

ராகவனை அவன் அப்பா பூங்காவுக்கு அழைத்து வந்திருந்தார்.
அது ஒரு அழகிய பூங்கா. வண்ணமலர் பாத்திகளும், சிறு சிறு மரங்களும் எழில் மிகு கொடிகளும் பூங்காவின் வனப்பைக் கூட்டின.
பிள்ளைகள் விளையாட சறுக்கு மரம், ஊஞ்சல் போன்ற விளையாட்டு வசதிகளும், ஓடியாடி விளையாட மணல் பரப்பும் அங்கே இருந்தன.
பெரியவர்கள் நடைப்பயிற்சி செய்யவும், உடற்பயிற்சி செய்யவும் வசதி இருந்தது.
தினமும் இந்த பூங்காவுக்குத் தான் ராகவன் வருவான். இன்றும் அப்படித்தான் வந்து இருந்தான். இன்று நண்பர்கள் யாரும் வரவில்லை. விடுமுறை தினத்தை பெற்றோர்களுடன் வெளியில் சென்று விட்டனர் போலும்.
“நான் நடைப்பயிற்சி முடித்து விட்டு வருகிறேன். நீ ஊஞ்சல், சறுக்கு, ஜங்கிள் ஜிம் என ஏதாவது விளையாடிக் கொண்டு இரு” என்று சொல்லி விட்டு ராகவனின் அப்பா நடக்க ஆரம்பித்து விட்டார்.
ராகவன் ஊஞ்சல் ஆடினான். சறுக்கு மரத்தில் சறுக்கினான். ஜங்கிள் ஜிம் ஏறி இறங்கி குதித்தான். தாகமாக இருந்தது. அருகில் இருந்த மரப்பலகையில் அமர்ந்து கொண்டு வந்திருந்த பாட்டிலில் இருந்து தண்ணீரைக் குடித்தான்.
அப்போது அங்கே இருந்த பூச்செடிகளின் அருகில் பறந்து கொண்டு இருந்த வண்ணத்துப்பூச்சிகள் அவனை மிகவும் கவர்ந்தன.
”எவ்வளவு அழகாக இருக்கின்றன இந்த வண்ணத்துப்பூச்சிகள்! எத்தனை வண்ணங்கள் அதன் மேல்!” வியந்து ரசித்தான் ராகவன்.
லாவகமாக ஒரு வண்ணத்துப்பூச்சியை பிடித்து கையில் வைத்து ரசித்தான்.
சட்டென ஒரு யோசனை தோன்றியது செந்திலுக்கு. காலியாக இருந்த தனது தண்ணீர் பாட்டிலுக்குள் அந்த வண்ணத்துப்பூச்சியைப் போட்டு விட்டான்.
அடுத்தடுத்து மூன்று வண்ணத்துப்பூச்சிகளைப் பிடித்து தன் பாட்டிலுக்குள் அடைத்து விட்டான்.
நடைப்பயிற்சி முடித்து விட்டு வந்தார் செந்திலின் அப்பா.
“ராகவன், என்ன பண்ணிகிட்டு இருக்க? சறுக்கு விளையாடினயா?”
“விளையாடினேன் அப்பா”
“தண்ணி குடிச்சியா?”
“குடிச்சேன்பா”
தனது தண்ணீர் பாட்டிலை மேலும் கீழுமாக ஆட்டி விளையாடிக் கொண்டே பதில் சொன்ன ராகவன் அருகே வந்தார் அப்பா.
“என்ன ராகவன், பாட்டில் உள்ள என்ன?”
“வண்ணத்துப்பூச்சி அப்பா. பாருங்க, பாட்டிலுக்குள்ளயே பறக்க முயற்சிக்குது” ஹா ஹா எனக் களிப்புடன் சிரித்தான் ராகவன்.
“ராகவன், அது பாட்டிலை விட்டு வெளியே வரத் துடிச்சுகிட்டு இருக்கு. சந்தோஷமா பறந்து திரிஞ்சு கிட்ட இருக்குற வண்ணத்துப்பூச்சியை இப்படி நீ அடைச்சு வைக்கறது சரி இல்ல.” என்றார் அப்பா.
“அப்பா, ரெண்டே ரெண்டு பூச்சி தாம்ப்பா. வீட்டுக்குப் போய் அம்மாகிட்ட காட்டி விட்டு திரும்ப திறந்து விட்டு விடுவேன்”
“ராகவன், அம்மாவிடம் இந்த வண்ணத்துப்பூச்சிகளைக் காண்பிக்க வேண்டும் அவ்வளவு தானே! இதோ, எனது கைபேசியில் புகைப்படம் எடுத்துத் தருகிறேன். அதனைக் காண்பிக்கலாம். அடைச்சு வைக்காதே, சுதந்திரமாய் பறக்க விடு”
ராகவன் தனது வாட்டர் பாட்டிலைத் திறந்த உடன், வண்ணத்துப்பூச்சிகள் பறந்தன.
அப்பா, காணொலி மற்றும் புகைப்படம் எடுத்து ராகவனிடம் காண்பித்தார்.
அவன் முகத்தில் புன்னகை.
“ராகவன், நம்மை யாராவது ஓரே இடத்தில் உட்கார வேண்டும் எனக் கட்டாயப்படுத்தினால், நமக்கு எவ்வள்வு கஷ்டமாக இருக்கும்.. அது போலத் தான அந்த வண்ணத்துப்பூச்சிகளும். சுதந்திரமா பறந்துகிட்டு இருந்த பூச்சிகளைப் பிடிச்சு, பாட்டிலுக்குள்ள போடலாமா? அதுங்களுக்கு எவ்வளவு கஷ்டமா இருக்கும்? பிறரையும் உன்னைப் போல நினை. உயிர்களிடத்தில் அன்பு செலுத்து”
அப்பா சொன்ன சொற்களின் பொருள் உணர்ந்து தலையாட்டினான் ராகவன்.