
ஒரு பெரிய காட்டில் முயல் கூட்டம் ஒன்று வாழ்ந்து வந்தது. அங்கே, பச்சை பசேல் என இருந்த காட்டில் கிடைத்த உணவுகளை உண்டு அவை சந்தோஷமாக வாழ்ந்தன.
அங்கு அவைகளுக்குச் சாப்பிடச் சுலபமாக உணவு தினமும் கிடைத்துக்கொண்டிருந்தது. திடீரெனக் கோடைக்காலம் வந்தது. கோடைக்கால வெப்பம் அதிகமாக இருந்ததால், அங்கே பச்சை பசேல் என இருந்த புற்கள் எல்லாம் கருகி, பாலைவனம் போல் தோற்றமளித்தன.
உணவு எதுவும் கிடைக்காமல் முயல்கள் மிகவும் அவதிப்பட்டன. அங்கே வேட்டை நாய்கள், முயல்களை வேட்டையாடப் பதுங்கிக் காத்திருந்தன.
வேட்டை நாய்களைக் கண்ட முயல்கள் பொந்துக்குள் ஒளிந்துகொண்டு வெளியே வர முடியாமல், உணவு இல்லாமல் மிகவும் கஷ்டப்பட்டன.
"எவ்வளவு நாள்தான் இப்படியே பொந்துக்குள் ஒளிந்திருப்பது? நாம் ஏதாவது செய்ய வேண்டும்," என்று எல்லா முயல்களும் கூடிப் பேசிக்கொண்டிருந்தன.
அப்போது ஒரு முயல் சொன்னது, "கடவுள் நம்மை பலவீனமாகப் படைத்துவிட்டார். எல்லா விலங்குகளும் ஏதாவது பிரச்சனை வந்தால் தங்களைக் காப்பாற்றிக்கொள்ளும் அளவிற்குப் பலம் உடையதாக இருக்கின்றன. ஆனால், நாம் என்ன ஒரு பிரச்சினை வந்தாலும் நம்மைக் காப்பாற்றிக்கொள்ள முடியாமல் பலவீனமாக இருக்கிறோம். கடவுள் ஏன் நம்மை இப்படிப் படைத்துவிட்டார்?" என்று குறை கூறிக் கொண்டே இருந்தது.
மற்றொரு முயல், "என்னால் இதற்கு மேல் பொறுத்துக்கொள்ள முடியாது. பசியினாலும் இந்த வேட்டை நாய்களைப் பார்த்தும் பயந்து ஒதுங்கி வாழ்வதைவிடச் சாவதே மேல். ஏதாவது ஒரு நதியில் சென்று விழுந்துவிடுகிறேன்," என்று சொன்னது.
மற்றொரு முயல், "நாம் அனைவரும் எது செய்தாலும் ஒன்றாகச் செய்ய வேண்டும். வாழ்ந்தால் ஒன்றாக வாழ்வோம்; இல்லையென்றால் எல்லோரும் சேர்ந்து நதியில் விழுந்துவிடுவோம்," என்றது. அனைத்தும் நதியை நோக்கிப் புறப்பட்டுச் சென்றன.
முயல்கள் எல்லாம் ஒரு நதிக்கரையை அடைந்தன. அங்கே சில தவளைகள் இருந்தன. அந்தத் தவளைகள் எல்லாம் முயல்களைப் பார்த்துப் பயத்தில் ஒன்றுபின் ஒன்றாக நதியில் குதித்தன.
இதைப் பார்த்த முயல்கூட்டம் ஆச்சரியமாகப் பார்த்தது. "இந்தத் தவளைகள் நம்மைப் பார்த்துப் பயந்து நீருக்குள் குதிக்கின்றன. நாம், நாம் தான் இந்த உலகத்திலேயே பலவீனமானவர்கள் என்று எண்ணினோம். நாம் தான் அனைவரையும் பார்த்து அஞ்சுகிறோம் எனப் பேசினோம். ஆனால், நம்மையும் பார்த்து சில அஞ்சுகின்றனவே.
இந்தத் தவளைகளுக்கு நம்மைப் பார்த்தால் பயமாக இருக்கிறது போல," என்று தங்களுக்குள் பேசிக்கொண்டன. அப்போது ஒரு முயல் சொன்னது,
"நாம் இந்தப் பிரச்னையிலிருந்து தப்பித்துக்கொள்ளவும், நம்மைப் பாதுகாத்துக்கொள்ளவும் நிச்சயமாக ஏதாவது ஒரு வழி இருக்கும். நாம் அந்த வழி என்ன என்று கண்டுபிடிப்போம். இந்த நதியில் விழுந்து நம் வாழ்வை முடித்துக்கொள்வதைவிட என்ன பிரச்னை வந்தாலும் எதிர்கொள்வது மேல்," என்று கூறிக்கொண்டு உணவு தேடி வேறு இடத்திற்குப் புறப்பட்டுச் சென்றன.
குட்டீஸ்..... தெரிந்துகொண்டீர்களா? வாழ்க்கையில் என்ன பிரச்னை வந்தாலும் அதைத் தைரியமாக எதிர்கொள்ள வேண்டும். எந்தத் தவறான முடிவும் எடுக்கக் கூடாது எனப் புரிந்ததா?