

மதுரை தூங்கா நகரம். திருப்பரங்குன்றத்தில் ஒரு டீ கடை. நடத்துபவர் அன்புவின் அப்பா.
+2 ரிசல்ட் வந்தது. அன்பு தேர்ச்சி பெறவில்லை. அப்பாவுக்குச் செமகோபம்.
வீட்டுக்கு வந்ததும் அன்புவை கண்ணு, மூக்கு தெரியாமல் அடித்தார். சமையல் அறையில் இருந்து மத்தை எடுத்து கண்டபடி அடித்தார். அன்பு வலி தாங்காமல் அழுது தவித்தான்.
“ஏன் அப்பா… என்னை அடிக்கிறீங்க…? எனக்கு 18 வயசு ஆகிவிட்டது… !“
அப்பா மீண்டும் அடிக்க வர, “காந்திகூட இரண்டு முறை ஃபெயில் ஆனார்!”
“யாருடா உனக்குச் சொன்னது?”
“எங்க டீச்சர்...”
அப்பாவிற்குச் சந்தேகம் வந்தது. உடனே மொபைலில் கூகுள் செய்து பார்த்தார். அது உண்மைதான். அப்பா பேசாமல் கடைக்குச் சென்றுவிட்டார்.
மறுநாள் அன்பிடம் “அடுத்து பரிட்சை எப்போது…?” என்று கேட்டார்.
அதற்கு அன்பு “அப்பா நான் படிக்கப்போவது இல்லை...”
“அப்புறம்…?” குரலில் கோபம்.
“அப்பா… நீங்கள் வேலை செய்தது போதும். நான் கடையைப் பார்த்துக்கொள்கிறேன். நீங்க எனக்கு ஒரு கிரைண்டர் மற்றும் ஒரு மிக்ஸி வாங்கிக் கொடுங்கள். கூட ரொக்கம் ரூபாய் 5,000 தாருங்கள். நான் முதல் மாதம் ரூபாய் 7000 கொடுக்கிறேன். மாசாமாசம் வீட்டிற்கு மளிகைச் சாமன் வாங்கி தருகிறேன்…”
“என்னடா சொல்றே?”
“உண்மை – உழைப்பு – நேர்மை இருந்தால் போதும். நாம் முன்னேறி விடலாம். எனக்கு 3 மாசம் டைம் கொடுங்க. நான் அதிக லாபம் சம்பாதித்துத் தருகிறேன். அப்படி முடியவில்லை என்றால் நான் மீண்டும் படிக்கிறேன்.”
“சரி… நாளைக்கே உனக்கு கிரைண்டர் மற்றும் மிக்ஸி… அதோட ரூபாய் 7000 தரேன். நான் கடைக்கு வரமாட்டேன். “
முதல் மாதம் 1 லாபம் 1800... இரண்டாம் மாதம் லாபம் 4000... மூன்றாம் மாதம் 3 லாபம் 7000. அன்பு சாதித்துக் காட்டினான்.
இப்போது ஒரு ஸ்நாக்ஸ் மாஸ்டர் மற்றும் ஒரு அம்மாவையும் உதவிக்கு சேர்த்துக்கொண்டான்.
அன்று டீ ஸ்டால் என்ற பெயரை எடுத்துவிட்டு ‘நளபாகம்’ என்று பெயர் வைத்தான். கடைக்கு முன்னே இடம் இருந்தது. சுமார் 7 நாற்காலிகள் வைத்தான். அவன் கடை சீக்கிரமே பிரபலம் ஆனது.
அதற்குக் காரணம் தினமும் அவன் போடும் மெனுதான்.
உளுந்து வடை, பருப்பு வடை, முப்பருப்பு வடை, கீரை வடை, புதினா வடை, உருளைக்கிழங்கு சமோசா, வெங்காய சமோசா வெஜிடபிள் சமோசா...
மாலையில் உருளைக்கிழங்கு பஜ்ஜி, மிளகாய் பஜ்ஜி, வாழைக்காய் பஜ்ஜி, கத்திரிக்காய் பஜ்ஜி, அப்பள பஜ்ஜி, ரொட்டி பஜ்ஜி, கிழங்கு போண்டா, பக்கோடா வெஜிடபிள் போண்டா...
அதைப்போல பழங்கள் வாங்கி ஜுஸ் போட ஆரம்பித்தான். நல்ல வரவேற்பு இருந்தது.
5 வருடங்கள் கழித்து திருப்பரங்குன்றம் அருகே ஆர்.வி.பட்டி என்ற சிற்றூரில் 2 ஏக்கர் நிலம் வாங்கினான்.
அப்பா அம்மாவிற்கு ஆச்சரியம்... ஆனந்தம்...
அன்பு வங்கியில் லோன் வாங்கி ஆர்.வி.பட்டியில் 3 அடுக்கு ஹோட்டல் கட்டினான். சரியாக 10 மாதத்தில் கட்டி முடித்துவிட்டான். ஹோட்டலுக்குப் ‘புதிய நளபாகம்’ என்று பெயர் வைத்தான்.
ஹோட்டல் பிரபலமாகியது. திருப்பரங்குன்றம் வருபவர்கள் புதிய நளபாகம் ஹோட்டலுக்குச் செல்வது வாடிக்கை ஆகிவிட்டது.
இப்போது அன்பு லட்சாதிபதி.
அப்பா கேட்டார்: “அன்பு…அன்பு… எப்படிடா இந்த அளவு முன்னேறிவிட்டாய்…? நம்ப முடியவில்லையே…?”
அதற்கு அன்பு சொன்ன மூன்று விஷயங்கள்தான் முக்கியம்.
“உழைப்பு... உண்மை... நேர்மை இருந்தால் நிச்சயமாக வெற்றியே!”