

புதுவருஷப் பரிசாகப் புது வண்டி வாங்கினான் புவனேஷ்வரன். விநாயகர் கோயிலுக்கு அவனை அழைத்துச் சென்ற அவனது அப்பா, அங்கிருந்த பிள்ளையாருக்கு ‘விடலை’ (தேங்காய் சிதறு காய்) போடும்படி சொன்னார்.
கடைக்குப் போய், “ஐயா, ஒரு தேங்காய் கொடுங்கள்... என்ன விலை?!” என்று கேட்டான் புவனேஷ்வரன்.
கடைக்காரர், “பொறு தம்பி! எடை போட்டுப் பார்த்துவிட்டு விலை சொல்கிறேன்,” என்று கூறிவிட்டு, தராசில் எடை போட்டார். “கிலோ அறுபது ரூபாய் தம்பி. விடலை போடத்தானே? இதோ நல்ல முற்றிய காயாகத் தருகிறேன்.
இந்த ஒரு காய் அறுபது ரூபாய் கொடு! எடை கொஞ்சம் அதிகமாகத்தான் இருக்கிறது, இருந்தாலும் நீ சாமிக்கு என்று கேட்கிறாய்... அதான் விலையைக் குறைத்துத் தருகிறேன்!” என்றார்.
தேங்காயை வாங்கிக்கொண்ட புவனேஷ்வரன், “எதுக்குப்பா விநாயகருக்கு விடலை போடுகிறோம்? சும்மா கும்பிட்டாலே போதாதா? இதற்குப் பின்னால் ஏதேனும் காரணம் இருக்கிறதா?” என்று கேட்டான்.
“இருக்கிறதுப்பா!” என்று விளக்கத் தொடங்கினார் அப்பா.
“மராந்தகன், தேவாந்தகன் என இரு அரக்கர்கள் அக்காலத்தில் மக்களுக்கு அதிகத் தொல்லை கொடுத்து வந்தனர். அவர்களை விநாயகப் பெருமான், மக்களின் விருப்பத்திற்கு இணங்க, கும்பத்திலிருந்த தேங்காய்களை எடுத்து வீசியெறிந்து அழித்தார். அதனை நினைவுபடுத்தும் விதமாகத்தான், நமக்குத் துன்பம் கொடுக்கும் தீய சக்திகளை விநாயகர் அழித்தது போலவே, நம் வினைகளை அழிக்கும் பொறுப்பை அவரிடமே ஒப்படைத்து, விடலை போட்டு வினைகளிலிருந்து விடுதலை பெறுகிறோம்,” என்றார் அப்பா.
புவனேஷ்வரன் வியப்புடன், “அப்பா... அந்தக்காலத்துப் பெரியவர்களின் ஒவ்வொரு செயலுக்கும் ஒரு காரணம் இருந்திருக்கிறது இல்லையா?! இதெல்லாம் உங்களுக்கு எப்படிப்பா தெரிந்திருக்கிறது?” என்று கேட்டான்.
“புவனேஷ்... நல்ல கேள்வி கேட்டாய்! நிறைய பக்திப் புத்தகங்கள் படிக்க வேண்டும்; பெரியவர்கள் சொல்வதைக் கேட்டு நடக்க வேண்டும்!” என்று அப்பா அறிவுரை கூறினார்.
“சரிப்பா... கண்டிப்பாக நான் அப்படியே கேட்டு நடக்கிறேன். எனக்கு இது போன்ற நிறைய பக்திக் கதைகளைச் சொல்லுங்கள் அப்பா! நானும் அவற்றை என் நண்பர்களோடு பகிர்ந்து கொள்கிறேன்!” என்றான் புவனேஷ்வரன் மகிழ்ச்சியாக.