இருந்தான். இவனுடைய திறமையைக் கண்டு மற்ற மாணவர்களும் இவனிடம் நன்றாக பழகி வந்தனர். பாடங்களில் ஏதேனும் சந்தேகம் ஏற்பட்டால் ஆசிரியர்களிடம் கூடப் போகாமல் இவனிடம் தான் ஓடி வருவார்கள். இதனால் அவனுக்கு ஒரே குஷி. அவனுடைய பெற்றோர்களும் அவனை நினைத்துப் பெருமைப்படாத நாளே கிடையாது.

ஆனால், சமீப காலமாக அவனுக்கு அமைந்த நண்பர்கள் படிப்பில் அதிகம் ஆர்வம் இல்லாத, ஊரைச் சுற்றித் திரியும் நபர்களாக அமைந்தனர். இதனால் அவனுக்கு படிப்பில் ஆர்வம் குறைந்தது. பள்ளியில் இருந்து வந்ததும் அவர்களுடன் சேர்ந்து கதை பேசவும், ஊர் சுற்றவும் செய்வதால் படிப்பை கோட்டை விட ஆரம்பித்தான்.

படிப்பில் கோட்டை விட்ட ஹரி பரிட்சையில் தேர்வாகாமல் தோல்வியடைந்தான். இவனுடைய திறமையைக் கண்டு முதலில் பழகி வந்த நண்பர்களும் கூட இவனைக் கண்டாலே முகத்தை திருப்பிக் கொண்டு சென்றனர்.

சமீப காலமாக இவனுடன் ஊரைச் சுற்றிக் கொண்டிருந்த நண்பர்களோ இவன் பரீட்சையில் தோல்வி அடைந்ததால் நம்மைக் கண்டு கோபம் கொள்வான் என்று பயந்து விலகிச் சென்றனர். தன்னுடன் யாரும் இலலாமல் தன்னைத் தனிமையில் தவிக்க விட்ட நண்பர்களை எண்ணி வருத்தம் அடைந்தவன் தன்னுடைய அறைக்குள் சென்று கதவை தாழிட்டுக் கொண்டு சிந்திக்கலானான்.

மன வருத்தத்தால் சோர்வடைந்த அவன் நம்பிக்கை இழந்தான். துணிவை இழந்தவன் இனி வாழ்வதில் ஒரு பயனும் இல்லை என்று எண்ணத் தொடங்கினான். தன்னுடன் நெருங்கிப் பழகிய நண்பர்கள் கூட, இப்பொழுது தான் சரியாக படிக்காததால் தன்னுடன் பேசக்கூட மாட்டேன் என்கிறார்கள் என்பதை எண்ணி மிகவும் மனம் வருந்தினான்.

தனக்கு நல்ல நண்பர்கள் ஒருவர் கூட இல்லாமல் போய்விட்டதே, தன்னிடம் படிப்பில் சந்தேகம் கேட்டவர்கள் கூட தன்னைப் பார்த்தாலும் பார்க்காதது போல் பேசாமல் சென்று விடுகின்றனரே இனி என்ன செய்வது என்று மனம் கலங்கி கட்டிலில் படுத்துக்கொண்டு மோட்டுவளையைப் பார்த்துக் கொண்டிருந்தான்.

அப்போதுதான், அந்த அதிசயம் நடந்தது. அந்த அறையின் மூலையின் மேல் இடத்தில் ஒரு சிலந்தியின் செயல் அவன் கவனத்தை ஈர்த்தது. அந்த சிலந்தி ஒரு வலையை பின்னுவதற்காக கடுமையாக முயற்சி செய்து கொண்டிருந்தது.

சிறுவர் கதை | A student is looking at a spider web.
சிறுவர் கதை | A student is looking at a spider web.AI Image

சுவரின் மீது ஊர்ந்து ஏறிச் செல்லும் போது வலையினில் பின்னிய நூல் அறுந்து சிலந்தி கீழே விழுவதைக் கண்டான். இவ்வாறு பலமுறை நடந்தது. ஆனால் அந்த சிலந்தியோ அதைப்பற்றி சிறிதும் கவலைப்படாமல் தன் முயற்சியைக் கைவிடாமல் மீண்டும் மீண்டும் முயற்சித்து வலையைப் பின்னியது. உடனே ஹரிக்கு மனதில் சிறு பொறி தட்டியது.

இதையும் படியுங்கள்:
சிறுவர் சிறுகதை: மிட்டாய் தாத்தா..!
சிறுவர் கதை | A boy is looking at a spider web.

இந்த சிறு சிலந்தியே பலமுறை தோல்வி அடைந்தும் தன் முயற்சியைக் கைவிடாமல் தொடர்ந்து முயன்று வெற்றி காணும் பொழுது ஒரே ஒரு முறை தோற்ற, தான் ஏன் துவண்டு போக வேண்டும்? என்று எண்ணி அறையை விட்டு வெளியே வந்தான்.

நேராக தன் அம்மாவிடம் சென்று, "கவலைப்படாதீர்கள் அம்மா. இந்த முறை நான் நன்கு படித்து பரிட்சையில் தேர்வாகி, பழையபடி நல்ல நண்பர்களை பெற முயற்சி செய்வேன். இது நடக்கும்" என்று கூற, அவன் அம்மாவோ, "எனக்கு உன் மீது முழு நம்பிக்கை உள்ளது வாழ்த்துக்கள்!" என்று கூற வேகமாக வந்து அம்மாவைக் கட்டி அணைத்தான் ஹரி. அம்மாவும் மகனை ஆறுதலாக தட்டிக் கொடுத்தார்.

இதையும் படியுங்கள்:
சிறுவர் சிறுகதை: மஞ்சு - பஞ்சு - அஞ்சு!
சிறுவர் கதை | A boy is looking at a spider web.

நீதி:

இதிலிருந்து என்ன கற்றுக் கொண்டீர்கள் குட்டீஸ்? நல்ல நண்பர்கள் வேண்டும் என்றும், முயன்றால் முடியாதது எதுவும் இல்லை என்பதையும் தானே! நீங்களும் நன்றாகப் படித்து நல்ல நண்பர்களை பெற்று வாழ வாழ்த்துக்கள்!

logo
Kalki Online
kalkionline.com