

அன்று காலை சிட் அவுட்டில் உட்கார்ந்து பேப்பர் படித்துக்கொண்டிருந்தார் அனந்த பத்மநாபன். திடீரென்று அவர் வளர்க்கும் பூனை பூமா ஒரு அணில் குஞ்சை வாயில் கவ்விக்கொண்டு வந்து, அதை அவர் முன்னே போட்டது. ஒரு மாதிரி அவரைப் பார்த்து அடி தொண்டையில் கத்திவிட்டு நகர்ந்தது.
பிறந்து ஒரு வாரமோ இரண்டு வாரமோதான் ஆகியிருக்க வேண்டும். முதுகில் அப்போதுதான் லேசாக கோதண்ட ராமர் போட்ட கோடுகள் தெரியத் துவங்கியிருந்தது. கண்கள் மூடியிருந்தன. கையில் எடுக்கையில் ஒருவித அசைவும் இல்லை. ஆனால், உடல் வெதுவெதுப்பாகத்தான் இருந்தது. சிறிது தண்ணீர் தெளித்தவுடன், அசைந்து கண்ணை மெல்ல திறந்தது அணில் குட்டி.
அமேசான் அட்டைப்பெட்டி ஒன்றை எடுத்து, அதில் ஒரு துணியைப் போட்டு படுக்கவைத்தார் அணில் குஞ்சை அனந்த பத்மநாபன். இங்க்பில்லர் வைத்து இரண்டே சொட்டுகள் பால் விட்டதுதான்... துவண்டிருந்த குஞ்சு சிலிர்த்து வாலை நிமிர்த்தியது. அந்த கணமே ஒரு நட்பு பிறந்தது.
என்ன பேரு வைக்கலாம்...? எப்படி அழைக்கலாம்...? சின்னச்சின்னக் கண்ணைக் காட்டி சிலிர்க்கும் இந்த அணில் குஞ்சுவுக்கு என்ற பழைய தமிழ் சினிமா பாட்டைச் சிறிது மாற்றி பாடிக் கேட்டாள் அவர் மனைவி.. மஞ்சு என்று வைப்போம். மஞ்சு தி அணில் குஞ்சு பதில் வந்தது அவர் மகனிடமிருந்து. ஒரு சிறிய வாழைப் பழத் துண்டு, ஒரு ஸ்பூன் பால். வளர்ந்தாள் மஞ்சு மடமடன்னு.
ஒரு மாதம் கடந்திருக்கும். ஒரு நாள் பத்மநாபன் மடியை விட்டு இறங்கி ஜன்னலைத் தொட்டு நின்ற மாமரக் கிளைக்கு தாவினாள் மஞ்சு. பரந்த உலகம் அவளைப் பரவசப்படுத்திவிட்டது. அங்கும் இங்கும் ஓடி வாலை செங்குத்தாக நிமிர்த்தி ‘கீ... கீ...’ என்று கத்தினாள்.
முதலில் மாமரத்தில் மட்டும் உலவிய மஞ்சு பக்கத்து தூங்கு மூஞ்சிமரத்துக்கு தாவினாள். அதற்கு பிறகு அவளைப் பிடிக்க முடியவில்லை. ஒரு நாளைக்கு ஒரு முறைதான் வருவா... தருவதைக் கொஞ்சம் கொறிப்பா. பின்பு பறப்பா. இப்படியே போனது சில நாட்கள்.
ஒருநாள் வாயில் தேங்காய் நார் போன்ற பஞ்சினை வைத்தவாறு வீட்டுக்குள் எதையோ தேடுவதுபோல ஓடினாள். புரிந்துவிட்டது அனந்த பத்மநாபன் சாருக்கு.
கூடு கட்ட இடம் தேடுகிறாள் மஞ்சு என்று. ஒரு அட்டைப்பெட்டியைக் கூடுபோல தயார் செய்து பரணில் வைத்தார்.
மறுநாளே மஞ்சுவுடன் வந்து கூட்டைப் பார்த்து ‘ஓகே’ சொன்னான் அதன் துணை பஞ்சு. அனந்த பத்மநாபன் சாருக்குப் புரிந்துவிட்டது... தான் கூடிய சீக்கிரத்தில் தாத்தாவாகப் போகிறார் என்று. அந்தப் பேரக்குழந்தைக்குப் பேரும் ரெடி பண்ணி விட்டார். அதுதான் மஞ்சு, பஞ்சு பேரைச் சொல்லப் பிறக்கப்போகிறதே ஒரு அஞ்சு.
என்ன குட்டீஸ்களா, கதை உங்களுக்குப் பிடித்திருக்கிறதா? இந்த கதையைப் படிப்பதன் மூலம், விலங்குகள் மீது அன்பு செலுத்துவது ஒரு மனிதனின் மனதை எப்படி மாற்றுகிறது என்பதையும், இயற்கையோடு இயைந்த வாழ்வின் அழகையும் இந்த கட்டுரையைப் படிப்பதன் மூலம், விலங்குகள் மீது அன்பு செலுத்துவது ஒரு மனிதனின் மனதை எப்படி மாற்றுகிறது என்பதையும், இயற்கையோடு இயைந்த வாழ்வின் அழகையும் நீங்கள் உணர முடியும்.