

மணி ஒரு ஆட்டோ டிரைவர். அவரது ஆட்டோ ஸ்டாண்ட் பாரீஸ் கார்னரில் உள்ள அரசு பல் மருத்துவமனைக்கு அருகில். மணி டிகிரி முடித்தவர். வருடங்கள் ஓடின. நிலையான வேலை கிடைத்தபாடில்லை. அப்போது மணியின் மாமா மணிக்கு ஒரு ஆட்டோ வாங்கித் தந்து… “இதை வைத்து நன்றாக வாழ்...” என்று சொன்னார். மணி அவருக்கு நன்றிக்கடன்பட்டவராக நினைத்தான்.
நாள் முழுவதும் ஆட்டோ ஓட்டி, பணம் சம்பாதித்து தனது அம்மாவைக் காப்பாற்றினான். மணிக்கு 6 வயதாகும்போதே அப்பா இறந்துவிட்டார். அம்மாதான் பாரீஸ் கார்னரில் ஒரு இட்லி கடை வைத்து, கடுமையாக உழைத்து, மணியை படிக்க வைத்தார்.
மணியும் முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்றார். ஆனாலும் வேலை கிடைக்க வில்லை. அப்போதுதான் மாமா ஆட்டோ வாங்கிக் கொடுத்தார். நேரம் காலம் பாராமல் ஆட்டோ ஓட்டினார் மணி.
ஒரு நாள் காலை ஆட்டோ சவாரிக்கு ஒரு சேட் வந்தார். சேட் கிண்டியில் உள்ள 5 நட்சத்திர ஹோட்டலுக்குப் போகச் சொன்னார்.
கிண்டி வந்தது. சேட்டை இறக்கிவிட்டு மதிய உணவு சாப்பிட பாரீஸ் கார்னர் வந்தார்.
ஆட்டோவை ஸ்டாண்டில் நிறுத்தி பின்சீட்டைப் பார்த்தார். அங்கே ஒரு கைப்பை இருந்தது. திறந்து பார்த்தார்.
ஆ…! 500 ரூபாய் கட்டு ஒன்று. அதாவது ரூபாய் 50,000 இருந்தது. கூடவே ஒரு விமான டிக்கெட் இருந்தது. பாஸ்போர்ட்டும் இருந்தது.
மணிக்கு என்ன செய்வது என்று தெரியவில்லை.
யோசித்தான். அந்த கைப்பையைத் திறந்து பார்த்தான். அதில் இருந்து பாஸ்போர்ட்டிலிருந்த சேட் முகவரியைப் பார்த்தான்.
பாண்டி பஜார் அருகே உள்ள ஜி.என்.செட்டி ரோடில் இருந்தது.
மணி சாப்பிட்டு விட்டு அவசரமாக பாண்டிபஜாருக்குச் சென்றான்.
சேட் கதவைத் திறந்து பார்த்து,
“யார்… உனக்கு என்ன வேண்டும்…?” என்று கேட்டார்.
“சார்… இன்று காலை கிண்டிக்கு ஆட்டோவில் சென்றீர்கள் அல்லவா…? அந்த ஆட்டோ டிரைவர் நான்தான்… !”
“சரி... நான்தான் உனக்குப் பணம் கொடுத்துவிட்டேனே..?”
“சார்… நான் வந்தது... நீங்கள் உங்கள் கைப்பையை ஆட்டோவில் விட்டு சென்றுவிட்டீர்கள்… ! அதான் வந்தேன்…!”
சேட் பதறிப் போனார். ஆட்டோ டிரைவர் மணி பேசினார்.
“சார் உங்கள் கை பையில் ரூபாய் 50,000 இருந்தது. கூடவே பாஸ்போர்ட், விமான டிக்கெட்டும் இருந்தது.
இந்தாங்க உங்கள் பை,” எனச் சொல்லி சேட்டிடம் கொடுத்தார்.
சேட் பையை திறந்து பார்த்தார். எல்லாம் சரியாக இருந்தது.
சேட்டுக்கு அதிர்ச்சி. பெரு மூச்சு விட்டார். தனது கைப்பை தொலைந்ததைக் கூட அவர் இதுவரை தெரிந்து கொள்ளவில்லை.
“சார் நான் வரட்டுமா…?”
“சரி… உன் பெயர் விலாசம் கொடுத்துவிட்டு போ…!”
“சார் எதற்காக…? போலீஸிடம் கம்ப்ளெயிண்ட் பண்ணப் போறீங்களா?”
“இல்லை.. இல்லை.. நீ எவ்வளவு பெரிய உதவியை செய்து இருக்கிறாய்…!”
மணி சேட் கொடுத்த நோட்டில் பெயர், விலாசம் எழுதி கொடுத்துவிட்டு கிளம்பினான்.
ஒரு வாரம் கழித்து சேட் ஒரு புதிய ஏ.சி. காரில் மணி வீட்டிற்கு வந்தார். அவர் மணியிடம்… “உன்னைப்போல நேர்மையானவர்களைப் பார்ப்பது கஷ்டம். நீ எனக்கு செய்த உதவிக்காக உனக்கு ஒரு பரிசு. வாசலில் ஏ.சி. கார் இருக்கிறது. நீ ஆட்டோவை விற்பனை செய்து, டாக்ஸி ஓட்டு... இந்தா கார் சாவி..!” என்று அசத்தினார்.
நேர்மைக்கு கிடைத்த பரிசு…!